கரூர் மாவட்டத்தில், நெல், கரும்பு, வாழை, மரவள்ளி, தென்னை போன்ற, இலாபம் தரக்கூடிய பல்வேறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்நிலையில், கரூர் மாவட்டம், தாந்தோணி வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், 8 முதல் 12 மாதங்களில் விளையும் சேனைக் கிழங்கை ஆர்வமாகப் பயிரிட்டு வருகிறார்கள். இதற்குக் காரணம், சேனைக் கிழங்கு சாகுபடி மூலம், ஏக்கருக்கு ஒன்று முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை இலாபம் எடுக்கலாம் என்பது தான்.
இந்தச் சூழலில், கரூர் மாவட்டம், புழுதேரி கிராமத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் மைய விஞ்ஞானிகளாகிய நாங்கள், தாந்தோணி வட்டாரத்தில் உள்ள பள்ளாப்பாளையம் கிராமத்தில் கள ஆய்வில் ஈடுபட்டோம். அப்போது, சேனைக் கிழங்கு சாகுபடியில் அதிகளவில் கிழங்கு அழுகல் நோய் இருப்பதைக் கண்டறிந்தோம். எனவே, விவசாயிகளை ஒன்று திரட்டி ஆலோசனைக் கூட்டம் போட்டு, கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தோம்.
பிறகு, ஐந்து விவசாயிகளின் நிலங்களைத் தேர்வு செய்து, சேனைக் கிழங்கில் அழுகல் நோய் மேலாண்மை குறித்த வயல்வெளி ஆய்வுத் திடல்களை அமைத்தோம். மேலும், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கிழங்கு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து, அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் நோய் எதிரிப் பூசணமான டிரைக்கோடெர்மா விரிடியை மாத்திரை வடிவில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினோம்.
இதைப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த செயல்முறை விளக்கமும் அளித்தோம். கிழங்கு சாகுபடியில் மகசூலை அதிகரிக்கப் பயன்படும் நுண்ணூட்டக் கலவையை விவசாயிகளுக்கு அளித்து, அதைத் தெளிப்பது குறித்த தொழில் நுட்பப் பயிற்சியையும் அளித்தோம்.
மேலும், கிழங்கு நடவு முதல் அறுவடை வரை, தொடர்ந்து கள ஆய்வை மேற்கொண்டு, விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிக்க ஆலோசனை வழங்கினோம். எங்களின் ஆலோசனைகளை விவசாயிகள் சரியாகச் செயல்படுத்தியதால், சேனைக்கிழங்கு அழுகல் நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்து மகசூல் அதிகமாகக் கிடைத்தது.
சேனைக் கிழங்கு சாகுபடி
இதற்கு எடுத்துக்காட்டாக, கரூர் மாவட்டம், தாந்தோணி வட்டாரம், பள்ளாப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வீரமணி, நாங்கள் கூறிய தொழில் நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தியதால், ஒரு ஏக்கரில் 15 டன் சேனைக் கிழங்கை மகசூலாக எடுத்துள்ளார்.
இந்தக் கிழங்கு, ஒரு கிலோ 33 ரூபாய் வீதம் விற்பனையானது. இதன் மூலம், அவருக்கு 4,95,000 ரூபாய் மொத்த வருமானமாகக் கிடைத்தது. இதில், செலவுத் தொகை 2,31,000 ரூபாய் போக, நிகர இலாபமாக 2,63,100 ரூபாய் கிடைத்துள்ளது.
சேனைக் கிழங்கு சாகுபடியில் முக்கியப் பிரச்னையாக இருக்கும் கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பத்தை, விவசாயிகள் சிறப்பாகக் கையாள்வதால், மேலும், முப்பது விவசாயிகளுக்கு டிரைக்கோடெர்மா விரிடி மாத்திரைகளை மீண்டும் இலவசமாக வேளாண் அறிவியல் மையம் மூலம் வழங்கியுள்ளோம்.
எனவே, பள்ளாப்பாளையம் வீரமணியைப் போல வேளாண்மை உற்பத்தியில், விவசாயிகள் அனைவரும் சாதிக்க வேண்டும். சாகுபடி ஆலோசனை மற்றும் தொழில் நுட்ப உதவிகள் தேவைப்படும் கரூர் மாவட்ட விவசாயிகள், நமது வேளாண் அறிவியல் மையத்தை அணுகலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 094889 67675, 04323 299389.
முனைவர் பெ.தமிழ்ச்செல்வி, வேளாண்மை விரிவாக்கத் தொழில் நுட்ப வல்லுநர், முனைவர் ஜெ.திரவியம், முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் மையம், கரூர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


