வியர்வைச் சுரப்பிகள் இல்லாத பன்றிகள், கோடைக்கால வெப்பத் தாக்கத்தால் மிகுந்த பாதிப்பை அடையும். அதிக உடல் எடையுள்ள பன்றிகள் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் பன்றிகள், வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் அசதி நிலைக்கு உட்படும். ஏனெனில், உடல் சத்துகள், பன்றிகளின் வெப்ப நிலையை, சூழ்நிலை வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்ற அனுமதிப்பதில்லை. இதனால், தினமும் சுமார் ஒரு கிலோ வீதம் உடல் எடை குறையும்.
பொதுவாகச் சூழ்நிலை வெப்பநிலை, 30 டிகிரி செல்சியஸ் மற்றும் காற்றின் ஈரப்பதம் 50 விழுக்காடு இருக்கும் போது, பன்றிகளின் உடல்நிலை, சரியான அளவான 38.7- 39 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையைப் பராமரிக்க முடியாமல் போய்விடும். இனி, கோடைக்கால வெப்ப அயர்ச்சியால் பன்றிகளில் ஏற்படும் அறிகுறிகளை இங்கே பார்க்கலாம்.
குறைந்த வெப்ப நிலையில்: பன்றிகள் மற்றும் பன்றிக் குட்டிகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் படுத்துக் கொண்டிருக்கும். உடல் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் இருக்கும். அதிகமாக உண்ணும்.
சரியான வெப்ப நிலையில்: மற்ற பன்றிகளோடு முறையாகச் சேர்ந்திருக்கும். உடல் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் இருக்கும். சரியான அளவில் உண்ணும்.
அதிக வெப்ப நிலையில்: தனித்தனியே காணப்படும். அதிக நேரம் தரையில் படுத்துக் கொண்டிருக்கும். வெப்பநிலை அதிகரித்து, சுவாசநிலை நிமிடத்துக்கு -50 என்னுமளவில் காணப்படும்.
மிக அதிக வெப்ப நிலையில்: உடல் நிலை மிகவும் மோசமாகி, உடல் வெப்பம் சுமார் 43 டிகிரி செல்சியஸ் என்னும் நிலையில் இறந்து விடும். அப்போது சுவாச நிலை, நிமிடத்துக்கு -180 என்னுமளவில் இருக்கும்.
எனவே, பன்றிகள் குளிப்பதற்குக் குளியல் தொட்டியைக் கட்ட வேண்டும். இந்தத் தொட்டி 20 அடி நீளம், 15 அடி அகலம், 3 அடி உயரத்தில் 1.5 அடி சிமெண்ட் சுவராகவும், மீதமுள்ள 1.5 அடி, கம்பி அமைப்பைக் கொண்டதாகவும் இருக்கலாம்.
பன்றிகள் ஏறி இறங்குவதற்கு ஏதுவான சாய்தளத்தைத் தொட்டியின் முன் பகுதியில் அமைக்க வேண்டும். தொட்டியின் முன்பகுதி 14 அங்குலம் உயரத்திலும், அதன் பின்பகுதி படிப்படியாக உயர்ந்து 18 அங்குல உயரத்திலும் இருக்க வேண்டும். எந்த நேரமும் நீர் இருக்கும் வகையில் குளியல் தொட்டியை வடிவமைக்க வேண்டும்.
கால்நடைப் பராமரிப்புத்துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



