மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மக்காசோளப் பயிரில் படைப் புழுக்களின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தொடக்கத்திலேயே கண்காணித்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், மகசூல் பாதிப்பை முற்றிலும் தவிர்க்கலாம்.
கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த, கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும். விதைப்புக்கு முன், ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு, 10 கிராம் பெவேரியா பேசியானா என்னும் பூசணக்கொல்லி மருந்து வீதம் கலந்து அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் தையோமெத்தோசம் என்னும் இரசாயனப் பூசணக்கொல்லி மருந்து வீதம் கலந்து, விதைகளை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
மக்காச்சோள நிலத்தில் எள், சூரியகாந்தி, தட்டைப்பயறு, தீவனச்சோளம் போன்றவற்றை வரப்புப் பயிராகவும், உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை ஊடுபயிராகவும் சாகுபடி செய்ய வேண்டும். விதைத்த 10-15 நாட்களில், படைப்புழுவின் தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க ஏதுவாக, ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சிப் பொறிகளை வைக்க வேண்டும்.
இரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகள்
மக்காச்சோளத்தை விதைத்து 15-20 நாட்களில், இளம் புழுக்கள் தென்படும் போது, வேம்பு சார்ந்த அசாடிரக்டின் 1 ஈசி மருந்தை, 10 லிட்டர் நீருக்கு 20 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். அல்லது 10 லிட்டர் நீருக்கு 4 கிராம் எமாமெக்டின் பென்சோயட் என்னும் பூச்சிக்கொல்லி மருந்து வீதம் கலந்து தெளிக்கலாம். விதைத்து 40-45 நாட்களில் படைப்பழுக்கள் தென்படும் போது, 10 லிட்டர் நீருக்கு 80 கிராம் மெட்டாரைசியம் அனசோபிலே என்னும் பூசண மருந்து வீதம் கலந்து தெளிக்கலாம்.
புழுக்கள் வளர்ந்த நிலையில், பொருளாதாரச் சேதநிலை ஏற்படும் போது, இரசாயனப் பூச்சி மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 100 மி.லி. ஸ்பைனிடோரம் 12 எஸ்.சி மருந்து அல்லது 80 மி.லி. குளோரன்ட்ரனிலிப்ரோல் 18.5 எஸ்.சி. மருந்தைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



