ஒரு செடியின் வளர்ச்சிக்கு மூல ஆதாரமாக அமைவது நீர் தான். செடியில் அமைந்துள்ள ஒவ்வொரு திசுவின் கணிசமான பகுதியாக இருப்பது நீராகும். செடிகளின் ஒளிச்சேர்க்கைக்கு, செடிகளுக்கு உருவமும் அமைப்பும் தருவதற்கு, செடிகளில் இரசாயனக் கிரியைகள் தடங்கலின்றி நடைபெறுவதற்கு, பயிருக்குத் தேவையான உணவுச் சத்துகளை மண்ணிலிருந்து கிரகிப்பதற்கு, நீரானது மிகவும் அவசியம்.
பாசனநீர், மழை, ஆறு, குளம், கிணறு மூலமாகக் கிடைக்கிறது. இவற்றில் ஆற்று நீரும், மழைநீரும் பாசனத்திற்கு மிகச் சிறந்தவை. ஏனெனில், இவற்றில் உப்புகள் குறைவு. குளத்து நீரின் தன்மை, அது தேங்கியுள்ள இடத்தின் மண்ணைப் பொறுத்தும், அதிலிருக்கும் உப்பைப் பொறுத்தும் அமையும்.
பாசனநீரில் உப்புகள் உண்டாக முக்கியக் காரணம், மண்ணில் இருக்கும் தாதுப்புகள் தான். மண்ணில் இருக்கும் உப்புகள், தட்ப வெப்ப நிலையால் இரசாயன மாற்றம் அடைந்து, பாசன நீரிலேயும் எளிதாகக் கரைந்து விடும்.
உப்புகள் நிறைந்த பாசன நீரால் நிலத்திற்கு உண்டாகும் தீமைகள்
+ நிலத்தில் அதிகளவில் உப்புகள் சேர்ந்தால், நிலம் உவர் நிலமாக மாறும். சோடிய உப்பு அதிகமானால் நிலம் களராக மாறி விடும்.
+ உவர் களர் மண்ணில் நுண்ணுயிர்கள் வாழ முடிவதில்லை. அதனால் மண்ணில் இடப்படும் தாவரம் சார்ந்த உரங்கள் நன்கு மட்குவதில்லை.
+ மண்ணில் உள்ள சத்துகள் பயிர்களுக்குக் கிடைப்பது பாதிக்கப்படும்.
+ பயிர்களின் நீரைக் கிரகிக்கும் தன்மையும் பாதிக்கப்படும்.
உவர் மண்ணில் நீர்ப்பாசனம்
உவர் மண்ணில் நீரில் கரையும் உப்புகள் அதிகமாக இருக்கும். இந்த உப்புகள் நீரில் கரைந்து நீரின் உப்பழுத்த சக்தியை உயர்த்தி விடும். மண்ணில் உப்பு அதிகமாகும் போது, வேரின் நீர் உறிஞ்சும் திறன் குறைந்து கொண்டே போகும். அதாவது, பயிர்களின் மேல் பாகங்களிலிருந்து நீராவிப் போக்கின் காரணமாக வெளியேறும் நீரை, வேர்களால் ஈடுகட்ட முடியாமல் போவதால் பயிர்கள் வாட நேரிடும். எனவே, உவர் நிலச் சீர்திருத்தத்தில் மண்ணிலுள்ள உப்புகளைக் கரைத்து வெளியேற்ற வேண்டியுள்ளது.
ஆகவே, நீரை மண்ணில் ஊடுருவச் செய்ய வேண்டியது அவசியம். நல்ல வாய்க்கால் நீர், ஆற்றுநீர், மழைநீர், நல்ல கிணற்று நீர் ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது. நிலத்தை, சரிவுக்கேற்ப சிறு சிறு பாத்திகளாகப் பிரித்து, திடமான வரப்புகளை அமைத்து, பாத்திகளைச் சமன் செய்தல் ஆகியன சரியாக அமைந்தால் தான், மண் உட்புறவடிகால் வழியாக ஊடுருவி உப்புகளை மேல் பாகங்களிலிருந்து கீழ்ப்பாகங்களுக்கு எடுத்துச் செல்லும். இந்த நீரால் கரைக்கப்படும் உப்புகளை வெளியேற்ற, சரியான வடிகால்களை அமைத்தல் மிகவும் முக்கியம்.
ஆனால், நீர் உப்பாக அமைந்து விட்டால் என்ன செய்து? அப்படியிருந்தால் நீரிலுள்ள உப்பின் அளவுக்கேற்ப அதிகப்படியான நீரை ஊடுருவச் செய்ய வேண்டும். மண்ணின் மின் கடத்தும் திறன் மற்றும் நீரின் மின் கடத்தும் திறனைக் கொண்டு, ஊடுருவிச் செல்ல வேண்டிய நீர்த் தேவை, பரிசோதனைக் கூடத்தில் தீர்மானிக்கப்படும்.
உவர் மண் சீர்திருத்தத்தில் நிலத்தை ஆழமாக உழுவதும், அதிகமாக நீரைப் பாய்ச்சுவதும், நீரை நிறுத்தி, பெரும்பாலான நீர் மண்ணின் உட்புறமாக வடிவதற்கு வழி செய்வதும், உவர் நில விவசாயத்தில் நீர் நிர்வாகத்தின் முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
சொட்டுநீர்ப் பாசன முறையும், தெளிப்புப் பாசன முறையும், உவர் நில விவசாயத்தில் தனி முக்கியத்துவம் பெறும். மேற்கண்ட முறைகளில் வேரைச் சுற்றி எப்போதும் ஈரமாகவும், அதன் வெளிப்புறம் காய்ந்தும் இருப்பதால், உப்புகள் காய்ந்த பகுதிக்கு நகர்ந்து வேர்ப்பாகத்தில் அமையும் உப்பின் அளவு குறையும்.
