ஆட்டெரு, மாட்டெரு, இலைதழை என இயற்கை உரங்களைப் போட்டு விவசாயம் செய்த காலம் மாறி விட்டது.
இயற்கை உரங்களை மறந்து செயற்கை உரங்களைப் போடப் பழகி விட்டனர் விவசாயிகள்.
இதனால் கூடுதலான இடுபொருள் செலவுகளுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு, வரமாக அமைந்தது தான் மண் பரிசோதனை.
நிலத்தில் பயிரிடு முன், அந்த நிலத்தின் மண்ணைப் பரிசோதனை செய்வதன் மூலம், தேவைப்படும் உரங்களை மட்டும் இட்டு நல்ல மகசூலைப் பெற முடியும்.
இதனால், உரச்செலவைக் குறைக்க முடியும். மண்ணின் இயல்புத் தன்மையைக் காக்க முடியும். மண் பரிசோதனைக்கு ஏற்றது கோடைக்காலம்.
நிலத்தின் வரப்பு ஓரங்கள், மர நிழல் விழும் இடங்கள், குப்பை மேடுகள், பயிருள்ள பகுதிகள் ஆகியவற்றில் மண் மாதிரிகளை எடுக்கக் கூடாது.
ஒரு ஏக்கர் நிலத்தில் பரவலாக ஐந்தாறு இடங்களில் மண் மாதிரிகளை எடுக்க வேண்டும்.
மண் மாதிரிகளை எடுப்பதற்கு முன், எடுக்கும் இடங்களில் உள்ள மேல் மண்ணைச் செதுக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்.
பிறகு, மண்வெட்டி மூலம் முக்கால் அடி ஆழத்தில் ஆங்கில எழுத்து வி வடிவில் மண்ணை வெட்டி அதை அகற்ற வேண்டும்.
அடுத்து, அந்தப் பள்ளத்தின் இருபுறமும் மேலிருந்து கீழாக, அரை அங்குல ஆழத்தில் மண்ணைச் சுரண்டி எடுக்க வேண்டும்.
இப்படி, ஐந்தாறு இடங்களில் எடுத்த மண்ணை, நெகிழிப் பை அல்லது நெகிழி வாளியில் சேகரிக்க வேண்டும்.
அப்புறம் இந்த மண்ணை நிழலான இடத்தில் போட்டு ஈரத்தை உலர்த்த வேண்டும்.
பிறகு, சிமெண்ட் தரை அல்லது தார்ப்பாயில் கொட்டிச் சமப்படுத்தி, அதை நான்கு பாகங்களாகப் பிரிக்க வேண்டும்.
இதில் எதிரெதிர் பாகத்தில் உள்ள மண்ணை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி, தேவைக்கேற்ப செய்து இறுதியாக ஒரு அரைக்கிலோ மண்ணை ஒரு துணிப்பை அல்லது நெகிழிப் பையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதுதான் மண் பரிசோதனை செய்வதற்கு உரிய மண்.
இந்த மண்ணோடு, ஒரு தாளில் நில உரிமையாளரின் பெயர், தந்தை பெயர், நில அளவை எண், சாகுபடிப் பரப்பு, முன்னர் சாகுபடி செய்த பயிர்,
இனி செய்யப் போகும் பயிர் ஆகிய விவரங்களை எழுதி இணைக்க வேண்டும்.
அடுத்து, இதை வேளாண்மை அலுவலர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தால், அவர்கள் மண் ஆய்வகத்துக்கு அனுப்பித் தேவையான உரப் பரிந்துரையைப் பெற்றுத் தருவார்.
அல்லது அருகிலுள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். பாசன நீரையும் பரிசோதனை செய்யலாம்.
தொகுப்பு: பசுமை
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



