ஆயுர்வேத மருத்துவத்தில் மஞ்சள் அதிகளவில் பயன்படுகிறது. மஞ்சள் வாசம் அமைதியைத் தரும். மஞ்சள் நிறம் திடத்தைத் தரும்.
மஞ்சள் நமக்கு நோயெதிர்ப்பு சக்தியைத் தரும். நோயைத் தடுக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடலுக்கு நிறத்தைத் தரும், மஞ்சளைச் சுட்டுப் புகையை நுகர்ந்தால், மூக்கடைப்பும் சளியும் நீங்கும். மஞ்சளை மற்றும் வேப்பிலையைச் சமமாக எடுத்து அரைத்துத் தடவினால், கட்டி, கொப்புளம், அம்மை, சேற்றுப்புண் ஆகியன குணமாகும்.
பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சளைக் கலந்து, காலை, மாலையில் சாப்பிட்டால் வறட்டு இருமல் நீங்கும். வீட்டில் எறும்பு, பூச்சி, கரையான் போன்றவை வராமல் தடுக்கவும் மஞ்சள் பயன்படுகிறது.
நமது சமையலில் மஞ்சள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உணவில் சுவையுடன் நிறத்தையும் தருகிறது. இறைச்சி வகைகள் நெடுநேரம் கெடாமல் இருக்க உதவுகிறது. வடித்த சுடு சாதத்தில், உப்பு, நல்லெண்ணெய், மஞ்சளைச் சேர்த்துப் பத்திய உணவைத் தயாரிக்கலாம்.
இந்திய மகளிர் தங்களின் உடலழகைப் பேண, முகத்திலும் உடலிலும் மஞ்சளைப் பூசுகின்றனர். இது, முகப்பரு, அழுக்குப் போன்றவற்றை அகற்றிப் பொலிவைக் கொடுக்கும். இயற்கை உரோம நீக்கியாக மஞ்சள் உள்ளது.
இயற்கை சூரியவொளித் தடுப்பானாக மஞ்சள் செயல்படுகிறது. வெய்யில் காலத்தில் கிருமித் தொற்றைத் தடுக்க, முகத்தில் மற்றும் வியர்வை சுரக்கும் அக்குள் போன்ற இடங்களில் மஞ்சளைப் பூசலாம்.

முனைவர் மா.விமலாராணி, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், கள்ளக்குறிச்சி.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



