விவசாயிகள், பொதுமக்கள் நலன்கருதி தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் போன்ற எந்தத் திட்டத்துக்கும் எக்காலமும் அனுமதி இல்லை; இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறுதியான கொள்கை முடிவு என்று, தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் சோதனை முயற்சி – தோல்வி
மத்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ்தான் இந்த ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட பெட்ரோலியத்துக்கு மாற்றான எரிபொருள் சோதனைத் திட்டங்களெல்லாம் வருகின்றன.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டுகூட, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் ஆய்வு நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. இதனால் விவசாயம் அழியும்; கடல்வளம் பாதிக்கும் என்று தமிழ்நாட்டில் கொதிப்பலைகள் கிழம்பியதையடுத்து, திட்டம் கைவிடப்பட்டது. இருந்தாலும் விவசாயிகளிடையே நிலவிவந்த அச்சத்துக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2020 ஆம் ஆண்டு, அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு, காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.
ஆனால் அதன்பிறகும் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க முயற்சிகள் தொடரந்தன. ஆனால் தமிழக அரசு விடாப்பிடியாக மறுத்துவிட்டது.
மீண்டும் சோதனை முயற்சி – கடும் எதிர்ப்பு
டெல்டா மாவட்டங்கள் தானே பாதுகாக்க வேளாண் மண்டலம்; நாங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தைத் தேர்வு செய்கிறோம் என்று, அண்மையில் இராமநாதபுரத்தில் காவனூர், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனாங்குடி, பேய்க்குளம், வேப்பன்குளம் உள்ளிட்ட 20 இடங்களில், 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்குத் துளையிட்டுச் சோதனையிடும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.
இதற்கு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் அனுமதியை வழங்கியிருந்தது. இதனால் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, மீண்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பா.ம.க., ம.தி.மு.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், அச்சத்தையும் கண்டனங்களையும் வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு அரசு திட்டவட்டம்
இந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நேரடியாக அனுமதியை வழங்கி விட்டது; இந்தச் செய்தி அரசின் கவனத்துக்கு வந்ததும், அந்த அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு ஆணையத்துக்கு அரசு அறிவுறுத்திவிட்டது. விவசாயிகள், பொதுமக்கள் நலன்கருதி, இனி எதிர்காலத்திலும் ஹைட்ரோ கார்பன் போன்றத் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்காது; அனுமதி அளிக்காது; இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறுதியான கொள்கை முடிவு என்று தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



