வல்லாரைக் கீரை, சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். இது முக்கியமாக, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த, மூட்டு வலியைக் குறைக்க, வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்த, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க என, நமக்குப் பல நன்மைகளை வழங்குகிறது.
சென்டெல்லா ஆசியாட்டிகா என்னும் அறிவியல் பெயரைக் கொண்ட இந்தப் பச்சிலைச் செடி, தமிழில் வல்லாரைக் கீரை என்றும், சமஸ்கிருதத்தில் மண்டுகபர்ணி என்றும், ஹிந்தியில் சர்ஸ்வதி என்றும், தெலுங்கில் ஸ்வரஸ்வதகு என்றும் அழைக்கப்படுகிறது. கோடு கோலா என்னும் பெயர், உண்மையில், இலங்கையின் சிங்கள மொழியில் உள்ள வடமொழிச் சொல்லாகும், மேலும், இது கப் வடிவ இலை என்று மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. இது, இலைகளின் சிறப்பையும் அரைக்கோள வடிவத்தையும் விவரிக்கிறது.
வல்லாரைக் கீரையில், வைட்டமின் சி கூடுதலாக உள்ளது. உடல் எடையைப் பராமரிக்கவும், போதுமான நார்ச்சத்து மற்றும் புரதங்களைத் தருவதாகவும், குறைவான கலோரியை உடையதாகவும் உள்ளது. மேலும், வளர்சிதை மாற்றம் மற்றும் செல்லுலார் ஆற்றல் தேவைகளை ஒழுங்குபடுத்த உதவும் பி வைட்டமின்களின் முக்கிய நிறமாலையையும் வழங்குகிறது.
அடங்கியுள்ள நுண் சத்துகள்
வைட்டமின்கள்: தியாமின் (B1) 3 சதம், ரிபோஃப்ளேவின் (B2) 2 சதம், நியாசின் (B3) 1 சதம், வைட்டமின் பி6 3 சதம், வைட்டமின் சி 73 சதம் வீதம் உள்ளன.
கனிமங்கள்: இரும்பு 1 சதம், மெக்னீசியம் 2 சதம், மாங்கனீசு 1 சதம், பாஸ்பரஸ் 2 சதம், பொட்டாசியம் 5 சதம், துத்தநாகம் 1 சதம் வீதம் உள்ளன.
வல்லாரைக் கீரையின் நன்மைகள்
மூளையின் செயல்களை மேம்படுத்தும்: வல்லாரைக் கீரையில் உள்ள நன்மை பயக்கும் சேர்மங்களின் தனித்தன்மை மிக்க கலவையான, பிரம்மோசைடு, பிராமினோசைடு மற்றும் சென்டெல்லோசைடு, நினைவாற்றல், செறிவு மற்றும் அறிவுத்திறனை உயர்த்த உதவுகிறது. தினசரி உணவில் குறைந்தளவில் வல்லாரைக் கீரையைச் சேர்த்துக் கொள்வது, சி.என்.எஸ்-ஸில் உள்ள நரம்பிய கடத்தியின் செயல்பாட்டைத் தூண்டுகிறது. இதன் மூலம், மூளையில் இருந்து உடலின் மற்ற உறுப்புகளுக்குச் செல்லும் நரம்பு சமிக்ஞைகள் உறுதி செய்யப்படுகின்றன. அத்துடன், அறிவாற்றலும் அதிகரிக்கிறது.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: நலமாக வாழும் பெரியவர்கள், வல்லாரைக் கீரையை மிதமான அளவில் உட்கொள்வது, அவர்களுக்கான தினசரி வைட்டமின் சி தேவையைப் பூர்த்தி செய்யும். வைட்டமின் சி-யானது, சீரான இரத்த ஓட்டத்துக்கு உதவும் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிப்பதுடன், வெள்ளை இரத்த அணுக்கள் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், அனைத்து உடல் திசுக்களின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி, நச்சுகளை அகற்றும் முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகவும் விளங்குகிறது.
இதய நலத்தைப் பராமரிக்கும்: பொட்டாசியம் நிறைந்த வல்லாரைக்கீரை, இரத்தழுத்தம் சீராக இருக்க, இதயத்தசை நன்கு செயல்பட உதவுகிறது. கெட்ட எல்.டி.எல். கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. நல்ல எச்.டி.எல். கொழுப்பின் அளவைக் கூட்டுகிறது. மேலும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நிகழ்வுகளைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இவ்வகையில், நாம் நோயற்று வாழவும், நெடுங்காலம் வாழவும் உதவுகிறது.

முனைவர் க.ஞா.கவிதாஸ்ரீ, முனைவர் கே.குருசாமி, முனைவர் எம்.ஆனந்த், முனைவர் ஜி.அமுதசெல்வி, உணவுப் பதனப் பொறியியல் துறை, வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் – 641 003.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



