மழைக்காலம். குளிருக்கும் ஈக்களுக்கும் கொசுக்களுக்கும் பஞ்சமே இருக்காது. அதனால், நோய்களுக்கும் குறைவே இருக்காது. குளிர்காலம் என்பதால், சளி, இருமல் அடிக்கடி உண்டாகும். சுவாசச் சிக்கல் உள்ளோர்க்குச் சொல்லவே வேண்டாம்.
சளி, இருமலால் மிகவும் பாதிக்கப்படுவர். ஈக்கள் நிறையவே இருக்கும். ஈக்கள் மொய்த்த உணவைச் சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி பேதி ஏற்பட வாய்ப்புண்டு.
அதனால், மழைக் காலத்தில் கவனமாக இருந்து, இந்த நோய்கள் நம்மை அண்ட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சரி. கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் இந்த நோய்கள் வந்து விடும். அப்போது இவற்றில் இருந்து எப்படி மீள்வது என்று பார்ப்போம்.
கற்பூரவல்லி இலையை வாட்டிச் சாறெடுத்துப் பருகினால், சளி, இருமல் அகலும். 100 மில்லி தேங்காய் எண்ணெய்யைக் காய்ச்சி, அதில் 2 கிராம் சூடத்தை இட்டுக் கரைந்ததும், மார்பு, விலாப் பகுதியில், தாங்கும் சூட்டில் தேய்த்தால், சளி கரைந்து விடும்.
பத்து கிராம் மாதுளம் பழத்தோலை அரைத்து, தயிரில் கலந்து சாப்பிட்டால் பேதி நின்று விடும். மாதுளம் பழத்தோல் சூரணத்துடன், சுக்கு, மிளகு, சீரகத்தூள், நெய், வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிட்டாலும் பேதி நிற்கும். ஒரு தேக்கரண்டி கசகசாவைத் தயிரில் கலந்து உண்டாலும் பேதி ஓடிப் போகும்.
வாட்டிய வெற்றிலைச் சாறு, கற்பூரவல்லிச் சாறு, ஆமணக்குத் தளிரை விளக்கெண்ணெய்யில் வதக்கி, தொப்புளில் கட்டினால் வயிற்றுவலி அகலும். முள்ளிக்கீரை வேர் 40 கிராம், ஓமம் 10 கிராம், வெள்ளைப் பூண்டு 2 கிராம் எடுத்து அரைத்து, 10 கிராம் அளவில், காலை, மாலை, இரவு என, மூன்று வேளை சாப்பிட்டால் வயிற்றுவலி தீரும்.
இஞ்சிச்சாறு, வெள்ளை வெங்காயச் சாறு 50 மில்லியுடன், 25 மில்லி தேனைக் கலந்து, 15 மில்லி வீதம் 2-3 வேளை சாப்பிட்டால், குமட்டல் நிற்கும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம், அரிசி ஆகியவற்றைச் சமமாக எடுத்துப் பொடித்து, தேன், நெய் சேர்த்து, வெந்நீரில் கலந்து சாப்பிட்டால், பசியின்மை தீரும்.

மரு.சு.சத்தியவாணி எம்.டி., வளசரவாக்கம், சென்னை – 600 087.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



