கற்பூரவல்லி அல்லது ஓமவள்ளி இலை, சளி, இருமல், தொண்டைக் கரகரப்பு என, குளிர்ச்சி சார்ந்த எல்லா நோய்களையும் விரட்டக் கூடியது. மழைக்காலக் குடிநீரில் 3-4 கற்பூரவல்லி இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்து அருந்தினால், இருமல் கட்டுப்படும். அல்லது இருமல் வரும் போது, இந்த இலையை மென்று சாப்பிட, இருமல் குறையும்.
மூக்கடைப்பு, சளி, இருமலை நீக்க, கற்பூரவள்ளி இலைகள் உதவியாக இருக்கும். சில கற்பூரவல்லி இலைகளை நீரிலிட்டு, நன்கில் ஒரு பங்காகக் குறையும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி, வெதுவெதுப்பாகக் குடிக்கலாம். சுவைக்காகத் தேனைச் சேர்த்துப் பருகலாம்.
கற்பூரவல்லி இலைகள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. வெந்நீரில் கொதிக்கும் கற்பூரவல்லி இலைகளின் ஆவியை உள்ளிழுத்தால், நெஞ்சு நெரிசல் நீங்கும். நெரிசலில் இருந்து நிவாரணம் கிடைக்க, அதன் சாற்றை நெஞ்சில் தடவலாம். உயர் இரத்தச் சர்க்கரையைத் தவிர, நீரிழிவுடன் தொடர்புள்ள பல பிரச்சனைகளை, கற்பூரவல்லி இலை மூலம் குணப்படுத்தலாம்.
கற்பூரவல்லி எண்ணெய், புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, மார்பகப் புற்றுநோய்ச் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். நுரையீரல் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதிலும் சிறப்பாகச் செயல்படும். கற்பூரவல்லி இலைகள், நன்கு செரிக்கவும், பெருங்குடல் ஆஸ்துமா, வாயு போன்றவை தீரவும் உதவும்.
கற்பூரவல்லியில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை, ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டவும் உதவும். கற்பூரவல்லி இலையில் உள்ள தைமால், கார்வாக்ரோல் போன்ற சேர்மங்கள், தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும், நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன.

முனைவர் கே.குருசாமி, முனைவர் ஜி.ஜி.கவிதாஸ்ரீ, முனைவர் எம்.ஆனந்த், முனைவர் ஜி.அமுதசெல்வி, உணவுப் பதனப் பொறியியல் துறை, வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் – 641 003.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



