மண் புழுக்களால் பல நன்மைகள் உண்டு. உரப்படுக்கை, தொட்டி, உரக்கூடம் மற்றும் தோப்புகளில் தார்ப் பாய்களை விரித்து மண்புழு உரத்தை உற்பத்தி செய்யலாம். அல்லது தரமான மண்புழு உரத்தை விலைக்கு வாங்கியும் நிலத்தில் இடலாம்.
நிலத்தில் களைகள் வராத சூழல் இந்த உரத்தின் மூலம் ஏற்படும். மண்புழு உரமானது, நிலத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைப்பதால், மண்ணின் வளமான சூழலில், நன்மை செய்யும் இதர உயிரினங்கள் நன்கு வளரும்.
மண்ணை இளகச் செய்து, காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதிக்குக் காரணமாக இருப்பதால், மண்புழு உரம் நீடித்த வேளாண்மைக்கு உதவும். மண்புழு உரம் மண்ணுக்கு எந்தக் கெடுதலையும் செய்வதில்லை.
அதே நேரத்தில் கோழியெருவை நிலத்தில் கொட்டி, அது மட்காமல் இருக்கும் நிலையில், மண் கெட்டு விடும்; பயிர்கள் பாதிக்கப்படும்; களைகள் பெருகி விடும். இதை 6-8 மாதங்கள் வரை முறையாக நீரைத் தெளித்து மட்க வைத்து நிலத்தில் இடலாம்.
ஆனாலும், மண்புழு உரத்தை இடுவதைப் போல, மண்வளத்தைப் பேண, தொடர்ந்து இட முடியாது.
மண்ணின் கார அமில நிலையைச் சீர் செய்யும் மண் புழுக்கள், மண்ணின் வேதியியல் தன்மையையும் சீராக்கும். மண்புழு உரத்தால் மட்டுமே பலவிதச் சத்துகள் பயிருக்குக் கிடைக்கும்.
குறிப்பாக, தழை, மணி, சாம்பல், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம் போன்றவை, உடனே, முழுதாக, அறுவடை முடியும் வரை, பயிருக்குச் சிறிது சிறிதாகக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
மேலும், மண்புழு உரத்தில் பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் பிராண வாயு, ஜிப்ரலின், சைட்டோகைனின் போன்ற வளர்ச்சி ஊக்கிகள் உள்ளன.
மண் புழுக்கள், மண்ணில் மட்கை உருவாக்கி உயிரியல் இயக்கத்தை ஊக்கப்படுத்தும். காற்று, நீர் மற்றும் வெப்பம் ஆகியவற்றை முறைப்படுத்தும் செயலையும் செய்யும்.
எனவே, களையில்லா சாகுபடிக்கு, சிறந்த மகசூலைப் பெறுவதற்கு, விவசாயிகள் அனைவரும் மண்புழு உரத்தை உற்பத்தி செய்து இட வேண்டும். மேலும் விவரங்களுக்கு, பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் உள்ள பேராசிரியர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பொறிஞர் எம்.இராஜமோகன், தலைமைப் பொறியாளர், நீர்வள ஆதாரத்துறை மற்றும் தலைமை இயக்குநர், பாசன மேலாண்மைப் பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி – 620 015.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



