உலகளவில் மண்ணில் மிகக் குறைவாகக் காணப்படும் நுண்சத்து துத்தநாகம் ஆகும். ஆய்வுகளின்படி, உலகளவில் 49 சதவீத விளை நிலங்களில் துத்தநாகம் போதியளவில் இல்லை. இதனால், உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தக் குறையால், பல மில்லியன் எக்டர் விவசாய நிலங்கள் மட்டுமின்றி, மனித நலம் மற்றும் விவசாய உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. துத்தநாகக் குறையுள்ள வயல்களில், தானிய மகசூல் 80 சதவீதம் வரை குறையக் கூடும்.
பயிர்களின் சிறப்பான வளர்ச்சி, ஒளிச்சேர்க்கை மற்றும் அதிக மகசூலுக்குத் துத்தநாகம் மிகவும் அவசியம். இது, தாவரங்களில் ஹார்மோன் ஒழுங்கு முறை, நொதிகள் சரியாகச் செயல்படுதல், புரதத் தொகுப்பு உள்ளிட்ட முக்கியச் செல்களை இயக்க உதவும் மிக முக்கிய நுண் சத்தாகும். மேலும், பச்சைய உற்பத்திக்கு, சர்க்கரை வளர்சிதை மாற்றத்தை எளிதாக்க, வலுவான வேர்கள் மற்றும் விதைகளை உருவாக்க இச்சத்து அவசியமாகும்.
தாவரங்களில் துத்தநாகத்தின் முக்கியச் செயல்பாடுகள்
துத்தநாகம், 300-க்கும் மேற்பட்ட நொதிகளுக்கு முக்கிய இணைக் காரணியாகச் செயல்பட்டு, அவசியமான உயிர் வேதியியல் வழித்தடங்களை இயக்குவதுடன், கட்டமைப்புப் புரதங்களை நிலைப்படுத்துகிறது.
அத்தியாவசிய வளர்ச்சி ஹார்மோனாகிய ஆக்ஸின் உற்பத்திக்குப் பெரிதும் உதவுகிறது. தண்டு நீட்சி மற்றும் இலை வளர்ச்சியைச் செம்மை செய்கிறது. தாவர வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்களை முறைப்படுத்துகிறது. நெல் போன்ற பயிர்கள் அதிகளவில் தூர்க் கட்டுவதற்குப் பெரிதும் உதவுகிறது.
பயிர்கள், சூரியவொளி மூலம் உணவைத் தயாரிப்பதற்கான பச்சையம் உருவாக உதவுகிறது. திறம்பட ஒளியை உறிஞ்சுதல் மற்றும் ஆற்றல் மாற்றத்துக்குத் தேவையான கார்போனிக் அன்ஹைட்ரேஸ் போன்ற நொதிகளின் செயலை ஒழுங்குபடுத்துகிறது.
ஆர்.என்.ஏ. பாலிமரேஸ் என்னும் நொதியைத் துத்தநாகம் இயக்குகிறது. இந்த நொதி, ஆர்.என்.ஏ. தொகுப்புக்கும், அதைத் தொடர்ந்து புரத வளர்ச்சிக்கும் அவசியம்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வறட்சி, வெப்ப அழுத்தம் மற்றும் நோய்த் தொற்றுகளில் இருந்து பயிர்களைப் பாதுகாக்கிறது.
பூக்கள் உருவாகவும், மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெற்று, தரமான விதைகள் உருவாகவும் துணை புரிகிறது. மகரந்தத்தின் வாழும் திறன் மற்றும் ஒட்டுமொத்தப் பயிர் கருவுறுதலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
துத்தநாகக் குறையின் அறிகுறிகள்
தாவரத் திசுக்களில் துத்தநாகம் எளிதில் நகர முடியாது என்பதால், அதன் குறைபாட்டு அறிகுறிகள் முதலில் இளம் இலைகளில் தென்படும். மேலும், வளர்ச்சிக் குன்றுதல், கணுவிடைப் பகுதிகள் குட்டையாதல், நரம்புகளுக்கு இடையில் மஞ்சள் நிறமாதல் போன்ற அறிகுறிகளும் வெளிப்படும்.
இலை நரம்புகளுக்கு இடையேயுள்ள திசுக்கள் மஞ்சள் நிறமாக மாறும். அதே சமயம் நரம்புகள் பச்சை நிறமாகவே இருக்கும்.
பயிர்களின் வளர்ச்சிக் குன்றுவதுடன், புதிய இலைகள் குறிப்பிடத்தக்க அளவில் சிறுத்தும், குறுகலாகவும், கிளைகளின் நுனிகளில் அடர்த்தியாகவும் கொத்தாகவும் காணப்படும்.
நெல், சோளம் போன்ற பயிர்களின் இளம் இலைகளின் நடுப்பகுதி வெளிரும். அல்லது வெண்ணிறக் கோடுகளாக மாறும்.
மக்காச்சோளம் போன்ற பயிர்களில், இளம் இலைகளின் நடு நரம்பில் தனித்துவமான வெளிர் அல்லது வெளுத்த வெண்ணிறப் பட்டைகள் தோன்றும்.
