சுண்ணாம்பு மண்ணை நல்ல சாகுபடிக்கு ஏற்ற மண்ணாக மாற்றுவதற்கான உத்திகளை, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சுண்ணாம்பு மண் என்பது, கால்சியம் கார்பனேட் அதிகளவில் கலந்துள்ள மண்ணாகும். இந்த மண், பயிர்கள் விளைவதில் இடர்களை ஏற்படுத்தும். இவ்வகை மண், சுண்ணாம்புப் பாறைகள் மற்றும் சிதைந்த பாறையிடுக்குகளில் இருந்து உருவாகும். இம்மண்ணின் கார, அமிலத் தன்மை 7.6 முதல் 8.3 வரை இருக்கும்.
மண்ணில் அதிகமாக உள்ள கால்சியம் கார்பனேட்டானது, நைட்ரஜன், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், செம்பு ஆகிய தாதுகளின், வேதியியல் மற்றும் கிடக்கையைப் பாதிக்கும்.
சுண்ணாம்பு நிலச் சீர்திருத்தம்
பசுந்தாள் உரத்தை அதிகமாக இட வேண்டும். தக்கைப்பூண்டைப் பயிரிட்டு, அது பூக்கும் போது மடக்கி உழ வேண்டும். ஏக்கருக்கு 5 டன் வீதம் கரும்பாலைக் கழிவை இட வேண்டும். பாசனநீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும். பரிந்துரை அளவில் கந்தக உரத்தை இட வேண்டும். கந்தகம் கலந்துள்ள உரங்களையே பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு: பாக்டம்பாஸ் மற்றும் பாரம்பாஸ் உரங்களை, பயிருக்கேற்ப, பரிந்துரைப்படி பிரித்து இட வேண்டும்.
நுண் உரங்களான துத்தநாகம், தாமிரம், இரும்பு போன்றவை, பயிர்களுக்குக் கிடைக்கும் வகையில், நுண்ணூட்டக் கலவையை இட வேண்டும். தழைச்சத்தை, அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் பாஸ்பேட் சல்பேட்டாக இட வேண்டும். மணிச்சத்தை, அம்மோனியம் பாஸ்பேட் சல்பேட், டிஏபி, காம்பளக்சாக இட வேண்டும். சாம்பல் சத்தை, பொட்டாசியம் சல்பேட்டாக இட வேண்டும். இப்படி இடுவதால் உரப்பயனும், பயிர் விளைச்சலும் அதிகமாகும்.
எனவே, சுண்ணாம்பு நிலமுள்ள விவசாயிகள், இந்த உத்திகளைக் கையாண்டு, அதைச் சீர்திருத்தம் செய்து பயனடையலாம் என, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



