நாட்டில், எந்த மூலை-முடுக்கில் இருந்தாலும், விவசாயிகள் தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள, கிஷான்-கால்-சென்டர் என்ற பெயரில் கட்டணமில்லா தொலைபேசி சேவையை, மத்திய வேளாண்மைத் துறை இயக்கி வருகிறது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வளாகத்தில் இயங்கக் கூடிய இந்த சேவையின் எண்: 1800-180-1551
கட்டணமில்லா சேவைக்கு தொடர்புகொள்ளும் விவசாயிகள், தமிழ் மட்டுமின்றி, அவரவர் பிராந்திய மொழிகளில் பேசியும்கூட, விவரங்களைக் கேட்டுப் பெற முடியும்.
கட்டணமில்லா சேவையின் முக்கியப் பயன்கள்:
விவசாயிகள் தங்கள் பகுதிக்கான வானிலை முன்னறிவிப்பைக் கேட்டறியலாம்.
விளை பொருள்களுக்கான சந்தை நிலவரத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
வேளாண்மையில் நோய்த் தாக்குதல் மற்றும் பூச்சித் தாக்குதல் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெறலாம்.
விதைப்பு முதல் அறுவடை வரை, நீர் நிர்வாகம், உர மேலாண்மைப் பற்றியும் விவரம் அறிலாம்.
- விவசாயிகளுக்கு ஆலோசனைகளையும் விவரங்களையும் வழங்குபவர்கள் வல்லுநர்களே..!
இதை, நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசியபோது, மத்திய வேளாண்மைத் துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்தார்.
செல்போன் செயலி
இந்தக் கட்டணமில்லா தொலைபேசி சேவை மட்டுமின்றி, பயிர்ப் பாதுகாப்புக்கென, தனி செயலி ஒன்றையும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் அண்மையில் அறிமுகம் செய்தது. பூச்சித் தாக்கிய அல்லது நோய்த் தாக்கிய பயிரை, அந்த செயலி வழியாகப் புகைப்படம் எடுத்து தரவேற்றம் செய்தாலே, தீர்வுகளை செயலியே சொல்லிவிடும்.
கூடுதல் விவரங்களை செயலி வழியாகவே வல்லுநர்களிடமும் கேட்டுப் பெற முடியும். இந்த நல்ல சேவைகளை விவசாயிகள் பயன்படுத்திப் பயன் பெறலாம்.