கறவை மாடுகளில் கருச்சிதைவு என்பது, பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் இனப்பெருக்க நோயாகும். கருத்தரித்த 42 முதல் 260 நாட்களுக்குள், கருவானது கலைந்து வெளியேறுவதைக் கருச்சிதைவு என்கிறோம். கறவை மாடு வளர்ப்பில் ஏற்படும் இனப்பெருக்கச் சிக்கல்களில் மிக முக்கியமானது கருச்சிதைவு.
ஒரு பண்ணையில் 2-3 சதவீதக் கருச்சிதைவு இயல்பானது. இதுவே, 5 சதத்துக்கு மேல் ஏற்பட்டால், அது, தொற்று நோய்க்கான எச்சரிக்கை ஆகும். இதனால், பால் உற்பத்தி இழப்பு, சினைப்பிடிப்பில் தாமதம், மருத்துவச் செலவு மற்றும் மாட்டையே கழிக்க வேண்டிய நிலையும் ஏற்படும்.
கருச்சிதைவு ஏற்படும் காலம்
- ஆரம்பக்காலக் கருச்சிதைவு: 42 நாட்கள் முதல் 3 மாதம் வரை.
- இடைக்காலக் கருச்சிதைவு: 3 முதல் 6 மாதம் வரை.
- இறுதிக்காலக் கருச்சிதைவு: 6 முதல் 9 மாதம் வரை. இதுவே அதிகம்.
கருச்சிதைவுக்கான காரணங்கள்; தொற்றுக் காரணங்கள்
- புருசெல்லோசிஸ் – 6 முதல் 9 மாதங்களில் நிகழும் கருச்சிதைவு.
- லெப்டோஸ்பைரோசிஸ்.
- ஐ.பி.ஆர். நோய்.
- பி.வி.டி. நோய்.
- டிரைக்கோமோனியாசிஸ்.
- பூஞ்சைத் தொற்று.
தொற்றல்லாத காரணங்கள்
- வைட்டமின் ஏ, செலினியம், அயோடின் போன்ற சத்துகள் குறைபாடு.
- புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் குறைபாடு.
- நச்சுத் தீவனத்தை உண்பது.
- அடிபடுதல் மற்றும் மன அழுத்தம்.
- மரபியல் குறைபாடு.
அறிகுறிகள்
- கர்ப்பக் காலத்தில் கன்று வெளியேறுதல்.
- பிறப்புறுப்பில் இரத்தம் கலந்த சளி வடிதல்.
- நஞ்சுக்கொடி தங்குதல்.
- காய்ச்சல் மற்றும் தீவனம் உண்ணாமை.
- மாடுகளில் தொடர்ச்சியாகக் கருச்சிதைவு ஏற்படுதல்.
பொருளாதாரத் தாக்கம்
ஒருமுறை ஏற்படும் கருச்சிதைவால், ஒரு விவசாயிக்கு, 15,000 முதல் 30,000 ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.
நோயைக் கண்டறிதல்
- கருச்சிதைவான கன்று மற்றும் நஞ்சுக்கொடியைப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
- இரத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
- புருசெல்லோசிஸ் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள்
சுகாதார மேலாண்மை: கருச்சிதைவான மாட்டை உடனே தனிமைப்படுத்த வேண்டும். கரு, நஞ்சுக்கொடி மற்றும் சுரப்புகளை 2 அடி ஆழத்தில் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும். கொட்டகையை 1 சதவீத பினாயில் அல்லது சுண்ணாம்புக் கரைசலால் கழுவ வேண்டும்.
தடுப்பூசித் திட்டம்: புருசெல்லாத் தடுப்பூசியை, 4-8 மாதப் பெண் கன்றுகளுக்குப் போடுவது, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக அமையும். IBR-BVD- Leptospirosis கூட்டுத் தடுப்பூசியை, சினைக்கு 30 நாட்களுக்கு முன் போட வேண்டும்.
பரிசோதனை: புதிய கறவை மாடுகளை வாங்குமுன், புருசெல்லா பரிசோதனை செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை அனைத்துக் கறவை மாடுகளுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.
தீவன மேலாண்மை: தினமும் 30 கிராம் தாதுப்புக் கலவை, பசுந்தீவனம், பூஞ்சை இல்லாத தீவனம் வழங்கப்பட வேண்டும்.
விவசாயிகளுக்கான ஆலோசனை
கருச்சிதைவு ஏற்பட்டால், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். கையுறை இல்லாமல் கருவைத் தொடக்கூடாது. கருச்சிதைவான மாட்டின் பாலை, காய்ச்சாமல் குடிக்கக் கூடாது. இது, பண்ணைப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நோய் என்பதால், தடுப்பதே சிறந்தது.
கருச்சிதைவை முதலிலேயே கண்டறிந்து முறையான தடுப்பூசி மற்றும் பண்ணை மேலாண்மை மூலம் கட்டுப்படுத்தினால், பால் உற்பத்தியாளர்களின் பொருளாதார இழப்பைத் தடுக்கலாம்.

முனைவர் அ.தங்கமணி,
முனைவர் பி.விக்னேஷ்வரன், முனைவர் அ.சபரிநாதன், முனைவர் வை.பிரபாகரன், முனைவர் அ.இளங்கோ, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல், சேலம் – 636 112, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

