My page - topic 1, topic 2, topic 3

திருந்திய நெல் சாகுபடி!

திருந்திய நெல் சாகுபடி!

குறைவான விதை, குறைவான நீர், குறைவான வேலையாட்கள் மூலம், அதிகளவில் மகசூலைத் தருவது, திருந்திய நெல் சாகுபடி முறை. இப்போது பரவலாக இம்முறையில் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

திருந்திய நெல் சாகுபடியின் கோட்பாடுகள்

ஏக்கருக்கு 2-3 கிலோ விதை போதுமானது.

ஏக்கருக்கு 1 சென்ட் நாற்றங்கால் போதுமானது.

10-14 நாட்கள் என, குறைந்த வயதுள்ள நாற்றுகள் பயன்பாடு.

குத்துக்கு ஒரு நாற்றுப் போதுமானது.

22.5×25 செ.மீ. இடைவெளியில் வரிசை நடவு செய்தல்.

இவ்வகையில், சதுர மீட்டருக்கு 16 குத்துகள் போதுமானது.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

களையைக் கருவி மூலம் கட்டுப்படுத்துவதால் ஆட்செலவு குறைவு.

உருளும் களைக்கருவியால் பயிர் வளர்ச்சி அதிகமாகிறது.

வயலில் நீரைத் தேக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை.

பாசனநீர்த் தேவை 40-50 சதவீதம் குறைகிறது.

வேர் வளர்ச்சியால் சத்துகளின் பயன்பாடு கூடுகிறது.

அதிகத் தூர்கள், அதிகக் கதிர்கள் மற்றும் அதிக மணிகள் உற்பத்தி.

பயிர்களில் சாயாத தன்மை அதிகமாகிறது.

அதிகத் தானியம், அதிக வைக்கோல் மகசூல் மற்றும் அதிக இலாபம்.

திருந்திய நெல் சாகுபடி நாற்றங்கால்

நல்ல வடிகால் வசதியும், நீர் ஆதாரமும் உள்ள இடத்தில் நாற்றங்காலை அமைக்க வேண்டும்.

ஒரு ஏக்கர் நடவுக்கான நாற்றங்காலை அமைக்க, ஒரு சென்ட் நிலம், அதாவது 40 சதுர மீட்டர் இடம் தேவை.

இவ்வகையில், நடவு வயலின் அருகில், ஏக்கருக்கு 1×5 மீட்டர் அளவுள்ள எட்டு நாற்று மேடைகளை அமைக்க வேண்டும்.

நாற்றங்காலை, தோட்டக்கால் அல்லது தொழி முறையில் அமைக்க வேண்டும்.

வயல் மண் அல்லது மண்ணுடன் நன்கு மட்கிய தொழுவுரத்தைக் கலந்து நாற்றங்காலை அமைக்க வேண்டும்.

திருந்திய நெல் நாற்றங்காலின் பயன்கள்

குறைந்தளவு விதைகள் போதும்.

குறைந்தளவு இடம் போதும்.

நாற்றங்கால் பராமரிப்புச் செலவு குறைகிறது.

நாற்றுகளை நடவுக்கு எடுத்துச் செல்வது எளிது.

ஒற்றை நாற்றுகளை, எளிதாக நடவு செய்யலாம்.

நாற்றுகள் விரைவாக உயிர்ப் பிடித்து பசுமையாக வளரும்.

சதுர நடவு

இளம் நாற்றுகளை ஒரு குத்துக்கு ஒரு நாற்று முறையில், 22.5×25 செ.மீ, இடவெளியில், சதுர முறையில் நடவு செய்ய வேண்டும்.

சதுர முறையில் நடவு செய்ய, பயிருக்குப் பயிர் 22.5×25 செ.மீ. வரிசையில், நைலான் கயிற்றைப் பயன்படுத்த வேண்டும். இந்தக் கயிற்றில், 22.5×25 செ.மீ. இடைவெளியில் ரிப்பன் துண்டுகளைக் கட்டி, நடவு செய்ய வேண்டும்.

நாற்றுகளை ஆழமாக நடாமல், மேலாக நட வேண்டும். நாற்றுகளின் வேர்கள் மேல் நோக்கி இல்லாமல், படுக்கை வசத்தில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

சதுர நடவின் பயன்கள்

பயிர்களின் வயர்ச்சிக்குத் தேவையான இடைவெளி கிடைக்கிறது.

இதன் மூலம், பயிர்களுக்கு வேண்டிய வெய்யில், காற்று மற்றும் சத்துகள் தடையின்றிக் கிடைக்கும். இதனால், பயிர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

களைக்கருவியைக் குறுக்கும் நெடுக்குமாக இயக்க வழி வகுக்கிறது.

அதிகத் தூர்கள் மற்றும் கதிர்கள் உற்பத்தியாகி, அதிக மகசூல் கிடைக்கிறது.

களை நிர்வாகம்

உருளும் களைக்கருவி மூலம் களைகளை அமுக்கி, மண்ணைக் கிளறி விட வேண்டும்.

நடவு முடிந்து பத்து நாட்கள் கழித்து, பத்து நாட்களுக்கு ஒருமுறை, நான்கு தடவை குறுக்கும் நெடுக்குமாக இயக்க வேண்டும்.

