பொதுவாக, வெள்ளாடுகளில் வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் சற்றுக் குறைவாகவே இருக்கும். ஆனால், செம்மறியாடுகளில் உடல் ரோமங்கள் அதிகமாக இருப்பதால் அவற்றில் வெப்ப அயர்ச்சியால் ஏற்படும் விளைவுகள் அதிகமாக இருக்கும்.
கோடை வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, ஆடுகளைக் காலை 6 மணி முதல் 11 மணி வரை மேய்ச்சலுக்கு விடலாம். அதேபோன்று மாலை 3 மணி முதல் 6.30 மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம். ஒரே பகுதியில் மேய்க்காமல் சுழற்சி முறையில் இடம் மாற்றி மேய்க்க வேண்டும். இப்படி மேய்ப்பதன் மூலம், ஆடுகள் புற்களைத் தேடுவதற்காகச் செலவிடும் நேரம், உடல் ஆற்றல் செலவு ஆகியன குறைவதோடு, மேய்ச்சல் தன்மையும் அதிகரிக்கும்.
பருவமழைக் காலத்தில் பசுந்தீவனம் அதிகமாக இருக்கும் போது, அவற்றை ஊறுகாய்த் தீவனமாக மாற்றிச் சேமித்து வைத்து, கோடையில் ஆடுகளுக்கு உணவாக அளிக்கலாம். தற்போது ஊறுகாய்ப்புல் தயாரிக்கத் தேவையான பைகள் கிடைக்கின்றன.
காய்ந்த மேய்ச்சல் நிலமுள்ள பகுதிகளில், வேளாண் உபரிப் பொருள்கள் அல்லது மர இலை அல்லது புண்ணாக்கைத் தீவனமாக அளிக்கலாம். பால் கொடுக்கும் ஆடுகளுக்குத் தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துகளைச் சத்தூட்டியாக அளிக்கலாம். உப்புக் கட்டிகளைப் பட்டிகளில் கட்டி விட்டு, தேவையான தாதுப்புச் சத்துகளை ஆடுகளுக்கு வழங்கலாம்.
சரியாகத் தீவனம் எடுக்காததால் ஏற்படும் சத்துக்குறையைப் போக்கவும், வளர்சிதை வெப்ப உற்பத்தியைக் குறைக்கவும் கொழுப்புச் செறிவூட்டம் செய்யப்பட்ட தீவனங்களை அளிக்கலாம்.
உயர்வளி ஏற்றத்தால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க, வைட்டமின் ஏ, இ, சி ஆகியவற்றை அளிக்கலாம். வைட்டமின் இ 50 மி.கி./ ஒரு கிலோ எடை, செலினியம் அட 3 மி.கி./ ஒரு கிலோ எடை என்னுமளவில் கொடுப்பதன் மூலம், வெய்யில் காலத்தில் செம்மறி ஆடுகளில் இனப்பெருக்கத் திறனை அதிகரிக்கச் செய்யலாம்.
மரத்தீவனம்: கொடுக்காய்ப்புளி, வாகை, வேம்பு, கருவேல், சூபாபுல், மா, பலா, ஆல், அகத்தி, அரசு போன்ற மரங்களின் தழைகள், ஆடுகளுக்குச் சிறந்த உணவாகும். கிராமங்களில் கோடையில் அதிகமாகக் கிடைக்கும் வெல்வேல் மற்றும் கருவேல் உலர் காய்கள், ஆடுகளுக்கு மிகச் சிறந்த புரதச்சத்து உணவாகும்.
குடிநீர்: தினமும் ஒரு ஆடு 8-12 லிட்டர் நீரை அருந்தும். கோடையில் அதிக வெப்பநிலை நிலவுவதால், மேய்ச்சல் பகுதியில் சுத்தமான குடிநீர் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குடிநீர்த் தொட்டிகள் இருக்க வேண்டும். ஆடுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் குடிநீர் அருந்தாது, எனவே, ஒரு ஆட்டுக்கு 5 செ.மீ. வீதம் குடிநீர்த் தொட்டியின் அகலம் இருக்க வேண்டும். 50 செ.மீ. நீளம், ஒரு அடி ஆழம் மற்றும் 50 செ.மீ. அகலமுள்ள குடிநீர்த் தொட்டியின் மூலம் பத்து ஆடுகளை நீர் அருந்தச் செய்யலாம்.
கோடையில் வெப்பத் தாக்கம் அதிகமாக இருக்கும் நாட்களில், கொட்டகையின் மேற்கூரையில் வைக்கோல் அல்லது தென்னங்கீற்றைப் பரப்பி, நீரைத் தெளிக்க வேண்டும். இதனால், வெப்பத் தாக்கம் குறைந்து, இறப்பு, வளர்ச்சிக் குறைவு போன்றவற்றைத் தவிர்க்க முடியும்.
ஆடுகளை நீக்கல்: தீவனம் மற்றும் மேய்ச்சல் நிலத்தின் இருப்புக்கு ஏற்ப, ஆடுகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். இதன் மூலம், அதிகப்படியான பராமரிப்புச் செலவை மிச்சப்படுத்தலாம். அதிகப்படியான ஆடுகள், உற்பத்தித் திறன் குறைந்த ஆடுகள், நெடுநாள் நோயுற்ற ஆடுகள், பால் திறனற்ற ஆடுகள், பல நாள்கள் கருவுறா ஆடுகள், வளர்ச்சிக் குன்றிய ஆடுகள், தீய பழக்கம் உள்ள ஆடுகள் மற்றும் காலில் குறையுள்ள ஆடுகளைப் பண்ணையிலிருந்து நீக்கலாம்.
உடல் நலம் பேணுதல்: ஆடுகளைத் தாக்கும் அம்மை, தொண்டை அடைப்பான் நோய், கோமாரி நோய், ஆட்டுக்கொல்லி நோய் ஆகியவற்றைத் தடுப்பதற்கு, முறையான தடுப்பூசிகளைத் தக்க காலத்தில் போட வேண்டும்.
கால்நடைப் பராமரிப்புத்துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



