முயல் மசால் மானாவாரியில் வளரக்கூடிய சிறந்த தீவனப் பயிராகும். ஆண்டுக்கு 450-850 மி.மீ. மழை பெய்யும் பகுதிகளில் நன்றாக வளரும். இதில், எவ்வித நச்சுத் தன்மையும் இல்லை. இதைக் கொழுக்கட்டைப் புல்லுடன் 1:3 என்னும் விகிதத்தில் மானாவாரியில் பயிர் செய்யலாம்.
முதலாண்டில் வளர்ச்சிக் குறைவாக இருப்பதால் மகசூலும் குறைவாக இருக்கும். இது, நன்கு வளர்ந்து விதைகளை உற்பத்திச் செய்யும் போது மகசூல் அதிகமாகக் கிடைக்கும். இந்த முயல் மசாலில் 15-18 சதம் புரதம் உள்ளது.
முயல் மசால் எல்லா மண் வகைகளிலும் நன்றாக வளரும். வைகாசி ஆனி ஆகிய மாதங்களில் பயிரிடலாம். இதை 30×15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். இப்படித் தனிப் பயிராக வரிசையில் விதைக்க, எக்டருக்கு 10 கிலோ விதைகள், கலப்புப் பயிராக விதைக்க, 2-3 கிலோ விதைகள் தேவைப்படும்.
விதைப்பதற்கு முன் நிலத்தை நன்கு பண்படுத்தி, எக்டருக்கு 10 டன் தொழுவுரம், 20 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 15 கிலோ சாம்பல் சத்து ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்.
விதைத்து 75 நாட்களில் முதல் அறுவடையை மேற்கொள்ளலாம். அடுத்து, 40-45 நாட்களுக்கு ஒருமுறை என, ஓராண்டில் 7-8 அறுவடைகளைச் செய்யலாம். இதைத் தனிப்பயிராக இடும் போது ஓராண்டில் 30-35 டன் தீவனம் கிடைக்கும்.
கொ.ஆ.தொரைசாமி,
மு.வீரசெல்வெம், ப.செந்தில்குமார், நா.ஸ்ரீபாலாஜி.
Discover more from பச்சை பூமி
Subscribe to get the latest posts sent to your email.



