மாஞ்செடிகள் வறட்சியைத் தாங்கி வளர்வதற்கு, அவற்றின் வேர் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். இதற்கு, நன்மை செய்யும் உயிர் உரங்கள் பல உள்ளன. வேர் வளர்ச்சி சிறப்பாக அமைய, மண்புழு உரத்துடன், உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவைக் கலந்து, மாஞ்செடிகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், வறட்சியால் காய்ந்து போகும் நிலை ஏற்படாது. பச்சைப் பசேலென வளர்ந்து நின்று நல்ல மகசூலைத் தரும்.
மா சாகுபடி சிறப்பாக அமைவதற்குப் பல்வேறு பயிர்ப் பாதுகாப்பு முறைகள் உள்ளன. குறிப்பாக, இயற்கை வேளாண்மை உத்திகளில், வேப்பம் புண்ணாக்குப் பயன்பாடு, தாவரக்கரைசல், பஞ்சகவ்யா, தசகவ்யா, மண்புழுக் குளியல் நீர்த் தெளிப்பு முதலியன நன்மை தருபவை.
மாமரங்களில் தேவையற்ற மற்றும் நோயுற்ற கிளைகளைக் கழித்து விட வேண்டும். வெட்டுப்பட்ட இடங்களில், போர்டோ கலவையைப் பூசிவிட வேண்டும். மாமரங்கள் பூக்கும் காலத்தில், பாசனம் சரியாக இருந்தால், காய்ப்பிடிப்பு நன்றாக இருக்கும்.
மேலும், ஒரு மரத்துக்கு, முதலாண்டில், 10 கிலோ தொழுவுரம், 1 கிலோ மண்புழு உரம், 440 கிராம் யூரியா, 1,250 கிராம் சூப்பர் மற்றும் 480 கிராம் பொட்டாஷ் தேவை. ஐந்தாம் ஆண்டு வரை இவற்றை இதேயளவில் இட வேண்டும்.
ஐந்து ஆண்டுக்கு மேல், ஒரு மரத்துக்கு 5 கிலோ மண்புழு உரம், 2.200 கி.கி. யூரியா, 6.200 கி.கி. சூப்பர் மற்றும் 2.900 கி.கி. பொட்டாசை இட வேண்டும். மானாவாரி சாகுபடியில் உள்ள மாமரங்களுக்கு, மண்ணில் ஈரமுள்ள போது மற்றும் மழைக்காலத்தில், மண்புழு உரத்தை அதிகமாகவும், பிற உரங்களை அதேயளவிலும் இடலாம்.
மழைக்காலத்தில் மாந்தோப்பை நன்கு உழுது மழைநீரைச் சேமிக்கலாம். அடர் நடவு முறையைக் கடைப்பிடித்து நீரில் கரையும் உரங்களைத் துல்லியமாக அளிப்பதன் மூலம், நீடித்த மற்றும் உச்சக்கட்ட மகசூலைப் பெறலாம். மாமரங்களில் கவாத்து என்பது மிகவும் அவசியம், கவாத்துச் செய்யாமல் நிழல் தரும் கூடாரம் போல் மாமரங்களை வளர்த்தால், பலன் குறைவாகவே கிடைக்கும்.

முனைவர் பா.இளங்கோவன்,
மேனாள் கூடுதல் இயக்குநர், வேளாண்மைத்துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.

