பட்டியலின விவசாயிகள் தொழில் தொடங்க ஏதுவாக, காளான் மற்றும் காளான் விதை உற்பத்திக் குறித்த, ஐந்து நாட்கள் சிறப்புப் பயிற்சி, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், இம்மாதம் (மார்ச்) 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தேசிய வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் நிதியுதவியில் நடைபெற உள்ள இந்தப் பயிற்சியில், காளான் வளர்ப்பு முறைகள், காளான் வகைகள், காளான் விதை உற்பத்தி,
காளான் வளர்ப்பில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள், காளானில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்கும் உத்திகள் மற்றும் விற்பனை முறைகள் பற்றி, தெளிவாகப் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், காளான் வளர்ப்புப் பண்ணைக்கு அழைத்துச் சென்று, காளான் வளர்ப்பை நேரில் பார்த்தறியவும் ஏற்பாடு செய்யப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்வோர்க்கு, பயிற்சிச் சான்றிதழும், காளான் வளர்ப்புக் கையேடும் வழங்கப்படும்.
இப்பயிற்சியில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டியலின விவசாயிகள், பட்டியலின பண்ணை மகளிர், பட்டியலின விவசாய ஊரக இளைஞர்கள், படித்து முடித்து வேலையில்லாத பட்டியலின மாணவ மாணவியர்,
விவசாயம் சார்ந்த களப் பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், கலந்து கொண்டு பயன் பெறலாம்.
எனவே, இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள பட்டியலின மக்கள், 04286 266345 அல்லது 99430 08802 அல்லது 70105 80683 எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது நேரில் வந்தும் முன்பதிவு செய்யலாம்.
குறிப்பு: இப்பயிற்சியில் நாமக்கல் மாவட்டப் பட்டியலின மக்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். முதலில் வரும் 40 பேர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும்.
பயிற்சிக்கு வருவோர், தங்களின் ஆதார் அட்டை மற்றும் சாதிச் சான்றிதழைக் கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்.

முனைவர் க.வேல்முருகன், பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை அறிவியல் நிலையம், நாமக்கல் – 637 002.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



