ஒரு பயிரின் மகசூல் போக, மீதமுள்ள பயிரின் பாகங்கள் பயிர்க் கழிவுகள் (Crop Residue) எனப்படும். நெல் வைக்கோல், மக்காச்சோளத் தட்டை, கரும்புத்தோகை, தென்னை மட்டை என்று, அனைத்துப் பயிர்களிலும் கழிவுகள் உண்டு. பெரும்பாலான விவசாயிகள் இந்தக் கழிவுகளை, நிலத்திலேயே எரித்து விடுகின்றனர். இதனால், மண்வளம் பாதிக்கப்படுவதோடு, காற்று மாசும் ஏற்படுகிறது.
பயிர்க் கழிவுகள் (Crop Residue)
உண்மையில் பயிர்க் கழிவுகள் என்பவை வீணானவை அல்ல. அவற்றைச் சரியாக மேலாண்மை செய்தால், மண்ணுக்கு உரமாகவும், கால்நடைக்குத் தீவனமாகவும் மற்றும் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் தரக்கூடிய மதிப்புமிக்க வளமாகவும் பயன்படுத்தலாம்.
நிலத்திலே எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
மண்ணில் உள்ள கரிமப் பொருள்களின் அளவு குறையும்.
நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அழியும்.
காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களின் அளவு கூடும். இதனால், காற்றும் சுற்றுச்சூழலும் மாசுபடும்.
பயிர்க் கழிவுகளை மதிப்புமிக்க வளமாக மாற்றும் வழிகள்
மண்புழு உரம் தயாரித்தல்: பயிர்க் கழிவுகளைச் (Crop Residue) சேகரித்துச் சிறு துண்டுகளாக நறுக்கி, அவற்றின் மேல் பசுமாட்டுச் சாணக் கரைசலைத் தெளித்து விட வேண்டும். இதனால், இரண்டு வாரங்களில் இந்தக் கழிவுகள் மட்கி, பாதியாகக் குறைந்து விடும். இதன்பின், மண் புழுக்களை இந்தக் கழிவில் விட்டு, தினமும் நீரைத் தெளித்து வந்தால், இரண்டு மாதங்களில் இந்தக் கழிவு சத்தான மண்புழு உரமாக மாறி விடும். இதைச் சத்துமிகு உரமாகப் பயிர்களுக்கு இடலாம்.
பயிர்க் கழிவுகளை நிலத்திலேயே விட்டு விடுதல்: அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் பயிர்க் கழிவுகளை நிலத்திலேயே பரப்பி விட வேண்டும். இப்படிச் செய்தால், அந்தக் கழிவுகள் நிலத்திலேயே மட்கி உரமாக மாறும். அதோடு, களைகள் வளர்வதையும் தடுக்கும். இதனால், அடுத்து இடப்படும் பயிர்கள், களைகளின் போட்டியின்றி வளரும். மண்ணில் ஈரப்பதம் காக்கப்படும், மண்ணரிப்புத் தடுக்கப்படும்.
கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்துதல்: அறுவடைக்குப் பிறகு கிடைக்கும் பயிர்க் கழிவுகளைச் (Crop Residue) சரியான முறையில் பதப்படுத்தி, சத்துமிக்க தீவனமாக அவற்றின் தரத்தை மேம்படுத்தி, கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
உயிரி எரிபொருள் தயாரித்தல்: தேவையற்ற பயிர்க் கழிவுகளைப் பயன்படுத்தி, உயிரி எரிபொருளைத் தயாரிக்கலாம். இதனால், எரிபொருள் செலவு குறைவதோடு, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.
காளான் வளர்ப்பில் பயன்படுத்துதல்: நெல் வைக்கோல், கோதுமை வைக்கோல், சோளத்தட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி, காளான் இனங்களை வளர்க்கலாம். இதனால், கழிவுகள் வீணாவதைத் தடுக்கலாம். காளான் வளர்ப்பினால் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
உரம் தயாரித்தல்: பயிர்க் கழிவுகள் மற்றும் பண்ணையின் பிற கழிவுகளை வீணாக்காமல் உரமாக மாற்றிப் பயன்படுத்தலாம். கழிவுகளை (Crop Residue) ஒரே இடத்தில் குவித்து வைத்து, யூரியா அல்லது பசுமாட்டின் சாணக் கரைசல் அல்லது நுண்ணுயிரிகள் மூலம், அவற்றை நன்கு மட்கச் செய்து, இயற்கை முறையில் உரமாக மாற்றலாம். இதனால், மண்வளம் மேம்படும் மற்றும் மண்ணின் கரிமப் பொருள்கள் அதிகரிக்கும்.
மதிப்புக்கூட்டுப் பொருள்களைத் தயாரித்தல்: இன்றைய நவீனத் தொழில் நுட்பங்கள் மூலம், பயிர்க் கழிவுகளைப் பயனுள்ள பொருள்களாக மாற்றிப் பயன்படுத்தலாம்.
இப்படி, பயிர்க் கழிவுகள் (Crop Residue) மற்றும் பண்ணைக் கழிவுகளை வீணாக்காமல், நிலத்தில் எரிக்காமல், அவற்றை மறுசுழற்சி செய்து மண்ணுக்கு உரமாக, கால்நடைத் தீவனமாக அல்லது வருமானம் தரக்கூடிய பொருளாக மாற்றி விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு நல்ல இலாபம் கிடைக்கும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

முனைவர் ர.இராஜபிரியா,
உதவிப் பேராசிரியை, உழவியல் துறை, ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர். ச.பிரணவ மாரிமுத்து, முதுநிலை அறிவியல் முதலாண்டு மாணவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்பத்தூர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.


