கோழிகளுடன் மீன்களை வளர்ப்பது சிறந்த முறையாகும். ஒரு எக்டர் குளத்தில் 200-250 கோழிகள் வரையில் வளர்க்கலாம். ஒவ்வொரு கோழியும் ஆண்டுக்கு 200-250 முட்டைகளை இடும். கோழிக்கழிவில், 25.5 சதம் அங்ககப் பொருள்கள், 1.63 சதம் நைட்ரஜன், 0.83 சதம் பொட்டாசியம், 1.54 சதம் பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன.
கோழிகளுக்கு வெப்பம், வெளிச்சம், நல்ல காற்றோட்டம், அமைதியான சூழல் ஆகியன தேவை. ஒரு கோழிக்கு 1-2 சதுரடி இடவசதியை அளித்து, குளிர்க்காற்று தாக்காத வகையில், மீன் குளத்துக்கு வெளியே கூண்டுகள் அல்லது சிமெண்ட் தரையாலான கொட்டகையை அமைத்து, கோழிக்கழிவை குளத்தில் இடுவதே சிறந்த முறையாகும்.
கோழிகளுக்கு அளிக்கும் தீவனம் மீதமிருப்பின், அதை மீன்களுக்கு உணவாக இடலாம். கோழி எச்சத்தில், 10 சதம் புரதமும், மணிச்சத்தும், மற்ற சத்துகளும் ஏற்ற விகிதத்தில் இருப்பதால், இது மீன்களுக்கு உணவாக அமைந்து, உற்பத்தியைப் பெருக்க உதவும்.
இப்படி, கோழிகளுடன் மீன்களை வளர்ப்பதன் மூலம், கோழி முட்டை, இறைச்சி மற்றும் மீனுற்பத்தியை அதிகரித்து அதிக வருவாயைப் பெறலாம். ஒரு எக்டர் குளத்தில், 5,000 கிலோ மீன்கள், 30,000 முட்டைகள், 500 கிலோ இறைச்சியைப் பெறலாம்.
கோழிகளுக்குத் தேவையான நீர் கிடைக்கிறது. கோழிகளின் கழிவு மீன்களுக்குச் சிறந்த உணவாகிறது. மீனுற்பத்திச் செலவு குறைகிறது. அதிக வருவாய் கிடைக்கிறது. மேலாண்மை முறைகள் எளிமையாக உள்ளன.

முனைவர் க.தேவகி, உதவிப் பேராசிரியை, வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



