கடலூர் மாவட்டம், பாலூரில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும், காய்கறி ஆராய்ச்சி நிலையம், காய்கறிப் பயிர்களில் புதுப்புது இரகங்களை வெளியிட்டு வருகிறது. இவ்வகையில், புடலங்காயில் வெளியிட்டுள்ள புதிய இரகங்கள் மற்றும் அவற்றின் சாகுபடிக் குறிப்புகளைப் பார்க்கலாம்.
பாலூர் புடலை 1 – வெள்ளை நீட்டு இரகம் (பிஎல்ஆர்-1)
- 2007-இல் வெளியிடப்பட்ட இரகம்.
- வடகிழக்கு மண்டலத்தில் பயிரிட ஏற்றது.
- அதிக மகசூலைத் தரக்கூடியது.
- கவர்ச்சியான வெள்ளை நிறம் கொண்டது.
- காய்கள் முறுக்கும் தன்மை அற்றவை.
- குறைந்தளவில் நார்த்தன்மையுள்ள இரகம்.
- குறைந்த வாசனை உடையது.
- எக்டருக்கு 35-40 டன் காய்கள் கிடைக்கும்.
சாகுபடிக் குறிப்புகள்
மண்: வடிகால் வசதியுடன் கூடிய, மணல் கலந்த இருமண் வாகுள்ள நிலம் ஏற்றது.
பருவம்: ஜூன்-ஜூலை, டிசம்பர்-ஜனவரி மற்றும் ஏப்ரல்-மே.
விதையளவு: எக்டருக்கு 1.5 கிலோ.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பூசணக்கொல்லி அல்லது 2 கிராம் கார்பன்டாசிம் பூசணக்கொல்லி வீதம் எடுத்து, விதைகளைக் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும்.
விதைப்பு: ஒரு குழிக்கு ஐந்து விதை.
பயிர்க் களைப்பு: விதைத்த 15-வது நாள், குழிக்கு இரண்டு செடிகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற செடிகளை நீக்கிவிட வேண்டும்.
நிலம் தயாரித்தல்: பயிர் இடைவெளி 2.5×2.0 மீட்டர், குழியின் அளவு 30x30x30 செ.மீ. இருக்க வேண்டும்.
உர அளவு: ஒரு குழிக்கு, நன்கு மட்கிய தொழுவுரம் 10 கிலோ மற்றும் 6:12:12 கிராம் வீதம், தழை, மணி மற்றும் சாம்பல் சத்தைக் கலந்து அடியுரமாக இட வேண்டும். நட்ட முப்பதாம் நாள், மேலுரமாக, குழிக்கு 10 கிராம் தழைச்சத்து வீதம் இட வேண்டும்.
பின்செய் நேர்த்தி: மூன்று முறை களையெடுக்க வேண்டும். கொடிகள் படர்வதற்கு, இரண்டு மீட்டர் உயரத்தில் பந்தலை அமைக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
இலை வண்டு மற்றும் புழு: ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி. மாலத்தியான் 50 இ.சி. மருந்து அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி. மீத்தைல் டெமட்டான் 25 இ.சி. மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
பழ ஈ: இதனால் பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழித்து விட வேண்டும். மீன் உணவுப் பொருள் 5 கிராம் மற்றும் 1 மி.லி. டைகுளோர்வாஸ் வீதம் கலந்த கலவையை, எக்டருக்கு 50 இடங்களில் வைக்க வேண்டும்.
சாம்பல் நோய்: ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. டினோகேப் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 0.5 கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து, பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
மகசூல்: எக்டருக்கு 35-40 டன் காய்கள் கிடைக்கும்.
பாலூர் புடலை 2 – வெள்ளைக் குட்டை இரகம் (பிஎல்ஆர்-2)
- 2009-இல் வெளியிடப்பட்ட குட்டை இரகம்.
- வடகிழக்கு மண்டலத்தில் பயிரிட ஏற்றது.
- குறைந்த வாசனை உடையது.
