ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பன்றிகளுடன் மீன்களை வளர்ப்பது சிறந்த முறையாகும். மீன் குளத்துக்கு அருகில் பன்றிகளை வளர்க்கலாம். குளக்கரையில் அல்லது குளத்து நீர்ப்பகுதிக்கு மேலே கொட்டிலை அமைத்தால், பன்றிக் கழிவு குளத்தில் விழுந்து உரமாகும்.
பண்ணையில் உள்ள கால்நடைகள் குடிக்க, கொட்டிலைச் சுத்தம் செய்ய, குளத்து நீரைப் பயன்படுத்தலாம். பன்றிக் கழிவு உரச்சத்து மிகுந்தது. பன்றிச் சாணத்தில், 0.5-0.8 சதம் தழைச்சத்து, 0.45-0.6 சதம் மணிச்சத்து, 0.35-0.5 சதம் சாம்பல் சத்து ஆகியன உள்ளன.
சிறுநீரில், 0.3-0.5 சதம் தழைச்சத்து, 0.07 சதம் மணிச்சத்து, 0.20-0.70 சதம் சாம்பல் சத்து, 2.5 சதம் அங்ககப் பொருள்கள் ஆகியன உள்ளன. ஒரு எக்டர் குளத்தில், 30 பன்றிகள் வரையில் வளர்க்கலாம். இதன் மூலம், 6 டன் மீன்கள், 4.2 டன் பன்றி இறைச்சிக் கிடைக்கும். ஒரு பன்றிக்கு, 1.5-3.0 சதுர மீட்டர் இடவசதி அளிக்க வேண்டும்.
குளக்கரையில் 1.5 மீட்டர் உயரத்தில் சுற்றுச் சுவரை எழுப்பி, பன்றிக் கொட்டிலைச் சாய்தளமாக அமைத்து, இக்கழிவை நேரடியாகக் குளத்தில் விழச் செய்யலாம். அல்லது ஓரிடத்தில் தேக்கி வைத்து மெதுவாகக் குளத்தில் விடலாம். பன்றிக்கழிவு மீன்களுக்கு உணவாகும். அதனால் மீனுற்பத்திச் செலவு குறைந்து வருவாய் கூடும். இது, எளிய பராமரிப்பு முறைகளைக் கொண்டதாகும்.

முனைவர் க.தேவகி, உதவிப் பேராசிரியை, வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



