புளிப்பான நாரத்தங்காயை ஊறுகாயாகப் பயன்படுத்தலாம். உணவு எளிதாகச் செரித்த பிறகும், தனது இயல்பான மணத்தை ஏப்பமாக வெளிப்படுத்தும்.
சாப்பிட்ட உணவை எளிதில் செரிக்க வைத்து, வாயுவை நீக்கி, எருவை இளக்கி இயல்பாக வெளியேற்றும். நாக்கு, இரைப்பை, குடல், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றின் செயல்களைத் தூண்டத் துணையாகும்.
இப்படிச் செய்வதால், மேல் வயிற்றுக் கனம், இதய அழுத்தம் ஆகியன குறையும். நாவறட்சி, கண்ணெரிச்சல், தலைச்சுற்றல் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.
சுவையான உணவாகவும் இருந்து பெரிதும் பங்காற்றும். இதைக் காலையில், வெறும் வயிற்றில் உண்ணக் கூடாது. புளிப்பை முற்றிலும் நீக்கத் தக்க நிலையில் உள்ளவர்கள் நாரத்தங் காயைத் தவிர்த்தல் நல்லது.
துருஞ்சி நாரத்தைப் பழச்சாறுடன் சர்க்கரையைக் கலந்து தயாரிக்கும் துருஞ்சி மணப்பாகு, கருவுற்ற தாய்மார்களின் காலைக் குமட்டல், வாந்தி, தலைச் சுற்றல், அசதி ஆகியவற்றைக் குறைக்கும். இந்த எளிய தயாரிப்பு நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
பிணிக்கு நாரத்தை: நாரத்தைப் பூவிலிருந்து தேநீரை வடித்துச் கொஞ்சமாகச் சாப்பிட்டால் உடல்வலி நீங்கும். சில மருந்துகளுடன் நாரத்தைத் தீநீரைச் சேர்த்தால், அந்த மருந்தின் திறன் கூடும்.
ஜாதி நாரத்தை, புளிப்பு நாரத்தை ஆகியவற்றில் ஒன்றின் இலைகளைச் சேகரித்துச் சுத்தம் செய்து, உப்பைக் கலந்து இடித்து வைத்துக் கொண்டு, ஊறுகாயாகப் பயன்படுத்துவர்.
வயிற்றில் கீரைப்பூச்சி, கிருமி உள்ளோர்க்கு, இந்தப் பொடியுடன், வேப்பிலைக் கொழுந்தைச் சேர்த்துக் கொடுப்பர். இதில், வேப்பிலையின் கசப்பு நீங்கும்.
இந்த மருந்து பின்னாளில், வேப்பிலைக் கட்டி என்றானது. காய்களில் உப்பிட்டு ஊறுகாயாகப் பயன்படுத்தினால், இரத்தம் சுத்தமாகும். மலக்கிருமிகள் அழியும். நோய்கள் அகலும்.
குறிப்பாகக் காய்ச்சல் விட்டதும் உண்ணும் எளிமையான உணவுடன் நாரத்தை ஊறுகாயைச் சேர்த்து உண்டால் நோயினால் ஏற்பட்ட களைப்பு நீங்கும்.
சுவையை உணர முடியாதபடி நாக்கானது தடித்தோ, மரத்தோ இருக்கும் போது, நாரத்தை ஊறுகாயைச் சேர்த்து உண்டால், உணவின் மீது விருப்பம் கூடும்.

மரு.ப.குமாரசாமி, மேனாள் அரசு சித்த மருத்துவர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