- கவர்ச்சியான வெள்ளைக் காய்களைக் கொண்டது.
- காய்கள் முறுக்கும் தன்மையற்றவை.
- எனவே, கல் கட்டத் தேவையில்லை. குறைந்த வயதுள்ள இரகம்.
- எக்டருக்கு 35-40 டன் காய்கள் கிடைக்கும்.
சாகுபடி குறிப்புகள்
மண்: வடிகால் வசதியுடன் கூடிய, மணல் கலந்த இருமண் வாகுள்ள நிலம் ஏற்றது.
பருவம்: ஜூன்-ஜூலை, டிசம்பர்-ஜனவரி மற்றும் ஏப்ரல்-மே.
விதையளவு: எக்டருக்கு 1.5 கிலோ.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் உயிர்க்கொல்லி அல்லது 2 கிராம் கார்பன்டாசிம் பூசணக்கொல்லி வீதம் எடுத்து, விதைகளைக் கலந்து நேர்த்தி செய்து விதைக்கலாம்.
விதைப்பு: ஒரு குழிக்கு ஐந்து விதை.
பயிர்க் களைப்பு: விதைத்த 15-வது நாள், குழிக்கு இரண்டு செடிகளை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற செடிகளை நீக்கிவிட வேண்டும்.
நிலம் தயாரித்தல்: பயிர் இடைவெளி 2.5×2.0 மீட்டர், குழியின் அளவு 30x30x30 செ.மீ. இருக்க வேண்டும்.
உர அளவு: ஒரு குழிக்கு, நன்கு மட்கிய தொழுவுரம் 10 கிலோ மற்றும் 6:12:12 கிராம் வீதம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்தைக் கலந்து அடியுரமாக இட வேண்டும். நட்ட முப்பதாம் நாள், மேலுரமாக, குழிக்குப் பத்து கிராம் தழைச்சத்து வீதம் இட வேண்டும்.
வளர்ச்சி ஊக்கி அல்லது எத்திரல் தெளிப்பு: பத்து லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. எத்திரல் வீதம் கலந்த கரைசலை, விதைத்த 10-15 நாட்களில் இருந்து, ஒருவார இடைவெளியில் நான்கு முறை தெளித்தால் விளைச்சல் கூடும்.
பின்செய் நேர்த்தி: மூன்று முறை களைஎடுக்க வேண்டும். கொடி படருவதற்கு இரண்டு மீட்டர் உயரத்தில் பந்தல் அமைத்துக் கொடிகளை அதில் ஏற்றி விட வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு
இலை வண்டு மற்றும் புழு: ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. மாலத்தையான் 50 இசி மருந்து அல்லது ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. மீத்தைல் டெமட்டான் 25 இசி மருந்து வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
பழ ஈ: இதனால் பாதிக்கப்பட்ட பழங்களை அழித்து விட வேண்டும். மேலும், மீன் உணவுப்பொறி ஐந்து கிராம் மற்றும் ஒரு மி.லி. டைகுளோர்வாஸ் வீதம் கலந்த கலவையை, எக்டருக்கு 50 இடங்களில் வைக்க வேண்டும். மூன்று சதவீத வேப்ப எண்ணெய்க் கரைசலைத் தெளிக்க வேண்டும். காப்பர் மற்றும் கந்தகம் கலந்த பூச்சி மருந்தைப் பயன்படுத்தக் கூடாது.
சாம்பல் நோய்: ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. டினோகேப் அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 0.5 கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து, பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
மகசூல்: எக்டருக்கு 35-40 டன் காய்கள் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு: முனைவர் கு.காயத்ரி, உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர்- 607 102. தொலைபேசி: 04142-275222, email: hrspalur@tnau.ac.in

முனைவர் கு.காயத்ரி,
முனைவர் இரா.லெனின், முனைவர் கோ.ப.சுதாகர் ராவ், காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர் மாவட்டம். முனைவர் க.வெங்கடேசன், முதன்மையர், தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

