My page - topic 1, topic 2, topic 3

பத்து யோசனை: பத்து டன் மகசூல்!

பத்து யோசனை: பத்து டன் மகசூல்!

நெல், தமிழகத்தின் மிக முக்கிய உணவுப் பயிராகும். ஆயினும் ஆண்டுக்கு ஆண்டு நெல் சாகுபடிப் பரப்புக் குறைந்து கொண்டே வருகிறது.

விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் சூழலில், நெல் மகசூலைப் பெருக்கும் கட்டாயத்தில் உள்ளோம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

ஒரு எக்டர் நிலத்தில் பத்து டன் மகசூலைப் பெற்றால் மட்டுமே நம்மால், உணவுத் தேவையை நிறைவு செய்ய முடியும்.

பத்து டன் மகசூல் என்பது விவசாயிகளால் அடையக் கூடிய இலக்கு தான். இதை எட்டும் போது நம் நாடானது, உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதுடன்,

நெல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் இலாபமிக்கதாக இருக்கும். அந்த இலக்கை அடைய இதோ சில யோசனைகள்.

பருவத்தில் பயிர் செய்தல்

தமிழகத்தில் ஆண்டு முழுவதும் நெல்லைப் பயிரிட்டு வந்தாலும், அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற வகையில் சரியான பருவத்தில் பயிரிடுவது முக்கியம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பட்டம் தப்பினால் நட்டம் என்பார்கள். எனவே, பருவத்தில் பயிர் செய்வது மிகவும் அவசியம்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு என எட்டுப் பருவங்கள் உள்ளன. அவையாவன: நவரை (டிசம்பர் ஜனவரி), சொர்ணவாரி (ஏப்ரல் மே), முன்கார் (ஏப்ரல் மே), கார் (மே ஜூன்), குறுவை (ஜூன் ஜூலை),

சம்பா (ஆகஸ்ட்), பின் சம்பா அல்லது தாளடி (செப்டம்பர் அக்டோபர்), பிசானம் (செப்டம்பர் அக்டோபர்).

இந்தப் பருவங்களில் சரியாகப் பயிரிட்டால், பயிரின் வளர்ச்சி நன்றாக இருப்பதுடன், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் இல்லாமல் அதிக மகசூலையும் தரும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

சரியான இரகத்தேர்வு

தமிழகத்தில் இன்றளவில் 300 க்கும் மேற்பட்ட இரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

இந்த இரகங்களை, அவற்றின் வயதின் அடிப்படையில், 120 நாட்களில் விளையும் குறுகிய கால இரகங்கள்,

120-135 நாட்கள் வயதுள்ள மத்திய கால இரகங்கள், 135 நாட்களுக்கு மேல் வயதுள்ள நீண்டகால இரகங்கள் என, மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

இவற்றில், நீண்டகால இரகங்களை, சம்பாப் பருவத்தில் மட்டுமே பயிரிட வேண்டும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மத்திய கால இரகங்களை, சம்பா, பின் சம்பா அல்லது தாளடி, பிசானம் ஆகிய பருவங்களில் பயிரிடலாம். மற்ற பருவங்களில், குறுகிய கால இரகங்களைப் பயிரிடலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உரிய இரகங்கள் என, பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயிரிட வேண்டும்.

தரமான விதைகள்

சான்று பெற்ற தரமான விதைகளைப் பயிரிடுவது நல்ல பலனைத் தரும். விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல்லை, விதைக்க நினைத்தால், நன்கு தரம் பிரித்துப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு கிலோ உப்பைப் பத்து லிட்டர் நீரில் கலந்து கரைசல் தயாரிக்க வேண்டும்.

அந்தக் கரைசலில், விதை நெல்லைப் போட வேண்டும். அப்போது, கரைசலில் மிதக்கும் பதர் அல்லது சாவி நெல்லை நீக்கி விட்டு, நீரில் மூழ்கிய நெல் மணிகளைச் சேகரித்து விதைத்தால் நன்கு முளைக்கும்.

பசுந்தாள் உரங்கள்

நல்ல வளமான மண்ணால் தான் தரமான பயிரை உருவாக்க முடியும். மண் வளமாக இருக்க, இயற்கை உரங்களை இட வேண்டும்.

பசுந்தாள் உரங்களான தக்கைப் பூண்டு, சணப்பை, மணிலா அகத்தி போன்ற விதைகளை, எக்டருக்கு 40 கிலோ வீதம் விதைத்து, 40 நாட்களுக்குப் பிறகு, பூக்கும் நிலையில் மடக்கி உழுதால் மண்வளம் அதிகரிக்கும்.

ஒவ்வொரு முறையும் நெல்லைப் பயிரிடும் போது, பசுந்தாள் உரங்களை இட்டால் மண்வளம் கூடுவதுடன், செயற்கை உரங்களின் தேவை குறையும்; பூச்சி, நோய்த் தாக்குதல் மட்டுப்பட்டு மகசூலும் வருவாயும் கூடும்.

தரமான நாற்றுகள்

விளையும் பயிர் முளையிலே தெரியும். தரமான நாற்றுகளால் மட்டுமே நல்ல விளைச்சலைத் தரும் நெற்பயிர்களை உருவாக்க முடியும்.

எனவே, நாற்றங்கால் தயாரிப்பை முக்கியமாகக் கருதி, எக்டருக்கு 20 சென்ட் நிலத்தில் நாற்றங்காலை அமைக்க வேண்டும்.

பாய் நாற்றங்காலைத் தயாரிப்பதாக இருந்தால், சுமார் இரண்டரை சென்ட் பரப்பில் அமைக்க வேண்டும்.

விதைக்கு விதை ஒட்டாமல் சீராக விதைக்கும் போது, நாற்றுகள் போட்டி இல்லாமல் வளர்ந்து உருண்டு திரண்டு வளரும்.

