நமது நரம்பு மண்டலத்தின் தலைமை உறுப்பு மூளை. இன்று நாம் அடைந்துள்ள மூளை வளர்ச்சி, எலியினத்தைச் சேர்ந்த மூஞ்சூறில் இருந்து தொடங்கியதாக அறிவியல் கூறுகிறது. ஆண் மூளையின் அளவு 1,260 க.செ.மீ. பெண்ணின் மூளை 1,130 க.செ.மீ. இயங்கு உறுப்பாகவும், இயக்கு உறுப்பாகவும் வேலை செய்யும் மூளை, கடினமான மண்டை ஓடு மற்றும் மூளை முதுகுத்தண்டு நீர்மம் மூலம் வெளிப்புறச் சேதங்களில் இருந்து காக்கப்படுகிறது.
இதைப்போல, குருதி- மூளை வேலி என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டலத்தில் இருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் காக்கப்படுகிறது. ஆனாலும், மென்மைத் தன்மையால் சேதங்களுக்கும், நோய்களுக்கும் உள்ளாகிறது. நமது இயக்கத்துக்குக் காரணமான மூளை பாதிக்கப்பட்டால் நடைபிணமாகத் தான் இருக்க வேண்டும்.
ஆகவே, மூளைப் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதை நமது உணவு மற்றும் மூலிகைகள் மூலமே மேற்கொள்ள முடியும். தினமும் காலையிலும் மாலையிலும் வல்லாரைப் பொடியை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளை பலமாகும். இதைப்போல, பீர்க்கன் கொடி வேரை எடுத்துக் கஷாயமாக்கிச் சாப்பிடலாம். குறிப்பாக இதைக் கர்ப்பிணிகள் ஆறு மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் பிறக்கப் போகும் குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
வல்லாரைச் சாற்றில் ஊறவைத்து உலர்த்திய திப்பிலியைச் சாப்பிட்டு வந்தால், மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். இதைப்போல, கல்தாமரை இலையைச் சூரணமாக்கிச் சாப்பிட்டு வந்தால், மூளை பலவீனம் மாறும். வேப்பம் பூவை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் குளித்தால், தலையில் இருக்கும் புண்ணும், மூளையில் இருக்கும் புண்ணும் ஆறும்.
நாயுருவி வேரையும், கரிசலாங்கண்ணி வேரையும் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்து வந்தால், மூளை நரம்புகள் தொடர்பான நோய்கள் நீங்கும். இதைப்போல, இலந்தைப்பழம் மற்றும் கருப்பட்டியை மிக்ஸி என்னும் மின்னம்மியில் அரைத்துப் பழரசமாக்கிக் குடித்து வந்தால், மூளைப் பதற்றம் நீங்கி, நல்ல தூக்கம் வரும். உப்பிட்ட தயிரில் ஊற வைத்த தூதுவளைக் காய்களைக் காய வைத்து வறுத்துச் சாப்பிட்டால், பைத்தியம் எனப்படும் மனநிலை பாதிப்புக் குணமாகும்.
இங்கே குறிப்பிட்டுள்ள மூலிகைகளும், செய்முறைகளும் மிகமிக எளிமையானவை. இவற்றைக் கடைப்பிடித்து வந்தால், 5,000 முதல் 10,000 கோடி நரம்பணுக்களைக் கொண்ட மூளையை நாம் சிறப்பாகப் பாதுகாத்து மகிழ்ச்சியாக வாழ முடியும்.

மரு.சு.சத்தியவாணி எம்.டி., வளசரவாக்கம், சென்னை-600087.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



