பழங்காலத்தில் விளை நிலங்களின் வேலியாகப் பனை மரங்கள் இருந்தன. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் நுங்கு, பதனீர் மற்றும் இயற்கை இனிப்பான கருப்பட்டி, நார்ச்சத்து மிகுந்த பனங் கிழங்கின் மூலம் பனை மரமாகும்.
பனை ஓலைகள், விசிறிகளாக, கூடைகளாக, பெட்டிகளாக, பாய்களாக, கூரையாக, வேலித் தட்டுகளாகப் பயன்படுகின்றன. பனை மரங்கள், நிலத்தடி நீரைக் குறைய விடாமல் காக்கும் வல்லமை மிக்கவை.
பனைக்கும் நமது உணவு மற்றும் மருத்துவப் பயன்பாட்டுக்கும் முக்கியத் தொடர்பு உண்டு. நுங்கு, பனை வெல்லம், பனங் கற்கண்டு ஆகியன, இன்றும் நமது உணவுப் பயன்பாட்டில் இருப்பதை அறிவோம்.
பனம் பூவை உலர்த்தி, கொளுத்தி, சாம்பலாக்கிச் சலித்து வைத்துக் கொண்டு, அரை கிராம் வீதம் எடுத்து நீரில் கலந்து, காலை, மாலையில் குடித்து வந்தால், வாதக் குன்னம், நீர் எரிச்சல் குணமாகும்.
பனங் கிழங்கை உலர்த்திப் பொடித்து, தேங்காய்ப் பால், உப்புச் சேர்த்து உண்டு வந்தால், உடல் வலுவாகும். பனங் கிழங்கை அவித்து, தோல், நரம்புகளை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி, உலர்த்திப் பொடியாக்கி, பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், கரப்பான், தோல் அரிப்பு, சீதக்கழிச்சல் ஆகியன குணமாகும்.
நுங்கை அரைத்து உடல் முழுதும் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால், வெய்யில் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.
பனை வெல்லம், உடல் வெப்பம் மற்றும் பித்தம் தணிக்கும். பனம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், கண் நோய்கள் அனைத்தும் நீங்கி, பார்வை பலம்பெறும். பனை ஓலையைக் கருக்கி, தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவினால், ஆறாத புண்களும் ஆறும்.
புதுச் சட்டியில் 10 கிராம் மிளகு மற்றும் 5 கிராம் சீரகத்தை லேசாக வறுத்து, அரை லிட்டர் நீரிலிட்டு, 125 மி.லி. வரும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டி, பசும்பால், பனங் கற்கண்டைக் கலந்து குடித்து வந்தால், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.
இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



