விவசாயத்தில் அதிக மகசூல் பெறுவது மட்டுமே வெற்றியின் அடையாளம் அல்ல. பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களைக் கடந்து, பயிர் நன்றாக வளர்ந்து விளைந்து, அறுவடைக்குப் பின்பும் தரம் குறையாமல் சந்தையைச் சென்றடைய வேண்டும். இதற்காக, விதைத்தேர்வு முதல் விளைபொருள் சேமிப்பு வரை, ஒவ்வொரு நிலையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை (Crop Protection) மேற்கொள்வது அவசியம்.
இன்று, காலநிலை மாற்றம், மழைப்பொழிவு மாற்றம், புதிய பூச்சி மற்றும் நோய்கள், மண்வளக் குறைவு, நீர்ப்பற்றாக்குறை போன்ற பல சவால்களை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, பிரச்சினை ஏற்பட்ட பிறகு கட்டுப்படுத்துவதை விட, அது ஏற்படுவதற்கு முன்பே தடுப்பது தான் சிறந்த வழியாகும்.
Crop Protection | தரமான விதையே நல்ல விளைச்சலின் முதற்படி
எப்படிப்பட்ட விதை, அப்படிப்பட்ட பயிர் என்பது, விவசாயத்தின் அடிப்படை உண்மை. நல்ல முளைப்புத் திறனுள்ள, தூய்மையான, நோய்த் தாக்குதல் இல்லாத, அந்தப் பகுதி மற்றும் பருவநிலைக்கு ஏற்ற விதைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
தரமற்ற விதைகளை விதைத்தால், முளைப்புக் குறைவு, பயிர் வளர்ச்சியில் சீரின்மை, விதை மூலம் நோய்ப் பரவல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால், பூச்சி மற்றும் நோய் மேலாண்மைச் செலவும் கூடலாம்.
எனவே, விவசாயிகள், நம்பகமான ஆதாரங்களில் இருந்து விதைகளை வாங்கி, விதையின் தரம், இரகம் மற்றும் பருவப் பொருத்தத்தை உறுதி செய்து பயன்படுத்துங்கள்.
விதை நேர்த்தி – நோய் வருவதற்கு முன்பே தடுப்போம்
விதை மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதில் விதை நேர்த்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. விதையின் மேற்பரப்பில் அல்லது விதையுடன் தொடர்புள்ள நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்த இது உதவும்.
விதை நேர்த்தி என்பது, நோய் வந்த பிறகு மேற்கொள்ளப்படும் சிகிச்சை அல்ல; நோய் வராமல் தடுக்கும் ஆரம்பக்கட்டப் பாதுகாப்பு நடவடிக்கை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பயிருக்கு ஏற்ற விதை நேர்த்தி முறையை வேளாண் துறை அல்லது வேளாண் வல்லுநர்களின் ஆலோசனையுடன் மேற்கொள்ள வேண்டும்.
வயல் சுகாதாரம் – பூச்சி, நோய்களுக்கு இடமளிக்க வேண்டாம்
வயலைச் சுத்தமாகப் பராமரிப்பது, பயிர் பாதுகாப்பின் முக்கியமான அடிப்படை ஆகும். அறுவடைக்குப் பிறகு வயலில் கிடக்கும் நோய்த்தாக்கிய தாவர எச்சங்கள், தேவையற்ற களைகள் மற்றும் அழுகிய தாவரப் பகுதிகள், பூச்சிகளுக்கும் நோய்க்கிருமிகளுக்கும் தங்குமிடமாக அமையலாம். எனவே,
- நோய்த்தாக்கிய தாவரப் பகுதிகளை அகற்ற வேண்டும்.
- தேவையற்ற களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- வயல் வரப்புகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட தாவர எச்சங்களை முறையாக அகற்ற வேண்டும்.
- வேளாண் கருவிகள் மற்றும் உபகரணங்களைத் தேவையான அளவில் சுத்தப்படுத்த வேண்டும்.
சிறிய அலட்சியம் பெரிய இழப்பாகும். எனவே, ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்ட செடிகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம்.
பயிர்ச் சுழற்சி – மண்ணுக்கும் பயிருக்கும் பாதுகாப்பு
ஒரே நிலத்தில் ஆண்டுதோறும் ஒரே பயிரையே சாகுபடி செய்வது, பூச்சிகள் மற்றும் நோய்க் கிருமிகள் தொடர்ந்து பெருகுவதற்குச் சாதகமாக அமையலாம்.
இதற்கு மாற்றாக, பயிர்ச் சுழற்சி முறையைப் பின்பற்றலாம். ஒரு பருவத்தில் ஒரு பயிரை சாகுபடி செய்து விட்டு, அடுத்த பருவத்தில் வேறு குடும்பத்தைச் சேர்ந்த பயிரை சாகுபடி செய்வது நல்ல நடைமுறை ஆகும். எனவே, பயிர்ச் சுழற்சி மூலம்,
- பூச்சி மற்றும் நோய்ச் சுழற்சிகளைத் தடுக்கலாம்.