இளம் நாற்றுகளை மேலாக நடுதல்

நாற்று நடவு என்பது ஒரு கலை. 15 நாட்களுக்கும் குறைவான வயதுள்ள நாற்றுகளை, ஒரு குத்துக்கு 1-2 வீதம் நடுவது, நல்ல மகசூலைத் தரும்.

மேலும், நாற்றுகள் சாய்ந்து விடாத அளவில் சேற்றில் மேலாக நட வேண்டும். அதிக ஆழத்தில் நட்டால், அவற்றில் கிளைப்புகள் உருவாவது குறையும்.

பல நாற்றுகளைக் குத்துக் குத்தாக நடும் போது, நாற்றுகளுக்கு இடையே போட்டி உருவாகி, கிளைப்புகள் வருவது பாதிக்கப்படும். எனவே, 1-2 இள நாற்றுகளை மேலாக நட வேண்டும்.

ஒருங்கிணைந்த களை நிர்வாகம்

சமதளமான வயலில் நெல்லை நடுவது களைகளைக் கட்டுப்படுத்தும். லேசர் மட்டப் பலகை அல்லது டிராக்டரால் இயங்கும் மட்டப் பலகையைக் கொண்டு வயலைச் சமப்படுத்த வேண்டும்.

வயல் மேடு பள்ளமாக இருந்தால், மேடான பகுதிகளில் களைகள் ஆதிக்கம் செலுத்தும்; பள்ளமான பகுதிகளில் நாற்றுகள் அழுகிப் போகும்.

நடவு செய்த மூன்றாம் நாள், களைகள் முளைக்கு முன், பூட்டாகுளோர் அல்லது பிரிட்டில்லாக் குளோர் களைக் கொல்லியை மணலில் கலந்து விதைக்க வேண்டும்.

இல்லையெனில், இளம் களைகளைக் கட்டுப்படுத்த, பிஸ்பைரிபேக் சோடியம் என்னும் களைக் கொல்லியை, நட்ட 15 ஆம் நாளில் களைகளின் மீது தெளிக்கலாம்.

நட்ட 45 நாட்கள் வரை, நெல் வயலில் களைகள் இல்லாமல் இருத்தல் நல்ல மகசூலைத் தரும்.

சத்து மேலாண்மை

விதைப்பதற்கு முன், விதைகளை 1.2 கிலோ அசோபாசைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

முடிந்த வரை, மட்கிய எரு, பசுந்தாள் உரங்களை நடவுக்கு முன் இட வேண்டும்.

தழை மற்றும் சாம்பல் சத்தை நான்கு முறை, அதாவது, நடவுக்கு முன், தூர் கட்டும் பருவம், புடைப்பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.

இலை வண்ண அட்டை மூலம் அறிந்து, தேவைக்கு மட்டும் தழைச்சத்தை இடுவதால், தழைச்சத்தின் அளவும், பூச்சி, நோய்களின் தாக்கமும் குறையும்.

நீர் நிர்வாகம்

நெல், நீர்த் தேங்கும் இடங்களில் வளரும் பயிர் தான் எனினும், நீரினுள் வளரும் பயிரல்ல. நெற்பயிரைப் பொறுத்த வரை, எப்போதும் ஈரப்பதம் இருக்க வேண்டும்.

எனவே, அதற்குத் தகுந்தபடி நீரை, சுமார் 2.5 செ.மீ. உயரத்துக்குப் பாய்ச்ச வேண்டும்.

அந்த நீர் மறைந்த பிறகு மீண்டும் நீரைப் பாய்ச்சுவது நல்ல பலனைத் தரும்.

எக்காரணம் கொண்டும், பூக்கும் பருவத்துக்கு முன்பு, தொடர்ந்து நீரைத் தேக்கி வைக்கக் கூடாது.

பூச்சி, நோய் நிர்வாகம்

நெற்பயிரை, பூச்சி, நோய்களில் இருந்து காப்பது மிகவும் அவசியம். பூச்சி, நோய்களின் அறிகுறிகள் தெரியாத போது, மருந்துகளைத் தெளிக்கக் கூடாது.

மேலும், பரிந்துரை அளவுக்கு மேல் மருந்தைத் தெளிப்பது, தேவையின்றிப் பல மருந்துகளைத் தெளிப்பது, தவிர்க்கப்பட வேண்டும்.

இதுவரையில் கூறியுள்ள பத்து யோசனைகளை விவசாயிகள் கையாண்டால், ஒரு எக்டர் நிலத்தில் பத்து டன் மகசூலைப் பெறுவது சாத்தியமாகும்.

மேலும், தேவையில்லாச் செலவும் குறைவதால், நெல் விவசாயிகள் அதிக இலாபம் பெற முடியும்.


PB_DR.N.DHAVA PRAKASH

              முனைவர் ந.தவப்பிரகாஷ், முனைவர் கு.கவிதா, முனைவர் ரா.பிரேமாவதி, முனைவர் க.ரெ.சுதா, வேளாண்மை அறிவியல் நிலையம், திருப்பதிசாரம்,

கன்னியாகுமரி -629901


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • பயிர்ப் பாதுகாப்பில் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள்!

  • ஊடுபயிர்களைத் தேர்வு செய்வது எப்படி?

  • வறட்சியிலும் வளம் கொழிக்கும் நாவல்!

  • நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்!

  • மீன் கழிவை உரமாக மாற்றுவது எப்படி?

  • தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

  • மணத்தக்காளி சாகுபடி!

  • களர் உவர் நிலத்தை விளைநிலமாக மாற்றுவது எப்படி?

  • பால் உற்பத்தியில் பசுந்தீவனத்தின் அவசியம்!