வந்த நோய்க்கு சிகிச்சை பார்ப்பதை விடவும், வருமுன் காப்பதே மேல் என்னும் ஒரு நம்பிக்கை உலவுகிறது. இது முற்றிலும் சரியல்ல. வருமுன் தடுப்பது மட்டுமே சரியானதாகும்.
இயற்கையை ஒட்டிய வாழ்க்கையும், இயற்கை மருத்துவமும் நோயாளிகளுக்கு என்றும் மக்கள் நம்புகிறார்கள். இதுவும் அறியாமையின் வெளிப்பாடு தான். நலமாக இருப்பவர்கள் முனிவர்கள் மட்டுமே. அவர்கள் முதிர்ந்த தேங்காயைப் போன்றவர்கள். உள்ளேயுள்ள கொப்பரை உலர்ந்து சுருங்கி ஓட்டிலிருந்து பிரிந்து விடுகிறது. முனிவர்களும் உடம்பிலிருந்து பற்றை அறுத்துக் கொள்கிறார்கள்.
நாகரிக வாழ்க்கை வாழ்பவர்களில் நோயற்றவர்கள் என்று எவருமில்லை. உடல் வலி, துன்பம் வரும் போது தான் நோய் இருப்பதை அறிகிறார்கள். உண்ணும் மருந்து உடல் துன்பத்தை மட்டுமே குறைக்கிறது. நோய்க்கான காரணத்தை விலக்கவில்லை. மது அருந்துவது மட்டுமே தீமையாகக் கருதப்படுகிறது. அதுவும் குடிப்பவர் அப்படிக் கருதுவது இல்லை.
காபி, டீ, புகையிலை மூன்றையும் விட்டாலே 75 விழுக்காடு நோய்கள் விலகுவதாக மருத்துவர் தி.இராஜு எழுதினார். காபியே பல நோய்களுக்கும், குணக்கேடுகளுக்கும் காரணமாக அமைகிறது என்று, ஓமியோ மருத்துவர் வெள்ளைச்சாமி கூறுகிறார்.
தீய பழக்கங்கள் எவை எவை என்று பட்டியல் போட வேண்டியது இல்லை. இயற்கையை உற்று நோக்கினால், விட்டு விலக வேண்டியவை எவை எவை என்பது விளங்கும். செய்தக்க அல்ல செயக்கெடும்!
நோயினைக் கொண்டாடுவோம் என்னும் நூலில் இருந்து…
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



