அறுகம்புல் என்றாலே நினைவுக்கு வருபவர் விநாயகர். பசுமையான, மெல்லிய, நீண்ட கூர்மையான இலைகள். ஈரமான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் என, தென்படும் இடங்களில் வளரும் இந்த அறுகம் புல்லில் பல்வேறு நன்மைகள் உள்ளன. அறுகம் புல்லில் உள்ள வேர், இலைகள் உட்பட அனைத்திலும் மருத்துவக் குணங்கள் உள்ளன. இதிலிருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரசை அழிக்க வல்லது.
அறுகம்புல் மருத்துவப் பயன்கள்
அறுகம்புல், இரத்தத்தில் ஹீமோ குளோபினை அதிகரிக்கச் செய்யும், இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றும். உடல் எடை, சளித்தொல்லை, இருமல், நீர்க்கோவை, வயிற்றுவலி, கண் பார்வை, வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்குச் சிறந்த மருந்தாகும். இரத்தச்சோகை, மூக்கில் இரத்தக்கசிவு, மூளையில் ஏற்படும் இரத்தக்கசிவு, இரத்தப் புற்றுநோய் ஆகிய நோய்கள் குணமாகும். சிறுநீர்ப் பையில் உள்ள கல் நீங்க, நரம்புத் தளர்ச்சி நீங்க, இதயக் கோளாறு குணமாக, தோல் நோய்கள் குணமாக, அறுகம்புல் சிறந்த மருந்து.
அறுகம்புல் பயன்படுத்தும் முறை
அறுகம்புல் சாற்றை, தினமும் வெறும் வயிற்றில் குடித்துவர, வயிற்றில் உள்ள நஞ்சுகள் நீங்கும், இரத்தம் சுத்தமாகும், உடல் வீக்கம் குறையும், சிறுநீர் நன்றாகக் கழியும். ஒரு கைப்பிடி அறுகம் புல்லை அரைத்து, 200 மில்லி பச்சை ஆட்டுப் பாலில் கலந்து, தினமும் காலையில் மட்டும் குடித்து வந்தால், இரத்த மூலமும், நரம்புத் தளர்ச்சியும் குணமாகும்.
வெந்நீரில் ஒரு துளசி இலையுடன் அறுகம் புல்லையும் சிறிதளவு போட்டு மூடி வைத்து, பின் அந்த நீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், சீதளம் மற்றும் சளித் தொல்லை நீங்கும்.
எலுமிச்சைப் பழ அளவு அறுகம்புல் துவையலை, பசுந்தயிரில் கலந்து, தினமும் காலையில் குடித்து வந்தால், வெட்டை நோய் குணமாகும். அறுகம் புல்லை சிறிதளவு எடுத்து, தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் கபாலச் சூடு தணியும். உடல் அரிப்புக் குணமாக, அறுகம் புல்லுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து, உடலில் நன்கு தடவி, நன்கு காய்ந்த பிறகு குளிக்க வேண்டும். மனச்சோர்வு, தூக்கமின்மை மற்றும் வலிப்புக்கு, அறுகம்புல் சாறு சிறந்த மருந்து.
படை, சிரங்கு, ஆறாத புண், வறட்டுத்தோல் போன்ற சிக்கல்கள் நீங்க, அறுகம்புல் சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்யைச் சமமாகக் கலந்து தேய்த்து வர வேண்டும். வயிற்றுப்புண் குணமாக, 20 மி.லி. அறுகம்புல் சாறு, 20 மி.லி. நீர் மற்றும் அரைத் தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து, ஒரு மாதம் தொடர்ந்து காலை வேளையில் சாப்பிட்டு வர வேண்டும்.

முனைவர் செ.தமிழ்ச்செல்வி, உதவிப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சை மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



