தமிழ்நாட்டின் மாநில மரமான பனை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்குதல், மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிப்புக்கூடம் அமைத்தல், பனையேறும் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்குதல் போன்றவற்றுக்காக, மாநில அளவில் ரூ.1.46 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும், பனை மரத்தில் எவ்வித ஆபத்தும் இல்லாமல் எளிதாக ஏறுவதற்கான கருவியைக் கண்டுபிடிக்கும் பல்கலைக் கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னோடி விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறந்த பனை ஏறும் இயந்திரத்தை, கருவியைக் கண்டுபிடிக்கும் ஒருவருக்கு, ஒரு இலட்ச ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தப் பரிசுக்கு உரியவர், தோட்டக்கலைத் துறையால் தேர்வு செய்யப்பட உள்ளார்.
எனவே, பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிக்கும் தன்னார்வர்கள், பல்கலைக் கழகங்கள், தனியார் நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள்,
www.tnhorticulture.gov.in என்னும் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்று 15.03.2024 கடைசி நாளாகும்.
இந்தத் தகவலை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
செய்தி: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, அரியலூர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



