இயற்கை வேளாண்மை (Organic Farming) என்றால், வெறும் இயற்கை உரம் போடுவது தான், நாட்டு மாடுகளை வளர்ப்பது தான், தென்னந் தோப்பில் வெறும் தென்னை மட்டைகளை வெட்டி மூடாக்குப் போடுவது தான் என்பன போன்ற தவறான கருத்துகள் பரப்பி விடப்பட்டு உள்ளன. ஆம். செய்ய வேண்டியதைச் செய்யாமல் விடுவதும் அறியாமை தான், நன்கு அறிய ஆர்வமின்றிப் பிறர் பேச்சைக் கேட்பதும் அறியாமை தான்.
நம் நாடு விடுதலை அடைந்ததில் இருந்தே, வேளாண் நிபுணர்களால், ஒருங்கிணைந்த மண்வளம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வகையில், பல்வகைப் பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
அனைத்துப் பயிர்களுக்கும் இட வேண்டிய இயற்கை வேளாண் இடுபொருள்கள் (Organic farming inputs) பலப்பல உள்ளன. நல்ல பல உத்திகளும் உள்ளன. குறிப்பாக, தொழுவுரம், பசுந்தாள் உரம், தழையுரம், பயிர்க்கழிவுகள், உயிர் உரங்கள், பல பயிர்கள் சாகுபடி, வேலிப்பயிர் மற்றும் வரப்புப்பயிர் சாகுபடி, உரக்குழி அமைத்தல், மண்புழு உரம் தயாரித்து இடுதல் ஆகியவற்றில் பெரும்பாலானவை, பல ஆண்டுகளாக வெறும் பரிந்துரைகளாக மட்டுமே உள்ளன.
எந்தவொரு பயிருக்கும் இந்த உரங்கள் மிகவும் தேவை தான். முன்பெல்லாம், இடுபொருள்கள் கிடைக்காத போது வெளியில் இருந்து கொண்டு வந்தாவது போட வேண்டும் என்னும் அக்கறை இருந்தது. ஆனால், இயற்கை வேளாண்மையில், சாகுபடி நிலத்திலேயே தயாரித்து இடுவதும், அங்கே கிடைப்பதை இடுவதும் தான் நல்லது என்று வலியுறுத்திக் கூறப்படுகிறது.
இன்றைய நவீன யுகத்தில் எதுவும் சாத்தியம் என்று கூறுமளவில் வாய்ப்புகள் உள்ளன. எந்த நிலத்திலும் அந்த மண்ணுக்குத் தேவையான இடுபொருள்களை அங்கேயே தயாரித்தும் இடலாம் என்னும் நிலையுள்ளது. இதனால், இடுபொருள்கள் செலவு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. அதனால் தான், இயற்கை வேளாண்மை, உன்னத உத்தியாக, நீடித்த மற்றும் நிலைத்த வேளாண்மைக்கு வழிகோலும் உத்தியாக உள்ளது.
உற்பத்தி மட்டுமல்ல நம் நோக்கம். மண்வளமும் பேணப்பட வேண்டும். நீர் ஆதாரமும் முறையாகப் பயன்பட வேண்டும். இவ்வகையில், பல்லுயிர்களைக் காக்கும் உன்னத சாகுபடி முறையாக, இயற்கை வேளாண்மை உள்ளது.
விவசாயத்தில், பஞ்ச பூதங்களின் தன்மைகளை அறிந்து, சரியான பருவங்களில் முறையான உத்திகளைக் கையாள வேண்டும். ஒவ்வொரு சதுர சென்டி மீட்டரிலும் கிடைக்கும் மழை மற்றும் சூரிய ஒளியைப் பாழாக்காமல் பயன்படுத்துவதும் அவசியம்.
தரை முதல் வானம் வரை அடுக்கடுக்காகப் பலவகைப் பயிர்களை வளர்த்திட வேண்டும். மேலும், கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு முதலிய துணைத் தொழில்களையும் செய்திட வேண்டும்.
இத்தகைய நன்மைகள் பலவற்றைக் கண்முன்னே காட்டும் இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் ஈடுபட்டால் தான், நோயற்ற வாழ்வு மற்றும் குறைவற்ற செல்வத்துடன், இந்த மனித சமூகம் வாழ முடியும்.

முனைவர் பா.இளங்கோவன்,
மேனாள் கூடுதல் இயக்குநர், வேளாண்மைத்துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