மானாவாரி நிலங்களிலும், நல்ல திடமான உயரமான வரப்புகளை அமைத்து, பெய்கின்ற மழைநீரை நிலத்தில் தேக்கி, உள்ளே ஊடுருவச் செய்ய வேண்டும்.
களர் நிலத்தில் நீர்ப்பாசனம்
களர் நிலத்தில் பெய்யும் மழைநீரானாலும், பாசன நீராயினும், மண்ணில் எளிதில் இறங்காமல் தேங்கி நிற்கும். அதாவது, மண்ணில் நீர் ஊடுருவும் திறன் மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே, இங்கேயும் வடிகால் வசதி செய்தல், நீர் நிர்வாகத்தின் முக்கிய அம்சமாகும்.
களர் நிலத்தில் ஜிப்சத்தைப் போட்டுக் கலந்ததும் நீரைப் பாய்ச்சி 2-3 நாட்கள் தேக்கி வைக்க வேண்டும். ஒரு லிட்டர் நீரில் சுமார் 2.5 கிராம் ஜிப்சம் மட்டுமே கரையும். ஆகவே, 2.5 டன் ஜிப்சத்தை இட்டால், ஒரு மில்லியன் லிட்டர் நீரை வயலில் விட வேண்டும். நீரை அதிகமாக விட்டு மண்ணை மேலாகக் கலக்குவது, சோடிய அயனிகள் களிமண்ணிலிருந்து விடுபடுவதற்கு வழி செய்யும்.
இங்கே நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, ஜிப்சத்தை இட்டால் மட்டும் போதாது. போதியளவில் நீரையும் பாய்ச்ச வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை பழைய நீரை வடித்து விட்டு, புதிய நீரை விடுவது நல்லது. இதற்கு, அதிகளவில் நீர்ச்செலவாவது களர் மண் சீர்திருத்தத்தில் தவிர்க்க முடியாததாகும்.
சாதாரண மண்ணாயிருந்தால் நெல் நாற்று நடவுக்குச் சற்று முன் லேசாக நீர்ப் பாய்ச்சுவது வழக்கம். ஆனால், களர் நில விவசாயத்தில் நாற்று நடும் போது மண்ணை அதிக ஈரமில்லாமலும், அதே சமயத்தில் அதிகமாகக் காயாமலும் வைக்க வேண்டியது, நீர் நிர்வாகத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
உவர் நிலத்தைப் போலவே களர் நிலத்திலும் அடிக்கடி நீர்ப் பாய்ச்சுதல் நல்லது. ஏனெனில், பழைய நீரை அடிக்கடி வடித்து விடுவதால் உப்புகள் நீங்கும் வாய்ப்பு ஏற்படும்.
பாசனநீரில் அதிகமாக உள்ள உப்புகளை எப்படிச் சரி செய்வது?
+ ஆற்றுநீர் மற்றும் கால்வாய் நீர்க் கிடைத்தால், அவற்றை உப்பு நீருடன் அதிகளவில் கலந்து பாசனத்தில் பயன்படுத்தி, நீரின் உப்புத் தன்மையை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
+ பாசனநீரில் சோடிய உப்புகள் அதிகமாக இருந்தால், ஜிப்சத்தை இட்டு ஓரளவு சரி செய்யலாம்.
+ நிலத்தில் உப்புகள் அதிகமாக இருந்தால், மழைக்காலத்தில் மழைநீரை அந்த மண்ணில் தேக்கி வைத்து, நல்ல வடிகால் வசதி மூலம் உப்புகளை வெளியேற்றி விடலாம்.
+ பாசன நீரிலுள்ள உப்புகளின் தீமையைக் குறைக்க, பாத்தியில் நடுவதற்குப் பதிலாகப் பயிர்களைப் பார்களில் நட்டு வளர்க்கலாம்.
+ நிலத்தின் அடியிலுள்ள உப்புகள், மேல் மட்டத்தில் வந்து பயிருக்குத் தீங்கு செய்யாமல் இருக்க, ஈரம் காக்கும் பொருள்களான, காய்ந்த கரும்புத்தோகை, சோளத்தட்டை, கம்புத்தட்டை போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
+ கூடிய வரை, கோடை விவசாயத்தைத் தவிர்த்து, மழைக்காலத்தில் விவசாயம் செய்தால், கெடுதல் செய்யும் உப்புகளால் பயிர்கள் அதிகம் பாதிக்காது.
+ உப்புத் தன்மையைத் தாங்கும் பயிர்களை சாகுபடி செய்யலாம்.
+ தெளிப்புமுறைப் பாசனம் சிறந்தது. சொட்டுநீர்ப் பாசனமும் மிகுந்த பயனளிக்கும்.

முனைவர் தா.ஷெரின் ஜெனிதா ராஜம்மாள், இணைப் பேராசிரியர், மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நவலூர் குட்டப்பட்டு, திருச்சி – 620 027
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



