உடலுக்கு நன்மை தரும் உணவுகளில் ஒன்றான வாழைப்பழத்தை, நமது உணவுப் பழக்க வழக்கத்தில் இருந்து என்றென்றும் அகற்ற இயலாது. அறுவடைக்குப் பிறகு, பலவிதக் காரணங்களால் வாழைப் பழங்கள் அதிகளவில் வீணாகின்றன. விரைவில் கெட்டு விடும் தன்மையுள்ள இந்தப் பழங்களை, குளிர் சாதனப் பெட்டியில் வைத்தும் பாதுகாக்க முடியாது. ஆக, அறுவடைக்குப் பிறகு, மொத்த உற்பத்தியில் 22 சதவீதப் பழங்கள் வீணாகின்றன.
இதைப்போல, அதிகப் பயன்பாடின்றி, நிறையத் தோப்புகளில் வாழைப்பூக்கள், காய்கள், தண்டுகள் அதிகளவில் வீணடிக்கப்படுகின்றன. இதைத் தடுப்பதற்கான ஒரே வழி, இந்தப் பொருள்களை மதிப்புக்கூட்டுப் (Value Addition) பொருள்களாக மாற்றுவது மட்டுமே. மதிப்புக்கூட்டுதல் மூலம், இந்தப் பொருள்களைப் பல நாட்களுக்குக் கெடாமல் வைத்திருப்பதுடன், அதிக விலைக்கும் விற்கலாம்.
உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல் பற்றிய தொழில் நுட்பங்களைக் கொண்டு, அனைத்து வகை உணவுப் பொருள்களையும் மதிப்புக்கூட்ட முடியும். இதன் மூலம், அதிக உற்பத்தியின் காரணமாக, விவசாயிகளின் கையைக் கடிக்கும் விலை வீழ்ச்சி மற்றும் போதிய பராமரிப்பு இல்லாததால் வீணாகும் விளை பொருள்களால் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்ட முடியும்.
வாழை உற்பத்தி அதிகமாக இருப்பினும், வாழை சார்ந்த உணவுப் பொருள்கள் தயாரிப்பில் நமது நாடு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. வளர்ந்த நாடுகளில் ஆண்டுக்கு 40-50 விழுக்காடு வேளாண் பொருள்கள் வணிக நோக்கில் மதிப்புக்கூட்டுப் பொருள்களாகத் தயாரிக்கப்படுகின்றன. வாழையிலிருந்து விலை மலிவான, அதே சமயம் சத்துகள் நிறைந்த எண்ணற்ற உணவுப் பொருள்களைத் தயாரிக்கின்றனர். ஆனால், நம் நாட்டில் இந்நிலை, இரண்டு விழுக்காடு அளவில் மட்டுமே உள்ளது.
வாழைப்பழத்தில் இருந்து, சிறப்பான இலாபத்தைத் தரக்கூடிய உலர் வாழைப்பழம், வாழைப்பழப்பொடி, வாழைப்பழ இணை உணவு, சர்க்கரைக் கரைசல் வாழைப்பழம், வாழைப்பழக்கூழ், தெளிந்த வாழைப்பழ பானம், வாழைப்பழ ஸ்குவாஸ், வாழைப்பழ கெட்சப், வாழைப்பழ மிட்டாய், வாழைப்பழ பார், வாழைப்பழ ஒயின், வாழைப்பழ கேண்டி, வாழைப்பழ ஊறுகாய், வாழைப்பழ அல்வா, பாயாசம், வாழைப்பழச் சிரப், வாழைப்பழத்தேன், வாழைப்பழச் சீவல்,
வாழைக்காயில் இருந்து, மாவு, வாழைக்காய் சாஸ், வாழைக்காய் சிப்ஸ், வாழைக்காய் ஊறுகாய், வாழைக்காய் கார உருண்டை, வாழைப்பூவில் இருந்து, தொக்கு, வாழைப்பூ பக்கோடா, வாழைப்பூ வடை, வாழைத்தண்டில் இருந்து, ஜுஸ், வாழைத்தண்டு இனிப்பு கேண்டி ஆகியவற்றைக் குறைந்த செலவில் தயாரிக்கலாம். இதைச் சிறு தொழிலாகவே தொடங்கலாம்.
மேலும், வாழை உணவுப் பொருள்களில் தேவையான அளவில் பாதுகாப்பான்களைச் சேர்ப்பதன் மூலம், மூன்று முதல் பன்னிரெண்டு மாதங்கள் வரை கெடாமல் காக்கலாம். இவ்வகை உணவுப் பொருள்களைத் தயாரிப்பதன் மூலம், அறுவடைக்குப் பிறகு வீணாவதைக் கணிசமாகத் தடுப்பதுடன், அதிகளவில் வருமானமும் ஈட்டலாம். வாழை விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும்.
வாழை சார்ந்த தொழிலைத் தொடங்க விரும்புவோர், வாழையை சாகுபடி செய்ய வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. வாழை விவசாயிகளிடம் நேரில் சென்று மொத்தமாகக் கொள்முதல் செய்தோ அல்லது வாழை விவசாயிகளுடன் கூட்டுச் சேர்ந்தோ, இந்தத் தொழிலைச் செய்யலாம்.
இதற்கு, ஏராளமான சலுகைகளை அரசாங்கம் வழங்குகிறது. இப்படித் தொழில் செய்ய முடியாதவர்கள், ஒருங்கிணைப்பாளராக, மூலப்பொருள் வழங்குபவராகத் தம் திறனை வளர்க்கலாம். வணிகம் செய்வதற்கு, நிலமோ அதிக முதலோ தேவையில்லை. திறமை இருந்தால், வாழை மதிப்புக்கூட்டுத் தொழிலில் சாதிக்கலாம்.

முனைவர் பா.இளங்கோவன்,
மேனாள் கூடுதல் வேளாண்மை இயக்குநர், வேளாண்மைத் துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