காரத்தன்மை 6.5-7.0-க்கு மேலுள்ள மண்ணில், துத்தநாகம் கிடைக்கும் தன்மை பெருமளவில் குறையும்.
மண்ணிலுள்ள அதிகப்படியான பாஸ்பரஸ், துத்தநாகத்துடன் போட்டியிட்டு, அதைத் தாவரங்கள் உறிஞ்சுவதைத் தடுக்கும்.
ஈரமான அல்லது இறுக்கமான மண்ணில் வேர் வளர்ச்சியானது தடைபடுவதால், நுண் சத்துகள் தீவிரமாக உறிஞ்சப்படுவது நின்று விடும்.
மணல் கலந்த அல்லது அதிகளவில் சிதைந்த மண்ணில், துத்தநாகம் போன்ற நுண் சத்துகள் இயற்கையாகவே குறைவாக இருக்கும்.
நெற்பயிரில் துத்தநாகக் குறையைத் தடுக்கும் முறைகள்
துத்தநாக சல்பேட் அல்லது செலேட்டட் வகை ஜிங்க் உரங்களை வயலில் இட்டு வேர்கள் மூலம் கிடைக்கச் செய்யலாம். அல்லது பயிர்களில் தெளிக்கலாம். ஜிங்க் சல்பேட் என்பது, பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான துத்தநாகம் மற்றும் சல்பர் சத்தை வழங்கும் முக்கிய நுண்ணுரம் ஆகும்.
துத்தநாகச் சத்தைத் திறம்பட உறிஞ்சும் நெல் இரகங்களைப் பயிரிடவும். இருப்பிலுள்ள இரகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், விவசாயிகள் அவரவர் பகுதியில் உள்ள வேளாண்மை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இலைகளில் தெளிக்கப்படும் செலேட்டட் துத்தநாகம் அல்லது துத்தநாக சல்பேட் கரைசலை, பயிர்கள் நேரடியாக உறிஞ்சிக் கொள்வதால், இந்தக் கரைசலைத் தெளிப்பு முறையில் கொடுத்தால், விரைவாக நிவாரணம் கிடைக்கும்.
நீண்டகாலச் சீரமைப்புக்கு, துத்தநாக சல்பேட் அல்லது துத்தநாக ஆக்சைடை, கரிமப் பொருள்களுடன் சேர்த்து நிலத்தில் இட வேண்டும்.
பாஸ்பரஸ் மிகுந்த உரங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. மேலும், மண்ணின் பாஸ்பரஸ் – துத்தநாக விகிதத்தைக் கண்காணிக்க வேண்டும்.
யூரியாவுக்குப் பதிலாக, அம்மோனியம் சல்பேட் போன்ற அமிலத் தன்மையை உருவாக்கும் உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
கார மண்ணில் உள்ள பயிர்களுக்குத் துத்தநாகம் எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய, மண்ணின் பி.எச். அளவைப் படிப்படியாகக் குறைக்கலாம்.
மட்கிய உரம் மற்றும் பிற கரிமக் கழிவுகளை இட்டு, மண்ணின் கட்டமைப்பு மற்றும் நுண்ணுயிரிகளின் செயலை மேம்படுத்தினால், பயிர்களுக்குப் போதியளவில் துத்தநாகம் கிடைக்கும்.
எனவே, நாற்றங்காலில் அல்லது சாகுபடி நிலத்தில், விதைகளை அல்லது நாற்றுகளை நடுவதற்குச் சில நாட்களுக்கு முன்பே இயற்கை உரங்களை இட்டுவிட வேண்டும்.
ஆண்டுக்கு மூன்று முறை பயிரிடப்படும் நிலங்களில் நீர்த் தேங்குமானால், அதை அவ்வப்போது வெளியேற்றி நிலத்தைக் காயவிட வேண்டும்.
நாற்றங்காலில் துத்தநாக சல்பேட்டைச் சீராக இட வேண்டும். நடவுக்கு முன், ஒரு லிட்டர் நீருக்கு 20-40 கிராம் ஜிங்க் சல்பேட் வீதம் கலந்த கரைசலில், விதைகளை அல்லது நாற்றுகளை ஊற வைக்க வேண்டும்.
அடியுரமாகப் பயன்படுத்த, ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் வீதம் தேவைப்படும். இதை, பொலபொலப்பான நிலத்து மண்ணுடன் கலந்து இட வேண்டும்.
இலைகளில் குறைபாடு தென்பட்டால், ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் ஜிங்க் சல்பேட் வீதம் கலந்த கரைசலை, இலைவழி உரமாக, 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இதற்கு, ஏக்கருக்கு ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்,, 200 லிட்டர் நீர் வீதம் எடுத்து, கலவையைத் தயாரிக்க வேண்டும்.
துத்தநாகப் பற்றாக்குறையைச் சரி செய்வதன் மூலம், பயிர்களின் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் பூக்கும் திறன் அதிகமாகும். மகசூல், 15 முதல் 40 சதம் வரை உயரும்.

கா.அரிபுத்திரன்,
வேளாண்மை அலுவலர், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், விருதுநகர்.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



