எள்ளுப் பொடியைச் சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட்டால், வயிற்று எரிச்சல், இசிவு வலி குணமாகும். வெல்லப்பாகில் எள்ளுருண்டை, கொழுக்கட்டை போன்றவற்றைத் தயாரித்து உண்டால், பிறருக்காக உழைக்கும் மனம் வளரும். அலையும் மனம் அமைதி பெறும்.
எள்ளையும் வெல்லத்தையும் இடித்து வாயில் வெகுநேரம் வைத்திருந்து துப்புதல் அல்லது எள்ளை மென்று குதப்பித் துப்புதல் அல்லது எள் எண்ணெய்யை வாயிலிட்டு, விரலால் ஈறுகளைத் தேய்த்தால், வாய்ப்புண், உடல் சோர்வு நீங்கும்.
எள்ளை இடித்து வெண்ணெய்யில் கலந்து உண்டால், மூலத்தில் குருதிப் போக்கு நிற்கும். மலச்சிக்கல் அகலும். எள் கலந்த உணவை உண்டால், நீரிழிவால் வெளியாகும் நீரின் அளவு இயல்பாகி உடல் பலம் பெறும்.
மாதவிடாய் சரியாகாத பெண்கள், வயது வந்தும் பூப்படையாக் கன்னியர், மாதவிடாய்க் காலத்தில் வயிற்று வலியால் துடிப்போர், தாய்ப்பால் குறைவாக உள்ளோர், எள் உணவுகளை எடுத்து வருவது நல்ல பலனைத் தரும்.
எள்ளை ஊற வைத்த நீரைக் குடித்தால், உதிரச் சிக்கல் நீங்கும். எள்ளையும் கருஞ் சீரகத்தையும் நீரிலிட்டுக் காய்ச்சிக் குடித்தால், உதிரச் சிக்கல் வலி குறையும்.
எள்ளை அதிகமாகச் சாப்பிட்டால் செரிப்பதில் சிக்கல் ஏற்படும். பாடகர்களின் குரல் வளம் பாதிக்கும். எள் உணவை இரவில் சாப்பிடக் கூடாது. சீரண உறுப்புகள் பாதிக்கும். கர்ப்பிணிகள் எள் உணவை அதிகமாகச் சாப்பிட்டால் கரு அழிந்து விடும். கவனம் தேவை.
நாள்பட்ட பிணிகளுக்குத் தொடர்ச்சியாக மருந்தை உண்ணும் காலத்தில், கடுகு மற்றும் நல்லெண்ணெய்யைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல், உடல் வறட்சி அதிகமாகி, நமைச்சல், அரிப்பு போன்ற தோல் பாதிப்புகள் உண்டாகும்.
இரும்புத் தகட்டில் நெருப்பை வைத்து அதில் எள் பொடியைச் சிறிது சிறிதாகத் தூவினால் புகை வரும். இப்புகை இருக்கும் இடத்தில் கொசுவே வராது. இதை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்தால் கொசுக்கள் ஒழியும்.

மரு.ப.குமாரசுவாமி, மேனாள் அரசு சித்த மருத்துவர்
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



