My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்!

மிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, 12.10.2022 அன்று, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் அடங்கிய 11,806 எக்டர் பரப்பை, இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக அறிவித்துள்ளது. இது குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேவாங்கு சிறிய விலங்கு. இரவு நேரப் பாலூட்டி. மரவகை இனத்தைச் சேர்ந்தது. பெரும்பாலும் மரங்களில் தான் இருக்கும். பயிர்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகளை இரையாகக் கொண்டு விவசாயம் செழிக்க உதவும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இவ்வினத்தின் பங்கு முக்கியமானது.

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900

இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம், தேவாங்கை, அழிந்து வரும் இனமாக அறிவித்துள்ளது. எனவே, தேவாங்கின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல், அச்சுறுத்தலைத் தணித்தல் ஆகியவற்றின் மூலம் தான் இந்த இனத்தைப் பெருக்க முடியும்.

அதனால், அழிந்து வரும் தேவாங்கு இனத்தைப் பாதுகாக்க, தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வகையில், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில், 11,806 எக்டர் பரப்பிலுள்ள வனப்பகுதி, தேவாங்குகளின் வாழ்விடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இனத்தை உடனடியாகப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த தமிழக அரசு, இந்தியாவின் முதல் தேவாங்கு வனவிலங்கு சரணாலயம், தமிழ்நாட்டின் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்தது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், வன விலங்கு (பாதுகாப்பு) சட்டம் 1972 (மத்திய சட்டம் 53/1972) பிரிவு 26(A)(1)(1)இன் கீழ், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 11,806 எக்டர் பரப்பில், இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக, கடவூர் தேவாங்கு சரணாலயத்தை அமைத்து 12.10.2022 அன்று அறிவித்துள்ளது.

வன உயிரினங்கள் பாதுகாப்பில், குறிப்பாக, அழிந்து வரும் வன உயிரினங்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எ.கா: பாக் வளைகுடாவில், முதல் கடற்பசு காப்பகத்தை அறிவித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் கழுவேலி பறவைகள் சரணாலயத்தை அறிவித்தது. அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தை அறிவித்தது. திருப்பூர் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தை அறிவித்தது. பதின்மூன்று ஈரநிலப் பகுதிகளை, இராம்சார் சாசனப் பகுதிகள் பட்டியலில் சேர்த்தது.

வன உயிரினங்களைப் பாதுகாப்பதில் எடுக்கப்பட்ட இந்தப் புதிய நடவடிக்கைகள், தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மேம்பாட்டில் செலுத்தும் அக்கறையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.


இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு அரசு.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!