நமது உணவில் முதலிடத்தில் இருப்பது நெல்லரிசிச் சோறு. எனவே, நெல்லின் தேவை அதிகமாக இருப்பதால், நீர்வளம் உள்ள பகுதிகளில் நெல் சாகுபடி பெருமளவில் நடைபெறுகிறது. சாகுபடிக் காலத்தில் நெற்பயிரைப் பல்வேறு நோய்கள் தாக்குவதால், மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால், இந்த நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
குலை நோய்
அறிகுறிகள்: இலைகளில் கண் வடிவப் புள்ளிகள் தோன்றும். கழுத்துப் பகுதியில் பழுப்புப் புள்ளிகள் தோன்றும். கதிர்கள் ஒடிந்து தொங்கும். கணுக்கள் கறுப்பாக மாறி ஒடிந்து விடும்.
மேலாண்மை: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திரம் அல்லது கார்பன்டாசிம் அல்லது 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்து, நாற்றங்காலை அமைக்க வேண்டும்.
நடவுக்கு முன், நாற்றுகளின் வேர்களை, 2.5 கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் கலந்த கரைசலில், 30 நிமிடங்கள் வரை நனைய வைத்து எடுத்து, நடவு செய்ய வேண்டும்.
குலை நோயைத் தாங்கி வளரும் இரகங்களைப் பயிரிட வேண்டும். தழைச்சத்து உரத்தை மூன்றாகப் பிரித்து இட வேண்டும். வரப்பில் முளைக்கும் களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மோடாமிநோஸ்டரோபின் அல்லது அசாக்ஸ்ட்ரோபின் அல்லது டிரைசைகலசோல் மருந்தை 0.1 சதவீத அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
நெற்பழ நோய் – இலட்சுமி நோய்
அறிகுறிகள்: நெல் மணிகள் மஞ்சள் நிறத்தில், மெல்லிய பந்தைப் போல வளரும். நெல் மணிகள் முதிரும் போது, மஞ்சள் நிறம் கரும்பச்சையாக மாறும்.
மேலாண்மை: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நோய்த்தாக்கம் உள்ள இடங்களில், முன்கூட்டியே சாகுபடி செய்ய வேண்டும்.
நெற்பயிரின் புடைப்பருவம் மற்றும் 50 சதவீதம் பூக்கும் பருவத்தில், பிராப்பிகனாசோல் 25 ஈ.சி. மருந்தை, 0.1 சதவீதக் கரைசலாக்கி அல்லது காப்பர் ஹைட்ராக்ஸைடு 77 டபிள்யூ.பி. மருந்தை, 0.25 சதவீதக் கரைசலாக்கித் தெளிக்க வேண்டும்.
பாக்டீரிய இலைக்கருகல் நோய்
அறிகுறிகள்: இலைப்பரப்பில் நீர்க்கோர்த்த மஞ்சள் வரிகள் தோன்றும். இலைகளில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறம் தோன்றும். இளம் புள்ளிகளில் பாலைப் போன்ற அல்லது பனித்துளியைப் போன்ற திரவம் வடியும். இறுதியில் இலைகள் காய்ந்து விடும்.
மேலாண்மை: விதைகளை, 0.025 சதவீத அக்ரிமைசின் கரைசலில் நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மூன்று சதவீத வேப்ப எண்ணெய்க் கரைசல் அல்லது ஐந்து சதவீத வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
எக்டருக்கு, 300 கிராம் வீதம் கலந்த ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட், டெட்ராசைக்கலின் கலவை அல்லது 1.25 கிலோ காப்பர் ஆக்சிக்ளோரைடு வீதம் எடுத்துத் தெளிக்க வேண்டும்.
இலையுறைக் கருகல் நோய்
அறிகுறிகள்: இலையுறையின் மேல், நீள்வட்டச் சாம்பல் நிறப் புள்ளிகள் தோன்றும். தாக்குதல் தீவிரமாகும் போது, பயிரின் அனைத்து இலைகளும் கருகி விடும்.
மேலாண்மை: கோடையில் வயலை ஆழமாக உழ வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்து, நாற்றங்காலை அமைக்க வேண்டும்.
நடவுக்கு முன் நாற்றுகளின் வேர்களை, 2.5 கிலோ பேசில்லஸ் சப்டிலிஸ் கலந்த கரைசலில், 30 நிமிடங்கள் வரை நனைய வைத்து எடுத்து, நடவு செய்ய வேண்டும்.
மூன்று சதவீத வேப்ப எண்ணெய்க் கரைசலைத் தெளிக்கலாம். 0.1 சதவீத கார்பன்டாசிம் அல்லது அசாக்ஸ்ட்ரோபின் அல்லது குளோரோத்தலோனில் கரைசலைத் தெளிக்கலாம்.

முனைவர் த.துர்காதேவி,
கு.பிரபாகர், பயிர் நோயியல் துறை, வானவராயர் வேளாண்மைக் கல்வி நிறுவனம், மணக்கடவு, பொள்ளாச்சி – 642 103.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

