கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021
பயறு வகைகளில் அதிகளவில் சத்து மதிப்பு இருப்பதால் சீரான உணவில் அதிக முக்கியத்துவம் வகிக்கின்றன. பயறுவகைப் பயிர்களை நாற்பதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றில், ஹெலிகோவர்பா ஆர்மிஜரா என்னும் காய்த்துளைப்பான், அதிகளவில் சேதத்தையும் மகசூல் இழப்பையும் ஏற்படுத்துகிறது.
காய்த்துளைப்பான் உருவாகக் காரணமாக இருக்கும் அந்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவும் பெரோமோன் என்னும் இனக்கவர்ச்சிப் பொறி, பூச்சி நிர்வாகத்தில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் முன்கணிப்புக்கான சிறந்த கருவியாகப் பயன்படுகிறது.
ஆராய்ச்சி முறை
புதுக்கோட்டை மாவட்டம், வம்பனில் உள்ள தேசிய பயறுவகை ஆராய்ச்சிப் பண்ணையில் கள சோதனைகள் நடத்தப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் பயறுவகைப் பயிர்கள் மிகுதியாக விளையும் பகுதி என்பதால், இந்த மையம் ஆராய்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
வம்பனில் துவரை பயிரிடப்பட்டிருந்த நிலத்தில் பூச்சிகளின் ஊடுருவலைக் கண்காணிக்க, ஹெக்ஸாடெகானோலால் உருவாக்கப்பட்ட ஹெலிலூர் பொருத்தப்பட்ட, பத்து பச்சைநிறப் புனல் இனக்கவர்ச்சிப் பொறிகள் நிறுவப்பட்டன.
வாரந்தோறும் இந்த இனக்கவர்ச்சிப் பொறிகளில் பிடிபட்ட அந்துப் பூச்சிகளின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது. வானிலை அளவுருக்கள் மற்றும் ஹெலிகோவர்பா ஆர்மிஜரா அந்துப் பூச்சிகளின் வாராந்திர சராசரி மதிப்புகள் இடையே எளிய தொடர்பு உருவாக்கப்பட்டது.
முடிவுகள்
ஹெலிகோவர்பா ஆர்மிஜரா அந்துப் பூச்சியின் பருவகால நிகழ்வுகள் வானிலை அளவுருக்களைப் பொறுத்தே அமையும் என்று முடிவுகள் சுட்டிக் காட்டின. அதிகளவு வெப்பநிலை, குறைந்தளவு வெப்பநிலை, காற்றின் வேகம், மழைப்பொழிவு மற்றும் மழை நாட்களுடன் அந்துப் பூச்சிகளின் பருவகால நிகழ்வுகள் மிகவும் குறிப்பிடத்தக்க எதிர்மறை தொடர்புகளைக் கொண்டிருந்தன. காற்றின் ஈரப்பதத்துடன் மிகவும் குறிப்பிடத்தக்க நேர்மறை தொடர்பு காணப்பட்டது.
முடிவுரை
இனக்கவர்ச்சிப் பொறிகளில் பிடிபடும் ஹெலிகோவர்பா ஆர்மிஜரா அந்துப் பூச்சிகளின் எண்ணிக்கை மீது வானிலை அளவுருக்களின் இணை உறவை அறிவது, பயிர்ப் பாதுகாப்புத் திட்டங்களைச் சரியான நேரத்தில் முன்கூட்டியே கணிப்பதற்கு உதவியாக இருக்கும்.

ச.லேகா பிரியங்கா, தி.சர்மிதா, இ.பத்மஸ்ரீ, உ.பிரிதிவிராஜ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்-641003.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



