அறுபதில் இருந்து 120 நாட்களில் விளையக்கூடிய, அறுபதாம் குறுவை, கருங்குறுவை, பூங்கார், கார், குழியடிச்சான், சிங்கினிக்கார், அன்னமழகி, உவர்முண்டா, குள்ளங்கார் போன்ற, குறுகிய கால இரகங்கள், குறுவைப் பட்டத்தில் பயிரிட ஏற்றவை.
நூற்றி முப்பதில் இருந்து 140 நாட்களில் விளையக்கூடிய, தூயமல்லி, இலுப்பைப்பூ சம்பா, சீரகச்சம்பா, வாசனைச் சீரகச்சம்பா, தேங்காய்ப்பூ சம்பா, கவுனி, சிவப்புக்கவுனி, சேலம் சன்னா, சம்பா மோசனம், குடைவாழை போன்ற, மத்திய கால இரகங்கள், சம்பா பட்டத்தில் பயிரிட ஏற்றவை.
நூற்றி நாற்பதில் இருந்து 200 நாட்களில் விளையக்கூடிய, மாப்பிள்ளைச் சம்பா, காட்டுயானம், ஒட்டடையான், கருடன் சம்பா, நீலஞ்சம்பா, தங்கச்சம்பா, வாடன் சம்பா போன்ற, நீண்டகால இரகங்கள், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பயிரிட ஏற்றவை.
தமிழ்நாட்டில், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, முன் சம்பா, சம்பா, பின் சம்பா, தாளடி ஆகிய பட்டங்களில், நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
நவரை
டிசம்பர், ஜனவரி மாதங்கள், நவரைப் பட்டத்துக்கான காலமாகும். இந்தப் பட்டத்தில் பயிரிட, 120 நாட்களுக்குள் விளையும் இரகங்களே ஏற்றவை. இவ்வகையில், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, நகப்பட்டினம், மதுரை, தேனி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், நவரைப் பட்டத்தில் நெல் பயிர் செய்யப்படுகிறது.
சொர்ணவாரிப் பட்டம்
ஏப்ரல், மே மாதங்கள், சொர்ணவாரிப் பட்டத்துக்கான காலமாகும். இந்தப் பட்டத்தில் பயிரிட, 120 நாட்களுக்குள் விளையும் இரகங்களே ஏற்றவை. இவ்வகையில், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில், நவரைப் பட்டத்தில் நெல் பயிர் செய்யப்படுகிறது.
கார் பட்டம்
மே, ஜூன் மாதங்கள், கார் பட்டத்துக்கான காலமாகும். இதிலும் குறுகிய கால நெல் இரகங்களே பயிரிட ஏற்றவை. இவ்வகையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில், கார் பட்டத்தில் நெல் பயிர் செய்யப்படுகிறது.
குறுவைப் பட்டம்
ஜூன், ஜூலை மாதங்கள், குறுவைப் பட்டத்துக்கான காலமாகும். இந்தப் பட்டத்திலும் குறுகிய கால நெல் இரகங்களே பயிரிட ஏற்றவை. இவ்வகையில், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், கரூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில், கார் பட்டத்தில் நெல் பயிர் செய்யப்படுகிறது.
முன் சம்பா பட்டம்
ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள், முன் சம்பா பட்டத்துக்கான காலமாகும். இதில், 130-135 நாட்களில் விளையும் நெல் இரகங்களே பயிரிட ஏற்றவை. இவ்வகையில், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், மதுரை, தேனி, இராமநாதபுரம், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில், முன் சம்பா பட்டத்தில் நெல் பயிர் செய்யப்படுகிறது.
சம்பா பட்டம்
ஆகஸ்ட் மாதம், சம்பா பட்டத்துக்கான காலமாகும். இதில், மத்திய கால இரகங்கள் மற்றும் நீண்டகால இரகங்களைப் பயிரிடலாம். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் சம்பா சாகுபடி நடைபெறுகிறது.
பின் சம்பா பட்டம்
செப்டம்பர், அக்டோபர் மாதங்கள், பின் சம்பா பட்டத்துக்கான காலமாகும். இந்தப் பட்டம், தாளடி, பிசாணம் என்றும் அழைக்கப்படும். இதில், மத்திய கால இரகங்கள் மற்றும் நீண்டகால இரகங்களைப் பயிரிடலாம்.
பின் தாளடிப் பட்டம்
அக்டோபர், நவம்பர் மாதங்கள், பின் சம்பா பட்டத்துக்கான காலமாகும். இதில், 115-120 நாட்களில் விளையும் நெல் இரகங்களைப் பயிரிடலாம். இவ்வகையில், தஞ்சாவூர், கரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இந்தப் பட்டத்தில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.
பிரிட்டோராஜ்,
வேளாண் பொறியாளர் மற்றும் ஆலோசகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

