இன்று பலரும் மண்வளம் பேணுதல் குறித்துச் சிந்திப்பது நல்லதே. அரையடி மண் உற்பத்தியாக ஆயிரம் ஆண்டுகள் ஆகும். நமது நிலம் நமக்கு இறைவன் தந்த வரம். இதைக் காப்பதும் அழிப்பதும் நிர்வாக முறைகளில் தான் உள்ளது என்பது பலரும் அறியாதது.
மனித உடலுக்கு மருத்துவ ஆய்வு அவசியம் என்பதைப் போல, நமது நிலம், கால்நடைகள், பயிர்கள், நீர், கருவிகள், சேமிப்புக் கிடங்குகள், வாகனங்கள் ஆகியன சரியாக இயங்குவதை ஆய்வு மூலம் உறுதி செய்ய வேண்டும். அவ்வப்போது நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கடைப்பிடிக்க வேண்டும். நமக்குத் தெரியாது என்பதால், நல்ல பராமரிப்பு உத்திகளைக் கையாளாது விடுவதும், காலத்தே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காது விடுவதும் ஆபத்தாகும்.
அருகிலுள்ள நிபுணர்களிடம் கேட்டு அல்லது பத்திரிகைகளில் படித்து அறிந்து கொண்டாலும், முறையாக அவற்றைச் செய்யாது விடுவது வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். மண்ணையும், நீரையும் முழுதாக ஆய்வு செய்தால், மண்ணில் உள்ள உப்பின் நிலையை அறியலாம். அதற்கு, இ.சி. என்னும் அலகு உதவும். கார அமில நிலையை அறிய, பி.எச். என்னும் அலகு உள்ளது.
சோடிய அயனிகள் அளவை அறிய, இ.எஸ்.பி. என்னும் அலகு உதவும். பாசன நீரில் உப்பின் அளவை அறியவும் இதே அலகு உதவும். மண்ணில் உவர் தன்மை மட்டுமோ, களர் தன்மை மட்டுமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ இருந்தால், அது, பிரச்சினை மண்ணாகும். மண்ணிலோ, நீரிலோ கரையும் உப்புகள் சமநிலை பி.எச்.7-ஐத் தாண்டி இருந்தால், அதாவது, 7க்கு மேலும் 8.5 க்குக் கீழும் இருந்து, அதில் இ.சி-யும் 4 க்கு மேலே இருந்து, இ.எஸ்.பி என்னும் மாற்றக் கூடிய சோடிய அயனிகள் 15 சதத்துக்குக் கீழே இருந்தால், அது, உவர் மண் அல்லது நீர் ஆகும்.
களர் தன்மை என்பது, ஈ.சி. அலகு 4 க்குக் கீழேயும், இ.எஸ்.பி அலகு 15 க்கு மேலேயும், கார அமில நிலை (பி.எச்) 8.5 க்கு மேலேயும் இருக்கும் நிலையைக் குறிக்கும். களர் மற்றும் உவர் மண்ணில், நீரின் இ.சி. மின் கடத்தும் திறன் அலகு 4 க்குக் கீழேயும், பி.எச்.8.5 க்கு உள்ளேயும், இ.எஸ்.பி. சோடியம் அயனிப் பரிமாற்றம் 15 சதத்தை விட அதிகமாகவும் இருந்தால் சிக்கல் ஏற்படும். இதைச் சீர்திருத்தப் பல வழிகள் உள்ளன.
வடிகாலைச் சீராக வைத்துக் கொண்டு ஆண்டுதோறும் தக்கைப் பூண்டு, கொளுஞ்சி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களைப் பயிரிட்டு, நன்கு வளர்ந்ததும் மடக்கி உழுது நீரைத் தேக்கி வடிய வைக்க வேண்டும். மிதமான களர் நிலத்தை, அதாவது, பி.எச்.8.6 முதல் 8.9 வரை உள்ள நிலத்தை, நல்ல நிலமாக மாற்றலாம். களர் நிலத்தில் ஜிப்சத்தை இட்டு, நீரை 4-6 அங்குலம் உயரம் தேக்கி, அது, தானாகக் கசிந்து வடிகாலில் வடிய வேண்டும்.
நீரானது குறையக் குறைய 2-3 நாட்கள் தொடர்ந்து நல்ல நீரைத் தேக்க வேண்டும். இப்படி, 3-4 முறை செய்ய வேண்டும். இதற்குச் சரியாகத் திட்டமிட்டு, மழை கிடைக்கும் போது செய்தால், எளிதில் தீர்வு கிடைக்கும்.

முனைவர் பா.இளங்கோவன், வேளாண்மை இணை இயக்குநர், காஞ்சிபுரம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