- மண்ணின் சத்துப் பயன்பாட்டில் சமநிலையை ஏற்படுத்தலாம்.
- மண்வளத்தைப் பாதுகாக்கலாம்.
- களைகளின் பெருக்கத்தைக் குறைக்கலாம்.
- விவசாயியின் வருமானத்தைப் பல்வகைப்படுத்தலாம்.
முறையான பாசனம் – அதிக நீரும் ஆபத்து; குறைந்த நீரும் ஆபத்து
அதிக நீர் என்றால் அதிக மகசூல் என்பது, தவறான கருத்து. பயிரின் வகை, மண் தன்மை, பருவநிலை மற்றும் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப, நீரின் தேவை மாறுபடும்.
அதிகப்படியான பாசனத்தால் வேர்ப்பகுதியில் காற்றோட்டம் குறைதல், வேர் அழுகல், சத்துகள் கழிந்து செல்லுதல், நீர் வீணாதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதே நேரத்தில், நீர்ப்பற்றாக்குறையும் பயிர் வளர்ச்சியைப் பாதிக்கும்.
எனவே, மண்ணின் ஈரப்பதத்தையும், பயிரின் தேவையையும் அடிப்படையாகக் கொண்டு, பாசனம் செய்ய வேண்டும். பயிருக்கு ஏற்ற இடங்களில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்தலாம். மழைநீர்ச் சேமிப்பு மற்றும் வயலில் முறையான வடிகால் வசதியும் அவசியம்.
சமச்சீர் உரமிடுதல் – அதிகம் என்றால் அதிக மகசூல் அல்ல
பயிருக்குச் சத்துகள் அவசியம். ஆனால், அதிகமாக உரமிடுவது, அதிக மகசூலைத் தரும் என்பது உண்மையல்ல.
மண் பரிசோதனையின் அடிப்படையில், பயிருக்குத் தேவையான சத்துகளைச் சரியான அளவில், சரியான நேரத்தில் வழங்குவதே சிறந்த நடைமுறை.
அளவுக்கு அதிகமாக உரமிடுவதால் மண்வளம் பாதிக்கப்படலாம்; பயிரின் இயல்பான வளர்ச்சிப் பாதிக்கப்படலாம்; சில பூச்சி மற்றும் நோய்ப் பிரச்சினைகள் கூடலாம்; உற்பத்திச் செலவும் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரிக்கலாம்.
மண் பரிசோதனை, சரியான உரம், சரியான அளவு, சரியான நேரம் என்னும் நான்கு கூறுகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும். தொழுவுரம், பசுந்தாள் உரம் போன்ற இயற்கை உரங்களையும் நிலத்தின் தேவைக்கேற்ப பயன்படுத்துவது மண்வளத்தைப் பாதுகாக்க உதவும்.
தொடர் கண்காணிப்பு – பிரச்சினையை ஆரம்பத்திலேயே கண்டறிவோம்
வயலைத் தொடர்ந்து கண்காணித்தல், பயிர்ப் பாதுகாப்பில் (Crop Protection) மிகவும் முக்கியமானது. பூச்சி அல்லது நோய் அதிகமாகப் பரவிய பிறகு நடவடிக்கை எடுத்தால், கட்டுப்பாட்டுச் செலவும், மகசூல் இழப்பும் கூடலாம். எனவே, வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் வயலைச் சுற்றிப் பார்த்துக் கவனிக்க வேண்டியன:
- இலைகளின் நிறமாற்றம்
- இலைகளில் துளைகள்
- பூச்சிகளின் இருப்பு
- முட்டைகள் அல்லது புழுக்கள்
- செடிகள் வாடுதல்
- தண்டுப் பாதிப்புகள்
- காய் மற்றும் பழங்களில் சேதம்
பூச்சியொன்று தென்பட்டதும் பூச்சிக்கொல்லியைத் தெளிப்பது சரியான நடைமுறை அல்ல. முதலில் பூச்சியைச் சரியாக அடையாளம் கண்டு, அதன் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி நிலையை மதிப்பிட்டு, தேவையான கட்டுப்பாட்டு முறையைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு – பல வழிகளை இணைத்துப் பயன்படுத்துவோம்
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு (Integrated Pest Management – IPM) (Crop Protection) என்பது, ஒரே ஒரு கட்டுப்பாட்டு முறையை மட்டுமே நம்பாமல், பல்வேறு பாதுகாப்பு முறைகளை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் அணுகுமுறை ஆகும்.
