இது கோடையுழவு செய்யும் காலம் என்பதால், சாகுபடி இல்லாமல் இருக்கும் நிலங்களில் கோடையுழவு செய்ய வேண்டும் என்று, நாமக்கல் வட்டார வேளாண்மை- உழவர் நலத்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளது.
விவசாயிகள் கோடை உழவை மேற்கொள்வது மிகவும் அவசியம். பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால், கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பம் கீழ்ப்பகுதிக்கு செல்லும் போது, நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறி விடும்.
மேல் மண்ணை உழவு செய்து புழுதிப் படலம் அமைத்து விட்டால் விண்வெளிக்கும், வேர்சூழ் மண்டலத்துக்கும் உள்ள தொடர்பு அறுந்து விடும். இதனால், நிலத்தில் உள்ள ஈரம் ஆவியாக விடாமல் புழுதிப்படலம் தடுத்து விடும்.
எனவே, கோடை மழையின் ஈரத்தைப் பயன்படுத்தி, நிலத்தை நன்கு உழவு செய்தால், மேல் மண் துகள்களாகி நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகமாகும். மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு, நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும்.
வயலிலுள்ள கோரை போன்ற களைகள், மண்ணின் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு, சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து விடும். ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடையுழவு செய்வது மிகவும் முக்கியத் தொழில் நுட்பமாகும்.
நிலத்தின் அடியில் உள்ள கூட்டுப் புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படும். மிக முக்கியமாக, மக்காச் சோளத்தை தாக்கும் அமெரிக்க படைப்புழு கட்டுக்குள் வரும்.
பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் பெருமளவு குறையும். வயல் வெளியில் பெய்யும் மழைநீரை சேமிப்பதில், கோடையுழவு முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, விவசாயிகள் கோடையுழவு செய்து பயனடைய வேண்டும் என்று, நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
செய்தி: நாமக்கல் வட்டார வேளாண்மை- உழவர் நலத்துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