இந்தக் களைக்கருவியை இயக்க ஒரு ஆள் மட்டுமே போதும்.

இக்கருவி மூலம் களைகளை நீக்க, ஏக்கருக்கு 2-3 ஆட்கள் தேவைப்படும்.

களைக்கருவியின் பயன்கள்

மண்ணைப் புரட்டி விடுவதால், நிலத்தில் அதிகக் காற்றோட்டம் ஏற்படுகிறது.

களைகள் மட்கி இயற்கை உரமாக மாறும்.

பயிர்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது.

மேலுரத்தை மண்ணுடன் கலந்து விடுவதால், உர விரயம் தடுக்கப்படுகிறது.

பயிர்களுக்கு அதிகளவில் சத்துகள் கிடைக்கின்றன.

உர நிர்வாகம்

மண் பரிசோதனை செய்யாத இடங்களில், பொதுப் பரிந்துரைப்படி, 100 சத மணிச்சத்து, 25 சத சாம்பல் சத்தை, நடவுக்கு முன் அடியுரமாக இட வேண்டும்.

மேலும், ஏக்கருக்கு, 800 கிராம் சூடோமோனாஸ், 800 கிராம் அசோபாசை எடுத்து, 20 கிலோ தொழுவுரத்தில் கலந்து, நடவுக்கு முன் அடியுரமாக இட வேண்டும்.

ஏக்கருக்கு 5 கிலோ நுண்சத்துக் கலவை வீதம் எடுத்து, மேலுரமாகத் தெளிக்க வேண்டும்.

நட்ட 15-ஆம் நாள், முதல் மேலுரமாகத் தழைச்சத்தையும், 25 சதம் சாம்பல் சத்தையும் இட வேண்டும்.

பிறகு, ஒவ்வொரு வாரமும் பச்சை வண்ண அட்டை மூலம் அறிந்து, தழைச்சத்தை இட வேண்டும்.

அட்டைக் குறையீட்டு எண் 4-க்குக் குறைவாக இருக்கும் போது, தழைச்சத்தை இட வேண்டும்.

ஒவ்வொரு முறையும், குறுவைப் பட்டத்தில், ஏக்கருக்கு 14 கிலோ வீதமும், சம்பா பருவத்தில், 12 கிலோ வீதமும், தழைச்சத்தை இட வேண்டும்.

மீதமுள்ள 50 சதவீதச் சாம்பல் சத்தை, இரு பங்காகப் பிரித்து, தூர்க்கட்டும் பருவத்திலும், பஞ்சு கட்டும் பருவத்திலும் இட வேண்டும்.

நீர் நிர்வாகம்

பஞ்சு கட்டும் பருவம் வரை, காய்ச்சல் மற்றும் பாய்ச்சல் முறையில் பாசனம் செய்ய வேண்டும்.

2.5 செ.மீ. உயரம் நீரை நிறுத்த வேண்டும். அந்த நீர் வடிந்து, நிலத்தில் இலேசான கீறல் வெடிப்புகள் தோன்றிய பிறகு, மறுபடியும் 2.5 செ.மீ. உயரம் நீர்க்கட்ட வேண்டும்.

பஞ்சு கட்டிய பிறகு, 2.5 செ.மீ. உயரம் நீரை நிறுத்தி, அந்நீர் மறைந்ததும் மறுபடியும் நீர்க்கட்ட வேண்டும்.

சிக்கனப் பாசனத்தின் பயன்கள்

மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கிறது.

வேர்களின் வளர்ச்சிக் கூடுகிறது.

நீர்த்தேவை 14-20 சதம் குறைகிறது.

திருந்திய நெல் சாகுபடியின் நன்மைகள்

இளம் நாற்றை நடுவதால், தூர்ப்பிடிப்பு அதிகமாகிறது.

நுண்ணுயிர்கள் பெருகி, பயிர் வளர்ச்சியும், வேர் வளர்ச்சி அதிகரிப்பதால், பயிர்கள் இறுதி வரை சாய்வதில்லை.

சத்துகள் அதிகமாகக் கிடைப்பதால், அறுவடை சமயத்திலும் பயிர்கள் பசுமையாக இருக்கும்.

தானியம் மற்றும் வைக்கோல் மகசூல் கூடுகிறது.

நீரின் தேவை 20 சதம் குறைகிறது.

மகசூல் 15-20 சதம் கூடுகிறது.


திருந்திய நெல் சாகுபடி!

முனைவர் ந.சதீஸ்குமார்,

முனைவர் இரா.நாகேஸ்வரி, முனைவர் இரா.ஜெயஸ்ரீனிவாஸ், முனைவர் ப.துக்கையண்ணன்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • வேலை வாய்ப்பைத் தரும் அசோலா!

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • முயல் மசால் சாகுபடி!

  • பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

  • கோடை உழவு கோடி நன்மை தரும்!

  • நாவற் பழங்களைக் கையாளும் முறைகள்!

  • சன்னல் ஓரத்தில் சத்துச் சுரங்கம்!

  • வேலி மசால் சாகுபடி!

  • அகத்திக்கீரை சாகுபடி!