பண்பாட்டு முறைகள்: பயிர்ச் சுழற்சி, சரியான விதைப்புக் காலம், வயல் சுகாதாரம்.
இயந்திர முறைகள்: பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றுதல், பூச்சிகளைச் சேகரித்தல், பொறிகளைப் பயன்படுத்துதல்.
உயிரியல் முறைகள்: இயற்கை எதிரிகளைப் பாதுகாத்தல் மற்றும் தேவையான உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பயன்படுத்துதல்.
இரசாயன முறை: தேவைப்படும் சூழலில் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை, சரியான அளவு மற்றும் சரியான முறையில் பயன்படுத்துதல்.
எனவே, முதலில் கண்காணிப்பு, அடுத்து, அடையாளம் காணுதல், அதன் பிறகு, தேவையான கட்டுப்பாடு என்னும் அணுகுமுறையைப் பின்பற்றுவோம்.
அறுவடைக்குப் பிந்தைய பாதுகாப்பு – வயலைத் தாண்டியும் பயிரைப் பாதுகாப்போம்
பயிர் நன்றாக விளைந்தாலும், அறுவடைக்குப் பிறகு சரியான முறையில் கையாளா விட்டால், விவசாயிக்கு இழப்பு ஏற்படலாம்.
சரியான முதிர்ச்சியில் அறுவடை செய்து, தானியங்கள் மற்றும் விதைகளை, தேவையான அளவுக்கு உலர்த்தி, ஈரப்பதம் புகாத பாதுகாப்பான இடத்தில் சேமிக்க வேண்டும். சேமிப்பிடத்தில் ஈரப்பதம், எலி மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சேமிப்புக் கலன்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
காய்கறி மற்றும் பழங்களில் அறுவடைக்குப் பிந்தைய கையாளுதலும் முக்கியம். அதிக வெப்பம், காயம், ஈரப்பதம் ஆகியன, தரத்தைக் குறைத்து அழுகலை ஏற்படுத்தக்கூடும்.
9 Crop Protection Method – நல்ல மகசூலுக்கான வழிகாட்டிகள்
- விதையைச் சரியாகத் தேர்வு செய்வோம்,
- விதை நேர்த்தி செய்வோம்,
- வயலைச் சுத்தமாக வைத்திருப்போம்,
- பயிர்ச் சுழற்சியைப் பின்பற்றுவோம்,
- தேவைக்கேற்ப பாசனம் செய்வோம்,
- மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடுவோம்,
- வயலைத் தொடர்ந்து கண்காணிப்போம்,
- ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பை மேற்கொள்வோம்,
- அறுவடைக்குப் பிறகும் விளைபொருளைப் பாதுகாப்போம்.
விவசாயிகளுக்கு முக்கிய வேண்டுகோள்
பயிரில், பூச்சி அல்லது நோய்த் தாக்குதல் இருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டால், சரியான அடையாளம் தெரியாமல் தன்னிச்சையாக மருந்து தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட செடியின் அறிகுறிகள், பூச்சியின் தோற்றம், பயிரின் வயது மற்றும் பாதிக்கப்பட்ட பரப்பளவு போன்ற தகவல்களுடன், வேளாண் அலுவலர் அல்லது தகுதியான வேளாண் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.
பூச்சிக்கொல்லி அல்லது நோய்க்கட்டுப்பாட்டு மருந்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், அதன் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள பயிர், அளவு, கலக்கும் முறை, பாதுகாப்புக் காலம், அறுவடைக்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய இடைவெளி ஆகியவற்றை, முறையாகப் பின்பற்ற வேண்டும்.
விவசாயத்தில் கிடைக்கும் ஒவ்வொரு கிலோ மகசூலுக்குப் பின்னாலும், விவசாயியின் உழைப்பு, நேரம், பணம் மற்றும் இயற்கை வளங்கள் உள்ளன. எனவே, பயிரைப் பாதுகாப்பது மட்டுமன்றி, மண், நீர், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயியின் வருவாயையும் பாதுகாக்கும் வகையில் வேளாண்மை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தரமான விதை, விதை நேர்த்தி, வயல் சுகாதாரம், பயிர்ச் சுழற்சி, முறையான பாசனம், சமச்சீராக உரமிடுதல், தொடர் கண்காணிப்பு, ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு, அறுவடைக்குப் பிந்தைய பாதுகாப்பு ஆகிய ஒன்பது நடைமுறைகளையும் முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம், தேவையற்ற செலவுகளைக் குறைத்து, பயிர் இழப்பைத் தடுத்து, தரமான விளைபொருளைப் பெறுவதற்கான வாய்ப்பைக் கூட்டலாம்.
விதை முதல் அறுவடை வரை பயிரைக் காப்போம்; மகசூலையும் வருவாயையும் பெருக்குவோம்.

கா.அரிபுத்திரன்,
வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


