பழ ஈக்கள் (Fruit Flies) என்பவை, பழங்கள், காய்கறிகளைத் தாக்கி, அவற்றின் சதைப்பகுதியை உண்ணும் சிறு பூச்சிகள் ஆகும். இவை பழங்களை அழுகச் செய்து, மகசூலைக் குறைக்கும். சிறிய ஈக்கள் என நினைத்து கவனக்குறைவாக இருந்தால், மகசூலில் பெரிய பாதிப்பு ஏற்படும். இவற்றை, இனக்கவர்ச்சிப் பொறிகள், இயற்கை முறைகள் அல்லது கிருமிநாசினிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
பூச்சியின் அடையாளம்
- பழ ஈக்கள் ஆரஞ்சு அல்லது பழுப்புக் கலந்த சிவப்பு நிறத்தில் சிறியதாக இருக்கும்.
- பழப்புழுக்கள், வெள்ளை நிறத்தில், கால்கள் இல்லாமல், அகன்ற தலையுடன் பழத்தின் உள்ளே இருக்கும்.
தாக்குதல் அறிகுறிகள்
- பழ ஈக்கள் தாக்கிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் பழுப்பு நிறத் திட்டுகள், துளைகள், அழுகிய திரவம் வடிதல், பழங்கள், காய்கறிகள் உதிர்தல் மற்றும் உள் திசுக்கள் பழுப்பு நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
- பழம் அல்லது காயின் மேற்பரப்பு மஞ்சளாகவும் சிறு துளைகளுடனும் இருக்கும்.
- காய்களை அல்லது பழங்களைப் புழுக்கள் குடைந்து உண்பதால், அவை அழுகிக் காணப்படும்.
- சேதம் மிகுந்தால், முதிர்வதற்கு முன்பே பழங்கள், காய்கள் உதிர்ந்து விடும். சிறிய ஈக்கள் தானே என, கவனக்குறைவாக இருந்தால் அதிகளவில் மகசூல் பாதிக்கப்படும்.
- கொய்யா மரங்களில் இந்தப் புழுக்களின் தாக்கம் அதிகமானால், காய்கள் பழங்களாக மாறுவதற்கு முன்பே உதிர்ந்து விடும்.
மாம்பழங்களில் பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்
நிலப் பராமரிப்பு: தோப்புக்குள் கோடையுழவு செய்தால், மண்ணுக்குள் இருக்கும் கூட்டுப் புழுக்கள் மேலே வந்து வெய்யிலில் பட்டு அழியும். மரத்துக்கு ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு வீதம் இட்டால், கூட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். பழ ஈக்கள் உற்பத்தியாகும் இடங்களில் கிருமிநாசினியைத் தெளித்துச் சுத்தப்படுத்த வேண்டும். புழுக்களால் சேதமாகி மரத்திலிருந்து கீழே விழும் பழங்களை உடனுக்குடன் சேகரித்து ஆழமான குழியில் போட்டுப் புதைக்க வேண்டும்.
பொறிகள்: பழ ஈக்களைக் கவர்ந்து அழிக்கும் வகையிலான இனக்கவர்ச்சிப் பொறிகளை (insect traps) ஏக்கருக்கு 5 முதல் 10 பொறிகள் வீதம் எடுத்து, நிழல் பகுதியில் கட்டி விட வேண்டும். மீத்தைல் யூஜினால் பொறி (Methyl Eugenol Trap), ஆண் ஈக்களைக் கவர்ந்து அழிக்க மிகச் சிறந்த வழியாகும். இந்த மருந்துக் கலவையை 15-30 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
இயற்கை முறை: இந்த முறையில், ஒரு லிட்டர் நீருக்கு 30 மி.லி. வேப்ப எண்ணெய் வீதம் கலந்து தெளித்து, பழ ஈக்கள் முட்டையிடுவதைத் தடுக்க வேண்டும். பழங்களாக மாறுவதற்கு ஒரு மாதம் இருக்கும் போதே, பழக்காய்களை, காகிதம் அல்லது நெகிழிப் பைகளால் மூடி, ஈக்கள் துளைப்பதைத் தடுக்க வேண்டும். முருங்கைக்காய், பாகற்காய் போன்றவை பெரிதாவதற்கு முன் சிறு துளைகளுடன் இருந்தால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஷத்தூண்டிலைத் தெளித்தல்: ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. மாலத்தியான், 10 கிராம் வெல்லம் வீதம் கலந்து, மரங்களின் அடியில் தெளிக்கலாம். மீத்தைல் யூஜினால் மற்றும் மாலத்தியானைச் சம அளவில் கலந்து, ஒரு நெகிழிப் பைக்கு 10 மி.லி. வீதம் நிரப்பி, நச்சுப் பொறியாக, எக்டருக்கு 25 இடங்களில் வைக்கலாம். ஒரு நெகிழிப் பைக்கு 5 கிராம் கருவாடு, 0.1 மி.லி. டைகுளோர்வாஸ் வீதம் இட்டு, 6 துளைகளையும் இட்டு, எக்டருக்கு 5 இடங்களில் வைத்து, ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.

கா.அரிபுத்திரன் எம்.எஸ்சி.(வேளாண்மை), வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



