மண்வளம் பெருகிட மண் புழுக்கள் பெரிதும் உதவுகின்றன. இவை, தமக்குக் கிடைக்கும் பயிர்க் கழிவுகளை உண்டு, நன்மை செய்யும் உரமாக மாற்றித் தருவது நாம் அறிந்ததே. மேலும், இந்த மண் புழுக்கள் எப்போதும் ஈரமாக இருக்கும் வகையில், தோலின் வழியே வியர்வை போன்ற திரவம், சுரந்து கொண்டே இருக்கும்.
இந்தத் திரவம், சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாக விளங்குகிறது. இதுதான் மண்புழுக் குளியல் நீராகும். இதை, வெர்மிவாஷ் என்று ஆங்கிலத்தில் கூறுவர். இதை எளிய முறையில் தயாரிக்கலாம். அதாவது, மண் புழுக்களை, ஒரு தொட்டியில் அல்லது பானையில் வளர்க்க வேண்டும். இந்தப் பானை அல்லது தொட்டியின் அடியில், நீர் வெளியேறும் வகையில், 2-3 சிறு துளைகளை இட வேண்டும்.
மண் புழுக்கள் உள்ள பானை அல்லது தொட்டிக்கு மேலே, அடியில் சிறு துளையுள்ள கலயம் ஒன்றை இட்டு, அதில் நீரை ஊற்றி வைத்து, அந்த நீர் சொட்டுச் சொட்டாக விழும் வகையில் செய்ய வேண்டும்.
இப்படிச் சொட்டுச் சொட்டாக விழும் நீரானது, மண் புழுக்களை நனைப்பதுடன், பானை அல்லது தொட்டியின் அடியிலுள்ள துளைகள் வழியே வெளியேறும். இதுவே மண்புழுக் குளியல் நீராகும். இந்த நீரானது, பழுப்பு நிறத்தில் தேநீரைப் போல இருக்கும். சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாக விளங்கும் இதைச் சேகரித்துப் பயிர்களுக்குத் தரலாம்.
அதாவது, ஒரு லிட்டர் மண்புழுக் குளியல் நீருக்கு 9 லிட்டர் நீர் வீதம் கலந்து, பயிர்களின் வேர்ப்பகுதியில் ஊற்றலாம். அல்லது சொட்டுநீர்ப் பாசனத்தில் கலந்து விடலாம். அல்லது தெளிப்பான் மூலம் பயிர்களில் தெளித்தும் விடலாம்.
காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள், மலர்ப் பயிர்கள், மலைத்தோட்டப் பயிர்கள், தென்னை போன்றவற்றில் கூடுதல் மகசூலைப் பெறுவதற்கு, மண்புழுக் குளியல் நீர் உதவுகிறது. இதை, மாதம் ஒருமுறை பயிர்களுக்குக் கொடுக்க வேண்டும். இதைச் சொந்தமாகத் தயாரிக்க முடியாதவர்கள், இதைத் தயாரிப்போரிடம் இருந்து வாங்கியும் பயன்படுத்தலாம்.

டாக்டர் பா.இளங்கோவன்,
மேனாள் கூடுதல் இயக்குநர், வேளாண்மைத்துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

