தமிழக விவசாயிகள் மலர் சாகுபடி (Flower Cultivation) செய்வதற்கான வாய்ப்புகள் இருந்த போதும், அதைச் செய்யத் தயங்குகிறார்கள். நல்ல மண்வளம் உள்ள விவசாயிகள், தயக்கம் காட்டி மலர் சாகுபடியைத் தள்ளிப் போடுவது தவறு. அதாவது, நீரில்லை. ஆளில்லை, சந்தை வசதி இல்லை, போக்குவரத்து வசதியில்லை என்று எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும், மலர்கள் சாகுபடியில் ஈடுபட்டால், குறுகிய காலத்தில் மனம் போல் காசு பார்த்துக் கரையேறலாம்.
மலர்கள் சாகுபடி (Flower Cultivation)
மலர்களை இணைப்பயிராகத் தேர்வு செய்பவர்கள் நல்ல வரவினைப் பெற, முறையான சாகுபடி உத்திகளைக் கையாள வேண்டும். கடமைக்கு ஒன்று அல்லது இரண்டு மலர்ப் பயிர்களைத் தொடர்ந்து சாகுபடி (Flower Cultivation) செய்பவர்கள் பலர் உண்டு. இன்னும் சிலர், பண்டிகைக் காலம் மற்றும் சந்தையில் நல்ல விலை கிடைக்கும் காலத்தில் மட்டும் மலர் சாகுபடியைத் தேர்வு செய்வதுண்டு. விவசாயிகள், இந்த நிலையிலிருந்து மாறி, மலர்கள் சாகுபடியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
ரோஜா, முல்லை, பிச்சி, குண்டுமல்லி, சாமந்தி, கனகாம்பரம், கேந்தி, டிசம்பர் பூ, அரளி ஆகியவற்றை உதிரி மலர்கள் என்று குறிப்பிடுவார்கள். அலங்கார வேலைக்கும், மேலும் பலவிதத் தேவைகளுக்கும், கொய் மலர்கள் எனப் பல உள்ளன. கார்னேஷன், வணிக ரோஜா, ஆந்தூரியம், ஆர்க்கிட்ஸ், கிளாடியோலஸ். டேலியா, ஜெர்பரா, சம்பங்கி, ஆஸ்டர், கோல்டன் ராட், கெய்லார்டியா சினியா, தாமரை என, எத்தனையோ மலர்கள் உள்ளன.
மேலும், உலர் மலர்கள் என்னும் வகையில், வாடாமல்லி, செலோசியா, உலர் ரோஜா, கெலிகிரைம் என்று, பல இரகங்களில் மலர்கள் உள்ளன. தேடி முடிவெடுத்துப் பயிரிட்டால், மனம் போல் காசு பார்க்கலாம்.
தழைப்பயிர்களாக வளர்ந்து விவசாயிகளைக் காக்க, மருக்கொழுந்து, துளசி, மருவு, செம்பருத்தி, டெக்கோமா முதலியன உள்ளன. பிரச்சினைக்கு உரிய மண்ணில் மலர்கள் வளரத் தடை வரலாம். சாகுபடிக்கு முன்பே மண் பரிசோதனை செய்து, அதன்படி சாகுபடி செய்யலாம்.
மலர்ச் செடிகளுக்கான (Flower) )நீரை, நுண்ணீர்ப் பாசனம் மூலம், தெளிப்பு நீர் மூலம் தரலாம். தேவைப்படின் நிலப்போர்வை அமைக்கலாம். காலத்தில் கவாத்துச் செய்தல், பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துதல், பசுமைக்குடில் என்னும் பாலி அவுஸ் மூலம் மலர் சாகுபடி செய்தல் என, விதவிதமான உத்திகளைக் கையாளலாம்.
உள்ளூரில் விற்பதைக் காட்டிலும், பூச்சந்தைக்குக் கொண்டு சென்று விற்றால் கூடுதலாக வருமானம் கிடைக்கும். மேலும், மலர்களைப் பதப்படுத்தி மதிப்புமிகு பொருள்களைத் தயாரிக்கலாம். குண்டு மல்லிகை மூலம், கான்கிரீட் என்னும் வாசனைப் பொருளைத் தயாரிக்கலாம். பசுமையான சூழல் நிலவும் போது, மலர்கள் சாகுபடியில் (Flower Cultivation) ஈடுபட்டால் மனம் போல் காசு பார்க்கலாம்.

டாக்டர் பா.இளங்கோவன்,
மேனாள் கூடுதல் இயக்குநர், வேளாண்மைத்துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


