எள் பயிரை இறவையில் மற்றும் மானாவரியில் பயிர் செய்யலாம். மானாவாரி சாகுபடி மழையை நம்பிச் செய்வது. அதனால், அதில் சரியான நீர் நிர்வாகத்தைக் கையாள முடியாது. ஆனால், இறவைப் பயிரில் சிறந்த நீர் நிர்வாகம் இருந்தால், நல்ல மகசூலை எடுக்க முடியும்.
இவ்வகையில், இறவை எள் பயிருக்கான பாசனம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
நீர் நிர்வாகம்
மண்ணின் தன்மையைப் பொறுத்து, இறவை எள் பயிருக்கு 5 அல்லது 6 முறை பாசனம் செய்ய வேண்டும். விதைத்ததும் முளைப்பு நீர் விட வேண்டும். அடுத்து, விதைத்து ஏழாம் நாள் உயிர்ப்பு நீர் அவசியம் ஆகும். அடுத்து, 25 ஆம் நாள், அதாவது, செடிகள் பூக்குமுன் ஒருமுறை பாசனம் அவசியம்.
அடுத்து, பூக்கும் போது பாசனம் செய்ய வேண்டும். அடுத்து, காய்கள் பிடிக்கும் போது இரண்டு முறை பாசனம் தேவைப்படும். பூக்கும் போது, கவனமாகப் பாசனம் செய்ய வேண்டும். இறவைப் பயிரில், விதைத்த 65 நாட்களுக்குப் பிறகு பாசனம் செய்யக் கூடாது.
களை நிர்வாகம்
விதைத்து 15 நாட்கள் கழித்து, முதல் கைக்களை எடுக்க வேண்டும். அடுத்து, 35 நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும். முதல் கைக்களையை எடுத்த பிறகு, அதாவது, விதைத்து 25 நாட்கள் கழித்து, எக்டருக்கு 1 லிட்டர் பென்டிமெத்திலின் களைக்கொல்லி வீதம் எடுத்துத் தெளிக்கலாம்.
அறுவடை அறிகுறிகள்
செடியின் கீழிருந்து 25 சத இலைகள் உதிர்ந்து விடும். காய்கள் மற்றும் தண்டுப் பாகம் பழுப்பு நிறமாக மாறி விடும். செடியின் அடியில் இருந்து மேலேயுள்ள பத்தாவது காயின் விதைகள், கறுப்பு நிறமாக மாறியிருக்கும். இந்த அறிகுறிகள் தெரியும் போது அறுவடை செய்து விட வேண்டும். தவறினால், காய்கள் வெடித்துச் சிதறி விடும். இதனால், மகசூல் மிகவும் குறைந்து விடும்.
இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



