கிராமங்களில் உள்ள ஏழை எளிய விவசாயிகளின் வாழ்வாதாரமாக எருமைகள் விளங்குகின்றன. நம் நாட்டின் பால் உற்பத்தியில் எருமைகளின் பங்கு முக்கியமானது. எருமைப்பாலில் 7 சதம் கொழுப்புச் சத்து உள்ளது. எருமை வளர்ப்பில் முக்கியப் பிரச்சினை, பால் வற்றிய காலத்துக்கும், அடுத்த கன்றை ஈனும் காலத்துக்குமான இடைவெளி அதிகமாக இருப்பது தான். கன்றை ஈன்ற ஆறு மாதத்துக்குள் எருமைகள் சினைப் பிடிக்காவிடில், எருமை வளர்ப்பு இலாபமற்றதாக அமையும்.
எருமைகளின் இன விருத்தியில் பலவிதச் சிக்கல்கள் உள்ளன. அவையாவன: கருப்பை நோய்ப் பாதிப்பால் கருவுறாமை, கன்று இடைவெளிக்காலம் நீளுதல், முறையற்ற பருவச்சுழற்சி, பருவச்சுழற்சியைப் பற்றிய அறியாமை, பருவம் தவறிய செயற்கைமுறைக் கருவூட்டல்.
இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வாக, எருமை மாடுகளில் பருவச் சுழற்சியை ஒருமைப்படுத்தி (ஓவோ சிங்கத் தொழில் நுட்பம்) உயர்வகைக் காளைகளின் விந்தணுக்களைக் கொண்டு, சரியான நேரத்தில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யலாம். இந்த நவீனத் தொழில் நுட்பத்தை, ஐந்து நிலைகளில் செயல்படுத்தலாம். அவையாவன:
எருமைகளைத் தேர்வு செய்தல்
கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்களை நடத்தும் போது மற்றும் கால்நடை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்து, இனப்பெருக்கக் குறையுள்ள எருமைகளை, சினைப்பருவ ஒருங்கிணைப்பு முறைக்குத் தேர்வு செய்ய வேண்டும்.
குடற்புழு நீக்கம் மற்றும் தாதுப்புக்கலவை அளித்தல்
இனப்பெருக்கக் குறையுள்ள எருமைகளைத் தேர்ந்தெடுத்த பிறகு, அவற்றுக்கு முறையாகக் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். மேலும், அவற்றின் உடல் வளர்ச்சிக்கு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் தயாரிப்பான தனுவாஸ் தாதுப்புக் கலவையை, தினமும் 30 கிராம் வீதம் 30 நாட்களுக்குத் தீவனம் அல்லது நீரில் கலந்து கொடுக்க வேண்டும். அடுத்து, தேவையான அடர்தீவனம் மற்றும் பசுந்தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.
பருவச்சுழற்சியை ஒருங்கிணைத்தல்
எருமைகளில் பருவச் சுழற்சியை ஒருங்கிணைக்க, கணநீர் மருந்துகளை ஊசி மூலம் செலுத்த வேண்டும். இதன் மூலம், அனைத்து எருமைகளையும் குறிப்பிட்ட நாளில் பருவத்துக்கு வர வைக்க இயலும். தேர்ந்தெடுக்கப்பட்ட எருமைகளுக்கு முதல்நாள் GnRH என்னும் கணநீர் மருந்தை உடற்சதைக்கு இடையே ஊசி மூலம் செலுத்த வேண்டும். பிறகு, ஏழாவது நாளில் PGF2 என்னும் மருந்தை ஊசி மூலம் செலுத்த வேண்டும். மேலும், 9-ஆம் நாளில் GnRH என்னும் மருந்தை, மறுபடியும் ஊசி மூலம் செலுத்த வேண்டும்.
செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல்
முறையான சிகிச்சை அளித்ததன் தொடர்ச்சியாகப் பத்தாம் நாளில் பருவத்துக்கு வரும் எருமைகளுக்கு உயர்வகைக் காளைகளின் விந்தணுக்களைக் கொண்டு, செயற்கை முறையில் கருவூட்டல் செய்ய வேண்டும்.
சினைப்பரிசோதனை செய்தல்
இந்த சிகிச்சையின் மூலம், சினை ஊசி போடப்பட்ட அனைத்து எருமைகளுக்கும் 90 நாட்களில் சினைப் பரிசோதனை செய்ய வேண்டும். இம்முறையில் சினையுற்ற எருமைகளை முறையாகப் பராமரித்தால், ஆண்டுக்கு ஒரு கன்றைப் பெற்றுப் பயனடையலாம். இப்போது, 30 நாளிலேயே அல்ட்ரா சவுண்ட் கருவியின் மூலம் கருவைக் கண்டறியலாம்.
எனவே, எருமைகளை வளர்க்கும் விவசாயிகள், அருகிலுள்ள கால்நடை மருத்துவர்களை அணுகி, இந்தத் தொழில் நுட்பத்தை, தங்களின் மாடுகளில் பயன்படுத்தினால், அதிக உற்பத்தியையும் இலாபத்தையும் அடையலாம்.

முனைவர் க.தேவகி,
உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் – 603 203.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

