கோடைக்காலத்தில் அதிகளவில் வெப்பத் தாக்கத்துக்கு உள்ளாகும் கோழிகள், வெப்ப அயர்ச்சியால் பாதிக்கப்படும். பகலில் உண்பதும் குறைவதால் உடல் எடையும் குறையும். எனவே, கோழிகளுக்கு உச்சி வெய்யில் நேரத்தில் தீவனத்தை அளிக்கக் கூடாது. இரவிலும், விடியற் காலையிலும், விளக்கொளியிலும் தீவனத்தை அளிக்க வேண்டும். அதாவது, வெய்யில் குறைந்த நேரத்தில் கோழிகள் நான்றாகத் தீவனத்தை எடுத்துக் கொள்ளும்,
வெய்யில் காலத்தில் கோழிகள் குடிநீர்த் தொட்டியைச் சுற்றி அல்லது தனித்தனியாக அமர்ந்து கொள்ளும். தரையில் போடப்பட்டுள்ள ஆழ்கூளத்தில் உடம்பைப் புதைத்துக் கொள்ளும். வாயைத் திறந்து வேக வேகமாக மூச்சு விடும். உடல் வெப்ப மிகுதியால் இதயத் துடிப்பும் அதிகமாகும். கழிக்கும் எச்சம் நீராக இருக்கும். நரம்புத் தளர்ச்சி ஏற்படும். இறுதியாக மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் வெப்பம் மிகுவதால் இறப்பு விகிதம் கூடும்.
ஈரமான எச்சத்தால் கூளம் கட்டியாகிப் போனால், அதுவே அதிக வெப்பம் உண்டாகக் காரணமாகி விடும். கோடையில் கோழிகளுக்கு வழக்கத்தை விட அதிக இட வசதியை அளிக்க வேண்டும். நூறு கோழிகளை வளர்க்கும் இடத்தில் எண்பது கோழிகளை மட்டுமே வளர்க்க வேண்டும். அதாவது, 20 விழுக்காடு கோழிகளைக் குறைத்து விட வேண்டும்.
ஒரு கோழிக்கு 10 மி.கி. வைட்டமின் சி வீதம் குடிநீரில் கலந்து கொடுத்து வந்தால், கோழிகளுக்கு ஏற்படும் அயர்ச்சியை ஓரளவு குறைக்கலாம். மேலும், அயர்ச்சியை நீக்கும் பி.காம்ப்ளெக்ஸ் வைட்டமின், குளுக்கோஸ் போன்றவற்றைக் கலந்து தரலாம்.
கோடையின் தாக்கம் அதிகமாக உள்ள இடங்களில் கோழி வீட்டின் உயரம் அதிகமாக இருக்க வேண்டும். ஓலைக்கூரையின் மத்திய உயரம் 12 அடியாகவும், ஆஸ்பெஸ்டாஸ், மங்களூர் ஓட்டுக் கூரைகளின் மத்திய உயரம் குறைந்தது 15 அடியாகவும் இருக்க வேண்டும். அகலம் 24 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
குறுகிய காலப் பயன்பாடு போன்ற சிரமங்கள் இருந்தாலும், கோடை வெய்யிலுக்கு ஓலைக்கூரை அல்லது கை ஓடுகள் என்னும் நாட்டு ஓடுகளாலான கூரையே மிகவும் சிறந்தது. எனினும் இப்போது ஜி.ஐ.தகடுகள் எனப்படும் துத்தநாகம் பூசப்பட்ட இரும்புத் தகடுகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
கோடையில் கோழிகள் மற்றும் கால்நடைகளை, அதிகாலை அல்லது மாலை அல்லது இரவு நேரத்தில் இடமாற்றம் செய்வதே சிறந்தது.
கோழிகள் மற்றும் கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது, ஓய்வெடுக்கும் இடம் நீர் மற்றும் நிழலுள்ளதாக இருக்க வேண்டும்.
அப்போது, வாகனத்தை நிழலில், காற்றின் திசைக்கு எதிராக நிறுத்த வேண்டும். இதன் மூலம் கால்நடைகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். மேலும், வாகனத்தினுள் வெப்பம் மிகுவதைத் தடுக்க, மிகக் குறைந்த நேரமே, ஓய்விடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டும்.
கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு இடையில் நல்ல காற்றோட்டத்தை உறுதிப்படுத்த, வாகனத்தின் கொள்ளளவில் 85 விழுக்காடு மட்டுமே அவற்றை ஏற்ற வேண்டும்.
இதுவரை குறிப்பிடப்பட்ட மேலாண்மை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உயர் வெப்ப அயர்ச்சியால் கோழிகள் மற்றும் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம். வெப்ப அயர்ச்சியைப் பற்றிய விழிப்புணர்வு தான், கால்நடைகளில் வெப்ப அழுத்த மேலாண்மையின் முதற்படி ஆகும்.
கால்நடைப் பராமரிப்புத்துறை.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



