கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், புணவாசிப்பட்டியைச் சேர்ந்த பெண் விவசாயி மா.சசிக்கலா. இவர், மானாவாரி சாகுபடி முறையில், மிளகாய், எள், சோளம் போன்ற பயிர்களைப் பயிரிட்டு வந்தார். இதில், போதிய வருமானம் கிடைக்காததால், கரூர் வேளாண்மை அறிவியல் மையத்தை அணுகி, விவசாயம் சார்ந்த தொழிலைத் தொடங்குவதற்கான ஆலோசனைகளைப் பெற்றார்.
மேலும், இந்த மையத்தின் மூலம், இவருக்கு வேளாண் பொருள்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றுவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. மேலும், வேளாண்மை அறிவியல் மையத்தின் மூலம் நடைபெற்ற வயல்வெளி ஆய்வுகள் மற்றும் முதல் நிலை செயல் விளக்கங்களிலும் மா.சசிக்கலா கலந்து கொண்டார்.
இதற்குப் பிறகு, உணவுப் பொருள்களை விற்பனை செய்வதற்கான உணவுத் தரக்கட்டுப்பாடு சான்றிதழைப் பெற்ற மா.சசிக்கலா, மசாலாத்தூள் மற்றும் குக்கீஸ்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கரூர் வேளாண்மை அறிவியல் மையம் மூலம் இவருக்கு, அரவை இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது.
இதையடுத்து, இந்தத் தொழிலை விரிவுப்படுத்தும் வகையில், தனது சொந்தச் செலவில், மாவு அரைக்கும் இயந்திரம், மிளகாய் அரைக்கும் இயந்திரம், எண்ணெய் ஆட்டும் இயந்திரம், பாரம்பரிய நெல் வகைகளை அரிசியாக்கும் இயந்திரம், சிறுதானியங்களை அரைத்து அரிசியாக்கும் இயந்திரம், கல், மண் நீக்கிக் கடலையைத் தரம் பிரிக்க உதவும் இயந்திரம், வேப்பம் கொட்டைகளை அரைக்கும் இயந்திரம், உளுந்தில் தோல் நீக்கும் இயந்திரம், தவிடு அரைக்கும் இயந்திரம், கட்டிப் புண்ணாக்கைத் தூளாக்கும் இயந்திரம் போன்றவற்றை வாங்கி, பல்வேறு வேளாண் விளைபொருள்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றி விற்பனை செய்து வருகிறார்.
மேலும், இவரது கிராமத்தில் இருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள விவசாயிகளும் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்த உதவி வருகிறார். இதன் மூலம் விவசாயிகள், பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த உதவும் வேப்ப விதைகளை இடித்து, தரமான வேப்பம் புண்ணாக்காக மாற்றிப் பயன்படுத்தி வருகிறார்கள்.
உளுந்து விவசாயிகள், நேரடி விற்பனையில் ஈடுபடும் வகையில், இங்குள்ள இயந்திரத்தின் மூலம், உளுந்தில் தோலை நீக்கியும், பருப்பாக உடைத்தும் எடுத்துச் செல்கிறார்கள். நெல் விவசாயிகள், வீணாகப் போகும் கருக்கா நெல்லை அரைத்துத் தவிடாக மாற்றி, கறவை மாடுகளுக்குத் தீவனமாக இட்டு வருகிறார்கள். இப்படி, தான் மட்டுமின்றி, விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம் அடையவும் உதவி செய்து வருகிறார், புணவாசிப்பட்டி மா.சசிக்கலா.
எனவே, இவரது செயல்களைப் பாராட்டும் வகையில், கரூர் வேளாண்மை அறிவியல் மையம், இவருக்கு, சிறந்த பெண் தொழில் முனைவோர் விருதை வழங்கி, இவரது முயற்சியும் பணியும் தொடர ஊக்கம் அளித்துள்ளது.
புணவாசிப்பட்டி மா.சசிக்கலாவைப் போல, வேளாண்மை சார்ந்த தொழில்களைச் செய்து முன்னேற விரும்பும் விவசாயிகள் மற்றும் கிராமிய மகளிர், கரூர் வேளாண்மை அறிவியல் மையத்தை, நேரிலோ அல்லது 94883 93849 தொலைபேசி மூலமோ அணுகலாம்.

முனைவர் பெ.தமிழ்ச்செல்வி,
வேளாண்மை விரிவாக்கத் தொழில் நுட்ப வல்லுநர், முனைவர் ஜெ.திரவியம், முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் மையம், கரூர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

