பசுவை, இலட்சுமி என்றும், கோமாதா என்றும் அழைத்தாலும், அது நன்றாகப் பால் தரும் போது மட்டும் கவனிப்பது, பால் வற்றியதும் கண்டு கொள்ளாமல் விடுவது, உயிர் வாழ்ந்தால் போதுமென்ற பாணியில் அரைகுறையாகத் தீவனமிடுவது, பெரும்பாலான விவசாயிகளின் குணமாக உள்ளது. இந்த எண்ணம் தவறானது மட்டுமல்ல, தரமான தீவனத்தைத் தராமல் இருப்பது, சொந்தக் காசிலே சூனியம் வைத்துக் கொள்வதைப் போன்றது.
ஒரு பசு ஈன்றதும் அதன் மடியில் பால் சுரப்பது, அந்தப் பசுவின் கன்றைக் காக்கத் தான். இதை மறந்து அந்தப் பசு பால் கறப்பதே நமக்காகத் தான் என்று நினைத்துக் கொண்டு, கன்றுக்குத் தராமல் முழுமையாகக் கறந்து விடுகிறோம். ஆனாலும், பால் வற்றிய பசுக்களுக்கு, நல்ல தீவனத்தை அளிக்க நமக்கு மனம் வருவதில்லை.
மனிதர்களை அண்டி வாழும் நோக்கில் இறைவன் நமக்குக் கொடுத்த கொடை தான் கால்நடைகள். சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நமது ஆதரவில் வளரும் கால்நடைகள், அதற்கு நன்றிக் கடனாக நமக்கு உதவியும் வருகின்றன. ஆனாலும், பால் கறக்காத மாட்டுக்குத் தரமான தீவனம் போட்டால் கட்டுபடி ஆகாது என்று வாதிடும், பலருக்கும் தெரிவதில்லை, தன்வினை தன்னைச் சுடும் என்று.
இதில், நாட்டு மாடு தேவதையைப் போன்றது என்று போற்றிக் கொள்வதும் உண்டு. எந்த மாடாக இருப்பினும் அதன் ஆயுட்காலத்தில் அது மாடாகவே உழைக்கும். ஆண்டுக்கு ஒருமுறை ஈன்று, பண்ணையை வளர்க்கும் அளப்பரிய ஆற்றல் பசுக்களுக்கு உண்டு என்பதை அறியாமல், அவற்றுக்கு ஏனோதானோ என்று தீவனமிடுவதும், அவற்றை விற்று விடுவதும், விவசாயிகளிடம் உள்ள பிழையாகும்.
அதிகமாகச் செலவு செய்து தான் பசுக்களைப் பேண வேண்டும் என்பதில்லை. முறையான தீவனத் திட்டத்தை வகுத்து, கோ.4 இரகம் போன்ற புல் வகைகளைப் பசுக்களுக்கு இடலாம். பயறுவகைத் தீவனப் பயிர்களை இடலாம். அசோலா மற்றும் ஹைட்ரோபோனிக்ஸ் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து இடலாம்.
மேலும், புண்ணாக்கு வகைகள், தவிட்டு வகைகள், பருத்தி விதை, புளியங்கொட்டை, தாதுப்புக் கலவை, கடலைக்கொடி, ஊறுகாய்ப்புல் என்னும் சைலோ உணவுகள், இராகி, சோயா மொச்சை, இலைதழை, மல்பரி இலைகள் போன்றவற்றைத் தீவனமாக இடலாம். கறவையில் இல்லாத பசுக்களுக்கும் அவற்றின் உடல் எடைக்குத் தகுந்த தீவனத்தைத் தருவோம், அவற்றை நன்கு பேணி, நலமாக வாழ வைப்போம்.

முனைவர் பா.இளங்கோவன்,
மேனாள் கூடுதல் இயக்குநர், வேளாண்மைத்துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

