வெளியான இதழ்: ஜனவரி 2020
பப்பாளியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா. பப்பாளிப் பழம் நம் உடலுக்குப் பலவகைகளில் நன்மை செய்கிறது. உலகளவிலான பப்பாளிப் பழ உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இருப்பினும், பலவகையான நோய்கள் பப்பாளியைத் தாக்கிச் சேதத்தை உண்டாக்கி வருகின்றன. அவற்றுள் முக்கியமானது இலைக்கருகல் நோய்.
அறிகுறிகள்
இந்நோய், புகையிலை இலைச்சுருள் நச்சுயிரியால் உண்டாகிறது. இதனால் தாக்கப்பட்ட செடிகள் வளர்ச்சிக் குன்றியிருக்கும். இலைகள் தடிப்பாகவும், உள்நோக்கிச் சுருண்டும் இருக்கும். இலைக்காம்புகளும் சுருண்டிருக்கும். இத்தகைய செடிகள் காய்ப்பதில்லை. நோய் தீவிரமானால் செடிகள் இறந்து விடும். இது வெள்ளை ஈக்களால் பரவுகிறது.
கட்டுப்படுத்துதல்
நோயுற்ற செடிகளை உடனே பிடுங்கி அழிக்க வேண்டும். இதனால், இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க முடியும். இதைப் பரப்பும் வெள்ளை ஈக்களை, 0.03% டைமெத்தயேட் கரைசலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். தக்காளி, புகையிலை ஆகிய பயிர்கள் பப்பாளித் தோட்டத்துக்கு அருகில் இருக்கக் கூடாது. ஏனெனில், இந்த நச்சுயிரி, தக்காளி மற்றும் புகையிலைப் பயிரைத் தாக்கும் சக்தி படைத்தது.
தரமான, நச்சுயிரித் தொற்று இல்லாத விதைகளை விதைக்க வேண்டும். இதற்கு, நோயற்ற மரத்திலிருந்து விதைகளை எடுக்க வேண்டும்.
முனைவர் வி.ம.சீனிவாசன், தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர் -621115.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



